பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

137

ஜேஸன் இயோல்கஸ் என்ற நகரின் அரசனான ஐஸன் புதல்வன். ஐஸனின் உடன்பிறந்தானான பீலியஸ் அவன் மீது மிகவும் பொறாமை கொண்டவன். இவன், அண்ணனின் இளம் புதல்வனைக் கொன்று தானே அரசைக் கைக்கொள்ளச் சூழ்ச்சி செய்தான். இதை அறிந்த ஐஸன், தன் சிறு புதல்வனை யாருமறியாமல் சிரான் என்ற தன் நண்பனிடம் அனுப்புவித்தான். அண்ணனைச் சிறையில் அடைத்துவிட்டுத் தம்பி அரசைக் கைக் கொண்டு ஆண்டான்.

சிரான் பல ஆண்டுகள் ஜேஸனைத் தன் புதல்வன் போலப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தான். அரசுரிமைக்கு வேண்டிய எல்லாக் கலைகளையும் அவனே கற்பித்தான். ஜேஸன் கட்டிளைஞனாகி அரசுரிமைக்குரிய பருவத்தை அடைந்தான். அப்போது சிரான் அவனை அழைத்து, “மைந்தனே, உன் தந்தை இயோல்கஸ் நகரின் அரசர். உன் சிற்றப்பன் பீலியஸ் அவரை திர்த்து நாட்டைக் கைப்பற்றியிருக்கிறான். ஆனால், நீ இங்கு வளர்வது அவனுக்குத் தெரியாது. மக்கள் அவனை வெறுக்கிறார்கள். நீ இப்போது போனால், அவன் ஆட்சியை உன்னிடம் ஒப்படைத்துவிடுவான் என்றே நினைக்கிறேன். போய் அரசு கைக்கொண்டு ஆளுக, தெய்வங்கள் உன்னைக் காப்பாற் றட்டும்,” என்று வாழ்த்துக்கள் பலகூறி வழியனுப்பினான்.

ஜேஸன் இயோல்கஸ் செல்லும் வழியில் ஓர் ஆறு குறுக்கிட்டது. அதை அவன் கடக்க முனைந்தான். அச்சமயம் ஹீரா என்ற வானவர் பெருந்தேவி ஏலமாட்டாக் கிழவியுருக்கொண்டு, ஆற்றைக் கடக்கத் தனக்கு உதவும்படி மன்றாடினாள். இரக்க உள்ளங்கொண்ட ஜேஸன் அவ்வாறே செய்தான். ஆறு கடந்ததும் தேவி தன் உருக் காட்டி அவனை வாழ்த்திச் சென்றாள்.

சிரான் எதிர்பார்த்ததுபோல் பீலியஸ் அரசிருக்கையை எளிதில் விட்டுக்கொடுக்கவில்லை. எவராலும் செய்யமுடியாத ஏதேனும் ஓர் இடர்ப்பொறியான காரியத்தில் அவனை மாட்டி ஏமாற்றவே அவன் விரும்பினான். ஆகவே, “பொன்மறியின் கம்பிளியை என்னிடம் கொண்டுவந்து கொடு; நான் அதன்பின் அரசுரிமை தருகிறேன்,” என்றான்.