பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

அப்பாத்துரையம் – 40

எனிட் இச்சொற்களைச் சொல்லி முடிப்பதற்குள் அவள் கைப்பட்டு எனிட் தலையணி தடாலென்று விழுந்தது. அவ் ஓசையால் அவன் விழித்துக் கொண்டான். விழிக்கும்போது அவள் கூறியவற்றிலுள்ள கடைசி வாசகம் அவன் காதில் விழுந்தது. முன்பின் தொடர்பில்லாமல் கேட்டதால் அஃது அவனுக்குத் தப்பெண்ணத்தை ஊட்டிற்று. அவன் மாண்டும் நான் புகழ்பெறுக.' என்ற வாசகம் மட்டும் அவன் காதில் விழுந்தது.

ஐயத்தின் பழைய சாயல் இப்போது வாலும் தலையும் பெற்று ஐயப்பேயுருவமெடுத்தது. தன் மனைவியின் அன்பு வேறு பக்கம் போயிருப்பதால் தான் மாண்டு அவள் வாழ்வு நிறைவடையவேண்டும் என்று அவள் கூறியதாக ஐயப்பேய் கதை கட்டிவிட்டது.

தூய உள்ளத்திலும் அன்பு மிகுதியாயுள்ள இடத்திலும் தான் ஐயப்பேய் தன் முழுச்சிறகையும் விரித்துத் தாண்டவமாடும். கெரெய்ன்டுக்குத் தன் இன்பவாழ்வு எட்டிக்காயாயிற்று. மனைவிமீது சீற்றங் கொதித் தெழுந்தது.

அவளைத் துன்பத்துக்காளாக்கி அவள் உள்ளத்துள் மறைந்து கிடந்த (அஃதாவது மறைந்து கிடந்ததாகத் தான் கொண்ட) தீய எண்ணங்களை முற்றிலும் வெளிப்படுத்த வேண்டும் என்று அவன் எண்ணினான்.

மறுநாள் கெரெய்ன்டு எனிடிடம் ‘உன்ஆடை அணிகளை எறிந்து விட்டு மாசடைந்த உடையுடன் வருக; என்றான். கணவனுக்கெதிராக நாம் என்ன செய்துவிட்டோமோ என்று அவள் நடுநடுங்கினாள். நல்லகாலத்தில் நல்லுரை கூறவே நாவெழாத அவளுக்கு இப்போது எங்கே நாவெழப் போகிறது? அவள் மணவினைக்குமுன் தாய் வீட்டில் அணிந்திருந்த பழங்கந்தையுடன் வந்தாள்.

கெரெய்ன்டு அவளை முன்னால் ஒரு குதிரைமீதேறிச் செல்லச் செய்து தான் பின்னே சென்றான். 'அதோடு என்ன நேரினும் நான் பேசச்சொன்னாலன்றி என்னிடம் பேசப்படாது' என்று கடுமையான உத்தரவுமிட்டான்.