பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 175

அமர்ந்திருந்தவர்கள். அவர்கள் ஆதரவால் அலிமுகமதுவும் பீஜப்பூர் சென்று பணியமர்வு பெற்றான். இனித் தன் வாழ்வு பட்டு மெத்தை விரித்த வாழ்வாகவே இருக்கும் என்று அவன் எண்ணியிருக்க வேண்டும். ஆனால், அது அவ்வாறு அமையவில்லை. அவுரங்கசீப் பீஜப்பூரைப் படையெடுத்தபோது, அவன் மைத்துனர் ஏழு பேரும் ஒருவர் பின் ஒருவராக அரிய வீரச் செயல்களாற்றிக் களத்திலேயே புகழுடன் மாண்டனர். இச்செய்தி கேட்ட அவர்கள் தங்கையாகிய அலியின் மனைவி, வாழ்விலே முழுதும் வெறுப்படைந்து வாடி வதங்கினாள். எவர் தேற்றினாலும் தேறாமல் அவள் வாழ்வு-மாள்வுக்கிடையே ஊசலாடினாள்.

இடமாற்றத்தால் மனைவியின் உயிர் காக்க எண்ணி, அலி மீண்டும் குடி தூக்கினான். சுரா மாகாணத்திலுள்ள கோலார் (கோலாறு) அவனுக்குத் தஞ்சம் அளித்தது. கோலார்த் தலைவன் ஷாமுகமது அவனுக்கு ஆதரவு காட்டி, அவனைத் தன் அரண்மனையில் பணியரங்கத் தலைவன் ஆக்கினான். அவன் குடி மீண்டும் தழைத்தது. முகமது இலியாஸ், முகமது, முகமது இமாம், ஃவைத்தே முகமது ஆகிய நான்கு புதல்வரைப் பெற்று வளர்த்தான். அவன் 1678-ல் உலகு நீத்தான்.

தலைமூத்தவனான முகம்மது இலியாஸுக்கும் கடைசி ளவலான ஃவத்தேமுகமதுவுக்கும் வாழ்க்கைப் பண்பிலே மிகவும் முரண்பாடு இருந்தது. இலியாஸ் சமயப்பற்றார்வம் மிக்கவன்; ஃவத்தே இளமைத் துடிப்பும் வீரமும் உடையவன். அவர்கள் முரண்பாடு முறுகிப் பிணக்கமாயிற்று. இலியாஸ் குடும்பத்தையே துறந்துவிட்டு தஞ்சையிலிருந்த பர்ஹான் உதீன் என்ற ‘பீர்சாதா' - அதாவது ஞானகுருவையடைந்து, அவர் பணியில் நாட்கழித்தான். ஃவத்தேமுகமது ஆர்க்காட்டு நவாப் சாதத் உல்லாவிடம் தானைத்தலைவன் (பௌஜ்தார்) ஆக வேலை பார்த்தான். செஞ்சிக்கோட்டையை நவாப் முற்றுகையிடும்போது செஞ்சித் தலைவன் தீப்சிங் நவாபின்மீது மூர்க்கமாகத் தாக்கினான். நவாபின் உயிருக்கே பேரிடையூறு ஏற்படவிருந்தது. ஃவத்தேமுகமது தீப்சிங்கை எதிர்த்து வீழ்த்தி நவாபைக் காப்பாற்றினான்.இதனால் அவனுக்கு ஆனை அம்பாரி முரசும் முதலிய மதிப்புகளும், 'நாய்கன்' என்ற பட்டமும் புகழும் கிட்டின.