பக்கம்:அமிர்தம்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரட்டும். அப்பாலே பேசிக்கலாம். ஐயனார் தெய்வத்துக்குக் கண் இருந்தாப் பார்த்துக்கட்டும். அடம் செய்யறவுங்க எப்படியும் கஷ்டம் அனுபவிக்காமலா போயிடுவாங்க” என்று சாந்தப்படுத்தினாள்.

யனார் கோவில் திருவிழா’ பூவாயியின் மனத்தில் இன்பவேதனை யொன்றைச் சதா தூண்டிவிடும் ஓர் எச்சரிக்கை போல அமைந்து வந்ததை அவள் எங்ஙனம் உணராமல் இருக்க முடியும்? அத்தகைய ஓர் அனுபவம் அவள் பேதை உள்ளத்தில் இரண்டறக் கலப்பதற்கு ஏதுவாயிருந்ததும் அதே கோவில் வட்டாரங்கள் தாமென்றால் கேட்கவா வேண்டும் ?

ஒரு நாள் அந்திமயங்கும் வேளை. மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளை ஒதுக்கிவிட்டுக் கொஞ்சம் களைப்புத் தீர மணல் மேட்டில் சாய்ந்து படுத்திருந்தாள் பூவாயி. ஆனால் நெடுநேரம் தன்னையே கொட்டக் கொட்ட விழித்து நோக்கிக் கொண்டிருந்த ஒரு வயதுப் பையனை அவள் அந்தக் கணம் பார்க்கவேயில்லை. பூவாயி வயதுவந்த பெண். கல்யாணப் பருவம். வாலைக் குமரிக்கு என்னென்ன மோனக் கனவுகளோ? எப்படிப்பட்ட எண்ணச் சூழ்நிலையோ? வாழ்க்கை வருங்காலம் பற்றி அவள் நெஞ்சம் எந்தப் பாணியில் மோடி பண்ணியதோ?

சுய நினைவு உருப்பெற்று விசித்தெழுந்த சமயத்தில் தான் அந்த வாலிபனைக் கண்டாள். உடனே பரபரப்பு; உவகைப் பெருமிதம். அப்புறம் குறுநகையை வதனத் திரையில் குறுக்குப் பாய்ச்சல் ஒடவிட்டாள்.

“பூவாயி, பொழுது சாயப்போவுதே. வீட்டுக்கு வரலையா?”

அவள் ஆச்சரிய மடைந்தாள். ‘இந்த ஆளுக்கு எம் பேருகூடத் தெரியுதே! என்று வியந்தது’ அவள் மனம்!

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/90&oldid=1313429" இலிருந்து மீள்விக்கப்பட்டது