பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
258 ||

அப்பாத்துரையம் - 6



காடுகளிலிருந்த கல்லறைகள் அப்படியே இருக்கின்றன” என்றனர்.

இம்முகப் புகழ்ச்சி மிகவும் திறமையும் நயமும் உடையதே. ஆனால், ஹைதர் அதை ஏற்க விரும்பாமல், எதிர் விளக்கம் தந்தான். “அப்படியன்று, அன்பரீர்! இந்நகரத்து மக்கள் தங்கள் தங்கள் இல்லங்களுக்காகப் போராடி மாண்டவர்கள் என்பதை நீங்கள் காணவில்லை” என்றான்.

விளக்கம் நண்பர்களுக்கு ஓர் அறிவுரையாகவும் அமைந்தது.

எதிரிகள் கண்களிலும் போர் வரலாற்றிலும் ஹைதருக்கிருந்த பெருஞ்சிறப்பு அவன் வீரமும், வீரத் தலைமைத் திறமும், போர்த் திறமுமே.

போர் வீரருடன் போர் வீரன் வாழ்க்கையை ஏற்ற தலைவன் ஹைதர். போர் வீரருக்கு அவன் ஒரு முன் மாதிரியாய் அமைந்தான். தோல்வி கண்டு துவளாமல், கடுந்துயர்கள் கண்டு கலங்காமல், இடரில் குதித்து விளையாடியவன் அவன். இத்தகைய தலைவனை வீரர் விரும்பிப் பின்பற்றி, ஆர்வத்துடன் அவனுக்காக மாண்டது இயல்பு. இது ஒன்றே அவனை ஒப்பற்ற படைத்தலைவனாக்கப் போதியது. ஆனால், இதுவன்றி வேறு பல ஒப்பற்ற திறங்களும் அவனிடம் இருந்தன. துணிகரமான, அறிவார்ந்த திட்டம், திறமை வாய்ந்த போர் முறைகள், விடாமுயற்சி, ஆகியவை போர்க் களங்களில் அவனை அடற்புலியேனாக்கிற்று. இவை போதாமல், அவனுக்கே உரிய வியத்தகு திறம் இன்னொன்றும் இருந்தது. அவன் தன் படைகளை மாற்றார் வியக்கும்படி இம்மெனுமுன் இருநூறும் முந்நூறும் தாண்டிக்கொண்டு சென்று, எதிர்பாராமல் மின்னலெனப் பாய்ந்து இடியென மோதி விடும் திறமுடையவனாயிருந்தான். ஆங்கிலேயரைப் போரில் திணறடித்த பண்பும், 1779- இல் சென்னை நகரைக் கலக்கிய திறமும் இதுவே.

வீரனாகவும் தலைவனாகவும் பிறந்தவன் ஹைதர்.பழங்கால வாட்போரிலும் புதிய காலத் துப்பாக்கிப் போரிலும் ஒருங்கே அவன் அக்காலத்தின் ஒப்புயர்வற்ற கைகாரனாயிருந்தான்.

ஒற்றர், வேவுகாரர், தகவல் சேகரத்தார்கள் ஆகியவர்களை ஹைதர், திறம்பட இயக்கினான். அவன் அமைத்த தகவல்