பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 223

ஹோசூர் பாகல்பூர் தோல்வியால், 'உட்'டும் பதவியிழந்தான். படைத் தலைவன் லாங் படை முதல்வனாக அமர்வு பெற்றான்.

ஆங்கிலேயர் இப்போது பெங்களூரைக் கைப்பற்றி ஹைதரை மீள வைக்கலாம் என்று மனப்பால் குடித்தனர்! இதை அறிந்த ஹைதர் பஸ்ஸுல்லாக்கானை அனுப்பி ஆங்கிலேயரிடம் மீந்திருந்த கோட்டைகளையும் பிடிக்க ஏவினான். இது மிக எளிதாக நிறைவேறிற்று. அத்துடன் ஹைதர் தன் படையுடன் சூறாவளிபோலச் சுழன்று திரிந்து, கோயமுத்தூர், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளை எல்லாம் நொடிக்குள் கைப்பற்றினான். வழியிலே நிக்ஸன் என்ற தலைவனுடன் ஒரு ஆங்கிலப் படை குறுக்கிட்டது. எதிர்ப்பது ஹைதர் தலைவர்களுள் ஒருவனல்ல, ஹைதரே என்றறியாது சிக்கிய அப்படையில், தலைவனும் துணைத்தலைவனும் தவிர ஒருவரும் தப்பவில்லை. துணைத் தலைவன் முன் ஆண்டில் சரணடைந்து, போர் முடிவுவரை போரிலீடுபடுவதில்லை என்ற உறுதியின் பேரில் விடுவிக்கப் பட்டிருந்தான். உறுதி தவறிய குற்றத்திற்காக அவன் மீதி வாழ்நாளைச் சீரங்கப்பட்டணம் சிறையில் கழித்தான்.

ஆர்க்காட்டு நவாபின் ஆட்சிப் பகுதி முழுவதையும் இப்போது ஹைதர் தன் கைக்குள் ஒரு ஆண்டுக்குள் கொண்டு வந்துவிட்டான். அது போதாமல், திடுமென மின்னல் உருகிப் பாய்ந்ததுபோல் சென்னையருகே பறங்கி மலையில் வந்து பாளையமடித்துக்கொண்டு, ஆங்கில அரசியலாரை அவன் நடு நடுங்க வைத்தான்!

போரின் கடைசி ஆங்கிலப் படைத் தலைவன் ‘புரூக்’ ஹைதர் முன் மண்டியிட்டு நின்று சமரச ஒப்பந்தம் கோரினான். ஹைதரும் ஆங்கிலேயர் வகையில் எதையும் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுக்கச் சித்தமாகவே இருந்தான். ஆனால், நம்பிக்கை மோசக்காரனான முகமதலிக்கு மட்டும் எதுவும் விட்டுக் கொடுக்க முடியாதென்று பிடி முரண்டு செய்தான். ஹைதர் பறங்கிமலை யிலிருந்து ஒரு படைப் பிரிவுடன் வந்து சென்னையைச் சூறையாடுவதாக அச்சுறுத்திய பிறகுதான் ஆங்கிலேயர் அவன் கூறியபடி ஒப்பந்தம் செய்ய இணங்கினர்.

இந்த ஒப்பந்தம் 1769-ல் நிறைவேறிற்று.