பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




160

அப்பாத்துரையம் 40

-

பல பெருமக்களும் பொதுமக்களும் திரண்டு வந்தனர். மிலானியன் முகத்திலிருந்த நம்பிக்கையொளி கண்டு யாவரும் வியந்தனர்.

அவன் நம்பிக்கை அட்லாண்டாவுக்குக்கூட வியப்பூட்டிற்று. அவள் முதல் தடவையாகத் தன்னுடன் போட்டியிடும் இளைஞனை நிமிர்ந்து பார்த்தாள். முதல் தடவையாகவே அவள் பந்தயத்தில் தனது தோல்வியில் சிறிது ஆர்வங்கொண்டாள். ஆனால்,பந்தயத்தில் இறங்கியபின் வழக்கமான போட்டியார்வம் இம்முதலுணர்ச்சியை மறக்கடித்தது.

கிளர்ச்சியுடன் மிலானியன் அட்லாண்டாவுக்கு இணையாக முதற்சுற்று முடிவு அணுகும்வரை ஓடினான். ஆனால் முடிவில் அட்லாண்டாவின் வலது கால் மிலானியனின் வலதுகாலைத் தாண்டி ஒரு அடி முன்செல்லத் தொடங்கிற்று. அச்சமயத்துக்கே காத்திருந்த மிலானியன் மடியிற் செருகி வைத்திருந்த பொற்பந்தில் ஒன்றை அவள்முன் உருட்டினான்.

பொற்பந்து அட்லாண்டாவின் கண்களை மருட்டிற்று.அது அஃவ்ரோடைட் இறைவியின் ஆடற்பந்து என்பதை அவள் அறிவாள். அருந்தவங்கிடந்தும் பெறற்கரிய அப்பந்து காலடியில் வந்து விழ, அதை அசட்டைசெய்து அப்பால் செல்ல அவள் மனம் ஒருப்படவில்லை. ஓட்டத்திலேயே சற்றுத் தயங்கினாள். பின், நின்று குனிந்து, அதை எடுத்துக்கொண்டு மீண்டும் ஓடினாள்.

இந்தச் சிறிதுநேர ஓய்வுக்குள், மிலானியன் சிறிது தொலை முன்சென்றிருந்தான். ஆனால், அட்லாண்டா இரண்டாம் சுற்றின் தொடக்கத்துக்குள் பழையபடி அவனை எட்டி வந்துவிட்டாள். அவள் தன்னம்பிக்கை பெரிதாயிற்று. இரண்டாம் சுற்றிலும் மூன்றாம் சுற்றிலும் மீண்டும் பொற்பந்தை எடுக்க அவளுக்கு அது துணிச்சல் தந்தது.

ஆனால், முதல் ரண்டு சுற்றிலும் பொற்பந்துகளை எடுக்கத் தங்கியதால், அட்லாண்டா முந்திக்கொள்ள முடியவில்லை. மூன்றாம் சுற்றிலோ அவள் பின்தங்கி விடவே நேர்ந்தது. அவள் பந்தை எடுத்துக்கொண்டு எட்டிப்பிடிக்கத் தொடங்குமுன், மிலானியன் இலக்கை எட்டிப்பிடித்துப் பந்தயத்தில் வெற்றிபெற்றான்.