பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 179

4. தென்னக அரசியல் அமளி

ஆங்கில ஆட்சி தென்னகத்தில் வேரூன்ற வகை செய்த பெருநிகழ்ச்சி கருநாடகப் போரேயாகும். அதன் பின்னாளைய விளைவுகளை நோக்க, அதை நாம் 'தென்னாடு விடுதலை இழந்த வரலாறு' என்று குறிப்பிடலாம். தென்னாட்டுக்கு அதன் படிப்பினைகள் நிலையானவை. அதன் எச்சரிக்கைகள் காலத்திரையில் ஆழப் பதிந்துள்ளவை.

விடுதலை இழப்பால் பயன் இழந்தவர்கள் தென்னாட்டு மக்கள். பயன் அடைந்தவர்கள் ஆங்கிலேயர். ஆனால், பயன் அடையத் திட்டமிட்டவர்கள் பிரஞ்சுக்காரர்கள். சிறப்பாக பிரஞ்சுத் தலைவராயிருந்த அந்நாளைய தலைசிறந்த அரசியல் மேதை, டியூப்ளே!

பழம், மரத்தைவிட்டு அகன்றுவிட்டது. ஆனால், அது எய்தவன் கையில் விழவில்லை. அதன் அருமையறியாத மூன்றாவது பேர்வழியின் கைவசப்பட்டுவிட்டது. தென்னாட்டு வரலாற்றின் ஒரு முக்கோணப் புதிர் இது.

தென்னகத்தின் விடுதலை வாழ்வு, பிரஞ்சுப் பேரரசாட்சி, ஆங்கில ஆதிக்கம் என்று மூன்று தலைகளையுடைய முக்கோணச் சக்கரத்தின் சுழற்சியே கருநாடகப் போராட்டம். முதல் நிகழ்ச்சி நிறைவேறப் பாடுபட்டவன் ஹைதர். மற்றத் தென்னகப் பேரரசுகளும் அரசுகளும் குந்தகமாயிருந்திராவிட்டால், அதில் அவன் வெற்றி பெற்றிருப்பான். ஆனால், தென்னகத்தின் வேற்றுமைப் பிணக்குகள் இரண்டாம் நிகழ்ச்சிக்கு உதவின.

இரண்டாம் நிகழ்ச்சி வெற்றிபெறக் கனவு கண்டவன் டியூப்ளே. அதை அடைவதற்குரிய துணிவு, அரசியல் நுட்பம் அவனிடம் இருந்தது. புஸி, லாலி போன்ற அவன் படைத்தலைவர்களிடம் அதற்குரிய தலைமைத்திறம், போர்ச்-