274||
அப்பாத்துரையம் - 5
ரவிவர்மா மணவாழ்விற் புகுந்த அதே ஆண்டில் சென்னையில் கவின்கலைப் பொருட்காட்சி ஒன்று நடைபெற்றது. இரவி வர்மாவின் நண்பர்கள் இதில் கலந்து கொள்ளும்படி அவரைத் தூண்டினர். அவரும் 'நாளொப்பனையி லீடுபட்ட நாயர் நங்கை' என்ற சமூகச் சித்திரத்துடன் அதில் பங்கு கொண்டார். இதுவரை திருவாங்கூரில் அரங்கில் ஆடிவந்த அவர் கலை, இதன் மூலம் வெளியுலகில் அம்பலத்தில் ஆடத் தொடங்கிற்று. அப்படம் யாவர் கண்களையும் கவர்ந்தது. அத்துடன் அது சென்னை மாகாணத் தலைவரின் தங்கப் பதக்கமும் பெற்று, எடுத்த எடுப்பிலேயே மன்னன் இரவிவர்மாவின் கலைப்புகழை உலகறியச் செய்தது.
இக்கவின்கலைக் காட்சிக்கு நேராகத் தாமே செல்லும்படி மன்னர் இரவிவர்மாவைக் கோரியிருந்தார். அதன்படி கலைஞர் தம் வாழ்வில் முதல் முறையாகச் சென்னை சென்றார். அச்சமயம் ஹோபர்ட் பெருமானார் சென்னை மாகாண ஆட்சியாளரா யிருந்தார். இரவிவர்மாவுக்கு அவர் பேட்டியளித்து அவரைப் பெருமைப்படுத்தினார். அவர் படங்கள் பலவற்றையும் ஆட்சியாளர் பார்த்து அவற்றின் அருமை கண்டு பாராட்டினார்.
'நாளொப்பனையி லீடுபட்ட நாயர் நங்கை.' என்ற படம்
சென்னைப் பொருட்காட்சிசாலையில் மதிப்புப் பெற்றதுடன் நிற்கவில்லை. மன்னர், சென்னை ஆட்சியாளர் ஆதரவுரையுடன் அது வீயன்னாவில் அடுத்து நடைபெற்ற அனைத்துலக நாடுகளின் கலைப்பொருட்காட்சிக்கும் அனுப்பப்பட்டது. அங்கேயும் அது தங்கப்பதக்கமும் நன்மதிப்புச் சான்றும் பெற்றுப் புகழ் ஒளி வீசிற்று.
1874-ம் ஆண்டிலும் சென்னையில் ஒரு கலைப்பொருட் காட்சி நடைபெற்றது. இத்தடவை இரவிவர்மா 'யாழ் பயில் தமிழ் நங்கை' என்ற மற்றொரு சமூகச் சித்திரம் தீட்டி அனுப்பியிருந்தார். இதுவும் பெருஞ் சிறப்புடன் வரவேற்கப்பட்டது. பின்னாளில் ஏழாம் எட்வர்ட் மன்னராக வரவிருந்த வேல்ஸ் இளவரசர் எட்வர்ட் அடுத்த ஆண்டில் சென்னைக்கு வருகை தந்திருந்தார். முன்பே கலைஞருடன் பழகி நட்பாடியிருந்த ஆட்சியாளர் ஹோபார்ட் பெருமானார் அவரை இளவரசருக்கு அறிமுகம் செய்துவைத்தார். 'யாழ்பயில் தமிழ் நங்கை' என்ற படத்துடன்