பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
222 ||

அப்பாத்துரையம் - 6



குழந்தைகளிடம் ஆங்கிலத் தாய்மார்கள் ‘நெப்போலியன்' பெயரை மெல்ல உச்சரிப்பார்களாம். குழந்தைகள் உடனே வாய் பொத்தி நடுங்கி விடுமாம்! கீழ் திசையில் ஹைதர் பெயர் உச்சரித்துக் குழந்தைகளுக்குச் செவிலியர் அதே நிலையை உண்டு பண்ணினர்!

மூலபாகல் என்ற இடத்தில் ஆங்கிலப் படைகளை அகற்றி ஆர்க்காட்டு நவாபின் படைகள் அமர்த்தப்பட்டிருந்தன. இஃதறிந்த ஹைதர் கோட்டையை எளிதில் கைப்பற்றிக் கொண்டான். படைத் தலைவன் 'உட்' அதை மீட்கப் புறப்பட்டான். உள்ளே மைசூர்ப் படைகள் இருந்தன என்று மட்டுமே அவனுக்குத் தெரியும். ஹைதர் மலையாளக் கரையிலிருந்து அவ்வளவு விரைவில் வந்திருக்க முடியாது என்று அவன் கருதினான். ஆனால், எதிர்ப்பின் மும்முரத்தால் அவன் உண்மை உணர்ந்து விரைந்து பின் வாங்கினான். இதுவும் எளிதில் முடியவில்லை. ஹைதர் வெளியே நிறுத்தியிருந்த படைகள் இதைத் தடுத்தன. அவசர அவசரமாகப் புதிய படை பலம் வேண்டுமென்று படைத் தலைவன் ஸ்மித்துச் செய்தி அனுப்பப்பட்டது.

படைத் தலைவன் ஸ்மித் வருமுன் ஹைதர் மேலும் சில கோட்டைகளைக் கைப்பற்றிவிட்டான்!

ஹைதர் ஹோசூர்க் கோட்டையின் முற்றுகையில் ஈடுபட்டிருந்தான். போர் முயற்சியின் தோல்விகளால் மனம் குமுறிய ஆங்கில அரசியலார் படைத் தலைவன் ஸ்மித்தைச் சென்னைக்குத் திருப்பியழைத்துக்கொண்டு, படைத் தலைவன் 'உட்'டை நியமித்திருந்தனர். 'உட்' தன் களப் பீரங்கிகளையும் தளவாடங்களையும் பாகலூரில் படைத் தலைவனான அலெக்ஸாண்டரிடம் விட்டுவிட்டு ஹோசூருக்கு விரைந்தான். ஆனால், ஹைதர் முற்றுகை துறந்து இரு தலைவர்களின் இடையே பாய்ந்து சென்று பீரங்கிகளைக் கைப்பற்றிப் பெங்களூருக்கு அனுப்பினான்.அத்துடன் ‘உட்டின் படைகளை விடாது தொடர்ந்து அழித்து, அவன் தலைமைத் திறத்தைச் சந்தி சிரிக்க வைத்தான். வேங்கடகிரியிலிருந்து திடீரென்று மேஜர் பீட்ஸ்கெரால்டு என்ற படைத் தலைவன் வந்து உதவியிரா விட்டால், ‘உட்’, தானே ஹைதர் பிடியிலிருந்து தப்பி வந்திருக்க முடியாது!