பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 233

குழுவினரும் புழுக்கமடைந்தனர். அவர்கள் விரைவில் மைசூருக்கு எதிராக ஒப்பந்தம் செய்துகொண்டு மைசூர்மீது படையெடுத்தனர்.

நிஜாம்-பூனா நேசப்படையின் முன்னணியை ஹைதர் சாவனூர் அருகில் சந்தித்தான். ஸான்லிப் போரில் ஹைதரின் படைத்தலைவன் முகமதலி தன் படைகளுடன் ஓடுவதாகப் பாசாங்கு செய்து, மராட்டிய முன்னணிப் படைகளை மைசூர்ப் பீரங்கிகளின் எல்லைக்குக் கொண்டு வந்தான். பீரங்கிகளின் நெருப்புக்குப் படையின் பெரும்பகுதி இரையாயிற்று. மீந்தவர் தீய்ந்து கருகிய குறையுடலுடன் ஓடி எங்கும் கிலியைப் பரப்பினர்.

முன்னணியைத் தொடர்ந்து பின்னால் இப்ராஹிம்கான் தலைமையில் 40,000 வீரருக்குக் குறையாத நிஜாம்படை வந்து கொண்டிருந்தது. முன்னணியிலிருந்து ஓடிவந்தவர்கள் கிலி, அவர்களைக் கிருஷ்ணா ஆறு தாண்டி ஓடவைத்தது. பரசுராம் பாலாவின் தலைமையில் வந்த பூனா அமைச்சரின் மராட்டியப் படையோ அடோஸிவரை அசைந்தசைந்து வந்தது. படையிலிருந்து விலகிச் செல்பவர்களுக்கெல்லாம் பணம் வழங்குவதாக ஹைதர் தெரிவித்தவுடனே, சிதறிய கடலையைப் பொறுக்குவதற்கு ஓடும் குரங்குப் படைகள் போல அப் படைவீரர் சிதறிக் கலைந்தனர்.

மைசூரின் பழைய அரசர் மரபுக்கும் ஹைதருக்கும் சித்தல துருக்கம் ஒரு பகைமுள்ளாய் இருந்து வந்தது. மராட்டியப் போரில் அதன் தலைவன் ஹைதர் உதவிக்கு வரவில்லை. அத்துடன் நிஜகல் கோட்டை முற்றுகையில் அவன் எதிரியின் ஆளாயிருந்து ரகோபாவுக்கு வெற்றி தேடித் தந்தான். இனி மராட்டியர் ஓய்ந்து விடுவர் என்ற எண்ணத்துடன், ஹைதர் அவன் மீது தாக்குதல் தொடங்கினான். ஆனால், முந்திய தோல்வியின் அவமதிப்புக்கு ஈடு செய்யும் எண்ணத்துடன் மராட்டியர் ஹரிபந்த் பாரிகா என்ற தலைவன் கீழ் 60,000 குதிரை வீரரை அனுப்பினர். மராட்டியர் பண ஆசையறிந்த ஹைதர், துணைத் தலைவனை எளிதில் வசப்படுத்தி,பாரிகாவின் படையைக் கலைந்தோடுவித்தான். இதன் பின் அவன் துங்கபத்திரா, கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்பட்ட சிற்றரசுப்