பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
248 ||

அப்பாத்துரையம் - 6




நாடகங்களும் படக்காட்சிகளும் இந்நாளில் பொதுமக்கள் பொழுது போக்காக மலிந்துள்ளன. ஹைதர் நாட்களில் இத்தகைய பொதுப் பொழுதுபோக்குகள் மிகக் குறைவே. விலங்குக் காட்சிகள். பொருட்காட்சிகள் கூட இன்றிரவு அன்று பெரும்பழக்கமாயில்லை. மற்போர், குத்துச்சண்டை, விலங்கு போர் ஆகியவையே இவற்றினிடமாக அன்று நடைபெற்றன. ஹைதர் இவற்றை ஊக்கியது மட்டுமன்றி அவற்றில் அடிக்கடி தானே முனைந்து ஈடுபடுவதுண்டு. மான் போர், யானைப் போர், வாணவேடிக்கை, குத்துச்சண்டை, மற்போர் ஆகியவற்றில் அவன் நேரடியாகச் சென்றிருந்து பரிசும் பாராட்டும் வழங்குவதுண்டு. பரிசுப்போட்டி சண்டைகளில் ஒரு வகை ஹைதர் நாட்களில் அவனால் பெரிதும் ஆதரிக்கப்பட்டது.அதில், கள் அருந்தப்பட்ட கழுதைகளுடனே கட்டுண்டபுலி போருக்குத் தூண்டப்படும். இன்னும் சிலசமயம் சிறந்த அபிஸீனிய வீரரோ அல்லது விரும்பும் வேறு பிறரோ புலி சிங்கங்களுடன் சண்டை செய்யும்படி ஏற்பாடு செய்யப்படும். சண்டைக்கான தனியிடத்தில் நடுவே ஒரு வாழைமரம் நடப்பட்டிருக்கும். சிங்கமும் ஆளும் அதைச் சுற்றி மாறிமாறித் தாக்க வேண்டும். மர மறைவிலிருந்து, சிங்கத்தை வீரர் குத்த வேண்டும். சிங்கம் மாண்டால், வீரனை மன்னன் பரிசுகளாலும் பொன்னணி மணிகளாலும் மூழ்குவிப்பான். ஆனால், சிங்கம் வென்றால், வீரனுக்குப் பரிசு கிடைக்காது. ஆனாலும், பெரும்பாலும் ஹைதர் அரங்கில் இருக்கும்போது, வீரன் மாள்வதில்லை. ஏனென்றால், விலங்கு வெல்லும் சமயம், ஹைதரின் குறி தவறாத துப்பாக்கிக் குண்டுக்கு விலங்கு இலக்காகி விழுந்துவிடும். இத்தகைய தருணங்களில் பந்தயப்போரில் மன்னனே பங்கு கொண்டு தன் திறமையைப் பயன்படுத்துவது உண்டு. இவ்வகையில் அந்நாளைய மைசூர் மக்கள் எல்லையில்லாத மகிழ்வும் பெருமையும் உடையவராயிருந்தனர்.

தனி வாழ்க்கையிலும் நண்பர்களிடையிலும் ஹைதர் எல்லாருடனும் தாராளமாகக் கலந்து பேசும் இயல்புடையவன். அவன் தாய்மொழி கன்னடம். அதன் கொச்சைச் சொற்களை அவன் மிக அடிக்கடி கையாளுவது வழக்கம். அவன் உள்ளத்தில் வஞ்சகமும் பகைமையும் கிடையாது. ஆனால், கோபத்தில் கடுந்திட்டும் வசவும் நையாண்டியும் அவனிடம் ஏராளம்.