பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 249

அதேசமயம் நெருங்கிய நண்பர்கள், வீரப்படைத் தலைவர்கள் எதிர்த்துத் திட்டினாலும், நையாண்டி செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் பண்பு அவனிடம் உண்டு. அரசியல் காரியங்களில் அவன் மிகுதி பேசுவதில்லை. ஆனால், பேசும்போது கண்டிப்பும் அறிவுச் செறிவும் மிகுதியாயிருந்தது. அவன் கருத்துக்களை அவன் கீழ்ப்பட்ட பணியாளர்களும் நண்பர்களும் மட்டுமன்றி, அறிஞர்களும் தனித் துறைகளின் வல்லுநர்களும் மதித்தார்கள்.

இளமையில் ஹைதர் பள்ளியில் நிழலுக்குக்கூட ஒதுங்கியது கிடையாது. இது காரணமாக அந்நாளைய முஸ்லீம் அரசர் அரசியல் மொழியாகிய பாரசீக மொழியிலோ, தாய் மொழியாகிய கன்னடத்திலோ ஹைதருக்கு எழுத்தறிவு கிடையாது. பத்திரங்களிலும் ஒப்பந்தங்களிலும் கட்டளைத் தாள்களிலும் கையொப்பமிடும்போது, அவன் பாரசீக மொழியில் 'ஹைதர்' என்ற பெயரின் முதலெழுத்தான ‘ஹை’ என்பதை மட்டும் எழுதப் பழகியிருந்தான். அந்த எழுத்தைக்கூட அவன் தலைமாற்றியும் ஒரு தடவைக்கு இருதடவையாகவும் எழுதினான்.

எழுத வாசிக்கத் தெரியாத காரணத்தினால் ஹைதருக்கு வாழ்விலோ ஆட்சிப் பொறுப்புகளிலோ எவ்வகையான குந்தகமும் கிடையாது. இதே நிலையில் இருந்த அக்பர், அசோகன் முதலிய அரசர்கள், கல்வி வல்லார்களின் உதவியாலேயே காரியம் ஆற்றினர். ஆனால், ஹைதர் பள்ளிக் கல்வியில்லாதவனாயிருந்தாலும் நினைவாற்றலிலும் அறிவாற்றலிலும் பெரும் புலவர்களையும் விஞ்சியவனாயிருந்தான்.

ஹைதரின் நினைவாற்றல் மனித எல்லை கடந்த ஒன்றாகவே இருந்தது.கேட்ட ஒவ்வொரு சொல்லையும் பல ஆண்டு கடந்தும் அவன் நினைவில் வைத்திருப்பான். ஒரு தடவை கண்ட முகத்தையும் அதுபோலவே இருபது முப்பது ஆண்டுகள் கழித்தும் அவன் அடையாளம் கண்டு கொள்வான். உருவை மறைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் உரு மாறாட்டங்கள் கூட அவன் வகையில் பயன்படுவதில்லை. எத்தனை ஆண்டு கழித்தும் எந்தச் சூழலிலும் எந்த வேடத்திலும் அவன் ஆளையறிந்துகொள்வது கண்டு அவன் நண்பர் வியப்படைந் தனர். அவன் எதிரிகள் அஞ்சி நடுங்கினர்.