பக்கம்:அமுதவல்லி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174 அமுதவல்லி

நான் உன்னை இன்னமும் கூடுதலான நேசத்தோடு அன்பு பாராட்ட முடியும்; அன்பு பாவிக்க இயலும்!... அப்பத்தான் அந்த அன்புக்கு-பாசத்துக்கு நேசத்துக்கு புடமிட பொன்னோ மகிமையும் கிட்ட வாக்கும்! ஆமா, தில்லை!...

அன்பெனும் பிடினின்றும் விலகவோ, விடுதலை பெறவோ ஒப்பமாட்டாள் தில்லை. ஒரு பதியின் உஷ்ணப் பெருமூச்சை மறுபாதியில் நின்று உணர்ந்த வாறே, மாரகச் சேலையைச் செம்மைப்படுத்திக் கொள்ளத் தவறி விடவில்லை தில்லை. ஏறிட்டு விழித்தாள். பச்சைக் குழந்தையின் பால் மனம் பாலாக உருகியோட அவள் நிமிர்ந்து பார்த்தாள். அத்தான், நீங்க என்னென்னமோ பேசுறீங்களே?... நான் சின்னப் பொண்ணு தானுங்களே, அத்தான்? என்றாள். உடலும் உடலும் பிணைந்த ஸ்பரிசம் கூட ஒரு யோகம் தான் போலும்! -

சோமையாவுக்கு - அழ மட்டும்தான் தெரிந்தது, இப்போது.

“அப்பா!...”

அச்சமயம், பாபு கன்றெனத் துள்ளி வந்தான். அப்பாவைக் குண்டுக் கட்டாகக் கட்டிக்கொண்டான்.

“அப்பா, கோவிச்சுக்கிடாமல் இதைப் பாருங்க! இதிலே உங்க பேர் எழுதின ஒரு சின்னூண்டு கடுதாசி இருந்திச்சுதுங்க...” என்று சொல்லிக்கொண்டே பரபரப்புடன் நிஜார்ப்பாக்கெட்டைத் துழாவி எடுத்தான் வாண்டுப் பயல்.

சோமையா திடுக்கிட்டான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/176&oldid=1378288" இலிருந்து மீள்விக்கப்பட்டது