பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
192 ||

அப்பாத்துரையம் - 6



நஞ்சிராஜன் பின்னணி வேவுத் தளங்களில் சுற்றிக்கொண்டிருந்தான்.ஹைதர் முன்னணிப் போர் முனையில் ஈடுபட்டிருந்தான். இச்சமயம் பார்த்து, அரண்மனை எதிரிகள் மன்னனை ஏவி நஞ்சிராஜனைப் படைத் துறையிலிருந்து வரவழைத்தனர். நஞ்சிராஜன் தொடர்ச்சியாகப் போர் வேலைகளில் ஈடுபட்டுச் சோர்வுற்றிருந்தான். ஆகவே, விரைவில் போர் முடித்து மைசூருக்கே மீளும்படி ஹைதருக்கு உத்தரவு அனுப்பிவிட்டு, அவன் அரண்மனைக்கு வந்தான்.

இத்தடவை எதிரிகளின் சூழ்ச்சிகள் பேரளவில் பயன் தந்தன. ஹைதரிடம் காரியத் துணைவனாகக் குந்திராவ் என்ற ஒருவன் இருந்தான். அவன் சூழ்ச்சிகளில் வல்லவன். நஞ்சிராஜனிடமிருந்து அமைச்சர் பணியைக் கைக் கொள்ளவேண்டுமென்று அவன் நீண்ட நாள் திட்டமிட்டிருந்தான். ஆகவே, ஒரு புறம் மன்னன் மனத்தை அவன் நஞ்சிராஜனுக்கு எதிராகக் கலைத்தான். மற்றொருபுறம் ஹைதரிடமும் நஞ்சிராஜனைப்பற்றிக் குறைகள் கூறி வந்தான். ஆகவே, நஞ்சிராஜன் திரும்பிவந்த சமயம் மன்னன் அவன்மீது பழைய குற்றச்சாட்டுகளை நீட்டினான். நஞ்சிராஜன் எதிர்த்துப் போரிட எண்ணவில்லை. அரசியல் பணிகளிலிருந்து ஒதுங்கிவிடுவதாகப் பணிவுடன் கூறினான்.

ஹைதர் திரும்பி வந்தபோது, குந்திராவே அமைச்சர் பணியை ஆற்றிவந்தான். நஞ்சிராஜன் பெயரளவிலே அமைச்சனாக ஒதுங்கியிருந்தான். தன் செயல் துணைவனே அமைச்சனாவதைப் பெருந்தன்மை மிக்க ஹைதரின் உள்ளம் மகிழ்வுடன் வரவேற்றது. ஆனால், குந்திராவுக்கு இது போதவில்லை. அவன் அமைச்சர் உரிமைகளையே முழுவதும் பெற விரும்பினான். ஆகவே, நஞ்சிராஜனுக்கெதிராக அவன் மன்னன் மனத்தை மட்டுமன்றி, ஹைதர் மனத்தையும், திருப்பினான். அவன் சூழ்ச்சியறியாது ஹைதர் நஞ்சிராஜனை வற்புறுத்தி, குந்திராவிடமே அமைச்சர் உரிமைகளை வாங்கி அளித்தான்.

மாறா உறுதியுடைய ஹைதரின் நட்பைக்கூட இழந்து விட்டோமே என்ற துயரத்துடன், நஞ்சிராஜன் தன் தாயகமான கென்னூருக்குச் சென்று ஓய்வுடன் வாழலானான். கன்னூரையடுத்துப் பெரிய பட்டணம் அர்க்கல்குரா,