பக்கம்:அமிர்தம்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகன் மூர்த்தியை சுலோவிற்கென்றே நிர்த்தார்ணம் செய்தவர் அட்வகேட். மூர்த்தி ஒரு பி. எஸ். ஸி. படிப்பிற்குப் படிப்பு; அழகுக்கு அழகு; அந்தஸ்துக்கு அந்தஸ்து. பின் என்ன? ஜாதகங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஆனால் என்றைக்கோ அவர்கள் இரண்டு இதயங்களும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு விட்டனவே!

சுலோ படிக்கும் பொழுதே வீணைமீட்டக் கற்றுக்கொண்டாள். நாட்கள் செல்லச் செல்ல வீணைப் ‘பைத்தியம்’ வளரத்தான் வளர்ந்தது. இதுபற்றி அவள் பெற்றாேருக்கும் சந்தோஷமே. தமக்கை வீணையைக் கையில் எடுப்பதைப் பார்த்துவிட்டால் போதும் கண்ணன் குழலோசை கேட்ட கோபியர்களைப் போல ஓடோடிச் சென்று அவள் வாசிக்கும் கானத்தை ரசிக்கத் தொடங்கி விடுவாள் வாஸந்தி. நாளடைவில் வாஸந்தியின் ரசிகத்தன்மை அவளையும் வீணை சிஷை பெறத் தூண்டிவிட்டது.

விரைவில் சுலோ மிஸஸ் மூர்த்தி ஆனாள். அவனும் ஒரு சங்கீதப் பித்தன். பித்தம் தெளிய மருந்து சுலோவின் இசை வெள்ளம். இப்படியல்லவா ஜோடி பொருந்த வேண்டும்? அவளும் முன்கூட்டியே வேண்டுகோள் எதுவுமின்றி, ஆனால் குறிப்பறிந்து-ஜாடை தெரிந்து வீணை வாசித்துத் தன் அத்தானைப் பரவசப்படுத்தத் தவறுவது கிடையாது.

சுலோவை அடுத்து அட்வகேட்டின் அதிகக் கவலை வாஸந்தியின் பேரில் நிலைத்தது நியாயமே! ஆனால் வரன் விஷயம்தான் அவருக்கு மட்டுப்படவில்லை. மூர்த்திபோல இன்னொரு மாப்பிள்ளையும் அமைந்துவிடவேண்டுமென்பது தான் அனந்தராமனின் ஆசையும் ஆதங்கமும், அந்தச் சமயம்தான் அவர் மனம் இடியும் வண்ணம் சுலோவின், அகால மரணம் பற்றி தந்தி வந்தது. மணம் முடிந்து புது வாழ்வு தொடங்கி இன்னமும் ஓராண்டுகூடப் பூர்த்தி பெற-

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/81&oldid=1322912" இலிருந்து மீள்விக்கப்பட்டது