பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

73

ஆளும் உரிமையை மாட்ரெட்டுக்கே தந்துபோனார். இப்புதிய அரசுரிமையை முற்றிலும் பயன்படுத்தி லான்ஸிலட்டைப் பழிவாங்குவதுடன், ஆர்தர் நாட்டையும் கைக்கொள்ள அவன் சூழ்ச்சி செய்தான்.

லான்ஸிலட்டுக்குப் பிரான்ஸின்56 சில பகுதிகளில் குறுநில மன்னருரிமை உண்டு. அப்பகுதியில் கிளர்ச்சி ஏற்பட்டதாகப் பொய்க் கையொப்பமிட்டு மாட்ரெட், லான்ஸிலட்டுக்கு ஒரு கடிதம் வரும்படி செய்தான். ஏற்கெனவே லான்ஸிலட்டுக்கு அங்கே பல வேலையிருந்தும், காமிலட்டை விட்டுச் செல்ல மனமில்லாமல் பின்தங்கியிருந்தார். இப்போது இன்றியமையாத நிலைமை ஏற்பட்டுவிட்டதால் இதனை ஒட்டி அங்கே சென்று கிளர்ச்சியை அடக்குவதோடு நில்லாது சிலநாள் தங்கிப் பிற வேலைகளையும் முடித்துவர அவர் எண்ணினார். ஆகவே, அவர் கினிவீயர் அரசியிடம் சென்று பிரியாவிடை பெற்றார். கினிவீயர் அரசி அச்சமயம் லான்ஸிலட்டிடம், "நீ இல்லாமல் காமிலட்டில் நான் இருக்கமுடியாது. உன்னைப் பார்க்கும் ஆறுதலினாலேயே நான் வேண்டா வெறுப்பாக ஆர்தருடன் வாழ இசைந்தேன். இனி நீ இல்லாதபோது அவருடன் வாழ, அவரைக் காணக் கூடப் பொறுக்க முடியாது. ஆகவே, நான் ஆல்ம்ஸ்பரியிலுள்ள மடத்தில்57 சென்று என் மீதி நாளைக் கழித்து விடுகிறேன்” என்றாள்.

லான்ஸிலட் எவ்வளவு தடுத்தும் அவள் கேளாமல் அவ்வுறுதியிலேயே நின்றாள். லான்ஸிலட்டும் இறுதியாக விடைபெற்றுச் சென்றார்.

அவர்கள் தனிமையிலிருப்பதாக எண்ணி மறைவாகப் பேசிய அனைத்தையும் மாட்ரெட் மறைந்து நின்று கேட்டுக் காண்டான். ஆகவே, கினிவீயர் தான் லான்ஸிலட்டிடம் கூறியபடியே யாருமறியாது மாற்றுருவில் ஆல்ம்ஸ்பரி சென்றதும், அவன் அவர்கள் தீய ஒழுக்கத்தை எங்கும் பறைசாற்றியதுடன் கினிவீயர் லான்ஸிலட்டுடனேயே ஓடிப்போய்விட்டாள் என்று துணிந்து ஒரு கதையும் கட்டி விட்டான். நற்செய்தியினும் தீச்செய்தி கடுகிச் செல்லும் இயல்புடையதாதலின் இப் பழியுரை நாடெங்கும் பரவிற்று.