18
செல்கின்றவன் எவனோ அவனே புத்துலகைத் தோற்றுவிக்கும் புரட்சிக்கவியாகக் காட்சியளிக்கிறான். அவனே ஓடிந்த உள்ளங்களுக்கு உணர்ச்சி ஊட்டும் கவி! உயிர்க்கவி! மூடப்பழக்க வழக்கங்கள், குருட்டு நம்பிக்கை, மதோன்மத்தர்களின் போக்கு, மமதையாளரின் செருக்கு, மதக்குருக்களின் கொடுமை, உலுத்தரின் உல்லாசவாழ்வு, வஞ்சகர்களின் சூழ்ச்சி, ஆகியவற்றை நமது புரட்சிக்கவிஞர் கண்டிக்கும் அளவுக்கு எந்தக் கவிஞனும் இந்த நாட்டில் இதுவரையில் சென்றதில்லை. கடவுளை இயற்கையில் காண்கிறார், நாகர்கோயிலார். நாமக்கல்லாரோ கடவுளும் காந்தியுமன்றி வேறொன்றறியேன் பராபரமே என்கிறார். காதலின் எழில், வீரத்தின் எழுச்சி, இயற்கையின் வனப்பு, தமிழின் சிறப்பு, கருத்தின் தெளிவு, உழைப்போர் உள்ள நிலை, மக்கள் பண்பு ஆகியவற்றைக் கவிதைகளின் ஊடே மல்கி மிளிரும்படி செய்யும் தன்மை நமது புரட்சிக் கவிஞரிடத்தே அமைந்திருக்கக் காணலாம். அறிவை அறிவாகவும், அன்பை அன்பாகவும், அழகை அழகாகவும் கவிஞர் தம் கவிதையில் காணுவாரேயன்றி அறிவே கடவுளாக, அன்பே கடவுளாக, அழகே கடவுளாகப் பகுத்தறிவுக் கவிஞராக, ஆனதன்பின் காணமாட்டார். அவர் தமிழிடத்துக் கொண்டிருக்கும் அன்பை “மங்கை ஒருத்தி தரும் சுகமும் மாத்தமிழுக்கீடாமோ” என்று வெளிப்படுத்தியிருப்பது போல் வேறு யாரும் வெளிப்படுத்த நினைத்ததில்லை கவிகளில் பலர் வருந்தித்தத்தளிக்கும் இடங்களிலெல்லாம் மிக எளிதாகத் தாண்டிச் செல்லும் திறமை படைத்தவர் நமது கவிஞர். தீந்தமிழுயர்வினுக்குச் செத்தான் அன்பன், செத்ததற்குச் செத்தாள்