பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

55

மானவேல், செம்மணி மாணிக்கம் கிடந்த திசையிலுள்ள ஒரு கிளையில் ஊர்ந்தான். மாணிக்கத்துக்கு நேர் மேலே சென்றதும், இலத்தியை அதற்கு நேராகப் போட்டான்.

ஒரு கணத்தில் ஒளி மறைந்தது. இருள் சூழ்ந்தது. இளவரசன் தான் பற்றிய கிளையில் ஊர்ந்து சரேலென்று தன் இடம் வந்தான். வான்மதி அவனை எதிர்நோக்கியிருந்து, அவனை உடனே கிளையுடன் சேர்த்துப் பரபரவென்று கட்டினான்.

இதற்குள், மீண்டும் பேரரவம் கேட்டது. இத் தடவை அது செம்பாம்பின் சீறிய வரவு குறித்தது. அது மரத்தை விரைந்து விரைந்து சுற்றிற்று. ஆனால், செம்மணி கிடந்த இடத்தருகே கூட அது செல்லவில்லை. அதைச் சுற்றி நாற்புறமும் வந்துவந்து மீண்டது.

மானவேல் எதிர்பார்த்தபடி, இலத்தியின் வாடை செந்நாகத்துக்கு ஒரு பெருந்தடையாயிற்று. அது செம்மணியை மீண்டும் பெறமுடியாமலே தலையை மண்ணில் அறைந்தறைந்து உயிர் விட்டது.

காலை வரை நண்பர் இருவரும் மரத்திலேயே இருந்தனர். பொழுது புலர்ந்தவுடன் சிவந்த நாகத்தின் உடல் மரத்தடியில் அசையாது கிடப்பது கண்டனர். அதன் தலை சிதறி நீலக் குருதி எங்கும் படிந்திருந்தது.

அவர்கள் மெல்ல இறங்கி வந்தார்கள்; முதலில் நாகத்தின் உடலை அவர்கள் ஆழ்குழி தோண்டிப் புதைத்தார்கள்; அதன்பின் அவர்கள் செம்மணி மாணிக்கத்தை எடுத்து நீரில் அலம்பினார்கள். பகலில்கூட அதன் செவ்வொளி நெடுந்தொலை ஒளி வீசிற்று. அது குளத்தின் நீல நீர்ப்பரப்பைக் கிழித்து, அதன் அடியிலுள்ள நுண்மணலைக் கூடத் தெளிவாகக் காட்டிற்று.

நீரின் அடித்தளத்தில் கண்ட காட்சி அவர்களுக்கு வியப்பளித்தது. அதில் பூம்பந்தர்கள்; மலர்ப் பண்ணைகள் அடங்கிய ஒரு பூங்காவே தெரிந்தது.

மானவேல், அதைப் பார்க்க விரும்பினான்; வான்மதியிடம் எதுவும் கூறாமலே, அவன் நீரில் செம்மணியுடன் குதித்தான்; வான்மதியும் உடனடியாக அவன் குதித்த இடத்திலேயே குதித்து, அவனைப் பின்பற்றி நீரில் மூழ்கினான்.