பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
218 ||

அப்பாத்துரையம் - 6



ஆனால், படைகள் ஆர்க்காட்டுச் சமவெளியில் இறங்கும்வரை நிஜாம் ஆங்கிலேயரை வெளிப்படையாகப் பகைத்துக் கொள்ளவில்லை. ஒரு புறம் ஹைதருடனும் இன்னொருபுறம் ஆங்கிலேயருடனும் நேச உறவு கொண்டு, இரண்டகமாகவே நடந்த கொண்டான். வெற்றி எந்தப் பக்கம் வரக்கூடுமோ அந்தப் பக்கத்தில் சாய எண்ணி மதில்மேல் பூனையாக இருப்பதையே அவன் அரசியல் கோட்பாடாகக் கொண்டிருந்தான்.

நிஜாம் படைகள் ருக்னுதுல்லா என்ற படைத்தலைவன் கீழ் அணிவகுக்கப்பட்டிருந்தன. ஹைதர் படையில் அன் மகன் திப்பு, மன்னிப்புப் பெற்று ஹைதருடன் சேர்ந்து கொண்ட மீர் ரஸா அலிகான், மக்தூம்சாகிபு, காஸிகான் முதலிய படைத் தலைவர்களும் மைசூர் படைத்தலைவனான மகமதலியும் தலைமை வகித்தனர். இருவர் படைகளும் சேர்ந்து 42,000 குதிரை வீரரும் 28,000 காலாள் வீரரும் இருந்தனர். 109 பீரங்கிகள் அவர்களுக்கு உதவின. தவிர ஹைதர் வசமாக ஹைபத் ஜங் என்பவன் தலைமையில் 5,000 குதிரை வீரர்களும் 2,000 பயிற்சி பெற்ற காலாள் வீரரும், 2,000 பயிற்சி முற்றுப் பெறாத வீரரும் சில பீரங்கிகளுடன் பின் தங்கி இருந்தனர். இப்படைகள் ஆர்க்காட்டுச் சமவெளிக்குள் பாய்தவதற்குச் சித்தமாகச் செங்கம் கணவாய் அருகே கூடாரமடித்து இருந்தன.

நிஜாம்-ஹைதர் படைகள் இணைந்து படையெடுக்கத் தொடங்கிய செய்தி அறிந்ததும், திருச்சிராப்பள்ளியிலிருந்த படைத்தலைவன் ஹோவார்டு 5,000 காலாள்படை வீரரையும் 1,000 வெள்ளையரையும் விரைந்து கணவாயின் மறுபுறம் காண்டுவந்து நிறுத்தி, நேசப் படைகள் கணவாய் கடவாமல் தடுக்க முயன்றான். ஆனால், ஹைதர் படைகள் இரவோடிரவாகக் கணவாய் கடந்து ஆங்கிலப் படைகளைச் சூழ்ந்து, அவற்றைத் தாக்கின. நிலைமையைச் சமாளிக்க முடியாத ஹோவார்டு, விரைந்து பின்வாங்கி, திருவண்ணாமலையை அடைந்தான். அங்கிருந்து சென்னைத் தலைவர்களுக்கு நேசப்படைகளின் தொகையும் முன்னேற்றமும் குறித்து அவசரத் தகவல் அனுப்பினான். இதன் பயனாகத் திருச்சிராப்பள்ளியிலிருந்து 4,000 காலாள் வீரர், 800 வெள்ளையர், ஆர்க்காட்டு நவாபின் 3,000 குதிரை வீரர் ஆகியவர்களுடன் படைத் தலைவன் ஸ்மித் அனுப்பப்பட்டான்.