பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 177

நிலவினர். ஷாபாஸ் 1718-லும் ஹைதர் 1721-லும் பிறந்தனர். இளையவராகிய ஹைதரே பின்னாளில் கன்னடத்தின் போர்வாளாகப் புகழ் பெற்ற சிங்கக்குருளை ஆவார்.

ஃவத்தே முகம்மது அந்நாளைய தன்னல, தன்னாதிக்கப் பூசல்களிடையே தன் தலைவனாகிய தர்காகலிகானுக்கும் அவன் பின்னோர்களுக்கும் உண்மை தவறாமல் உழைத்து வந்தான். ஆயினும், உடனிருந்தோர் தவறுகளால் அவன் தோல்வியுற்றுப் போரில் மாளநேர்ந்தது. தர்காலிகானின் புதல்வனாகிய அப்பாஸ்கலிகான் நன்றிகெட்டதனமாக,அவன் செல்வமுழுவதையும் பறிமுதல் செய்து எடுத்துக் கொண்டான். அத்துடன் நில்லாமல் அக்கொடியோன் பணப்பேராசையால் ஃவத்தேயின் மனைவிமக்கள் அணிமணி ஆடைகளையும் பறித்துக்கொண்டு, அவர்களைச் சிறையிலிட்டுக் கொடுமைக்கு ஆளாக்கினான்.எட்டு வயதான ஷாபாஸும், மூன்றே வயதுடைய ஹைதரும் ஒரு பெரிய முரசத்தினுள் வைத்து, அதிர்ச்சியில் துடிதுடித்து வீறிடும்படி முரசறைவிக்கப் பெற்றனராம்!

மைசூரில் வாழ்ந்த மூத்த ஹைதர் சாகிப் தன் சிற்றன்னையரும் தம்பியரும் படும் அவதிகேட்டு, அவர்களைச் சென்று விடுவித்தான். அவர்களைத் தன் பாதுகாப்பிலேயே வைத்து அவன் வளர்த்தான். ஷாபாஸுக்கு வயது வந்ததும் அவன் தன்னுடன் அவனையும் படைத்துறை அலுவலில் சேர்த்துக் கொண்டான்.

1749-இல் தேவன ஹள்ளிக் கோட்டை முற்றுகையின் போது, மூத்த ஹைதர் சாகிப் வீரப் போர் செய்து மாண்டான். ஷாபாஸ் போரில் காட்டிய வீரத்தை மெச்சி, மைசூர் அமைச்சனான நஞ்சிராஜ் அவனை மூத்த ஹைதரின் பதவியில் அமர்த்திக்கொண்டான். இளைய ஹைதர் இப்போரில் ஒரு புதுப் படை வீரனாகவே சேர்ந்திருந்தான். அந்நிலையிலும் அவன் ஆற்றிய அஞ்சா வீரதீரச் செயல்கள் அமைச்சனின் மதிப்பையும் பாராட்டையும் பெற்றன. ஆகவே, ஹைதரிடமும் ஒரு சிறிய படைப் பிரிவின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

கன்னடத்தின் போர்வாளாக ஹைதர் இதுமுதல் வளரலானான். வாள் கொண்டு அவன் தன் வீரப் புகழ்க் கழனியை உழத்தொடங்கினான்.