பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதினொன்று

மாடி வீட்டின் பெருங் கதவு திறக்கப்படுகின்றது. பெரிய பண்ணையார் முறுக்கிய மீசையுடன் விரைவாக வெளிவருகிறார். அவர் மனைவி அணிகளையும் தன் அழகையும் சுமந்து வெளிவருகின்றாள் இருவரும் தெரு நடுவில் நின்று கையில் மண்வெட்டியையும் சிவப்புத் துணியையும் தூக்கி அசைத்துக் காட்டுகிறார்கள். ஊர் மக்கள் மண்வெட்டி, தட்டு, பாரை தூக்கி ஏரி நோக்கி ஓடுகிறார்கள்.

மற்றொரு மாடி வீட்டினின்று சின்ன பண்ணையார் அவருடைய அழகற்ற மனைவியும் அவ்வாறே அடையாளங் காட்ட அங்குள்ள மக்களும் ஏரியை நோக்கி ஓடுகிறார்கள் கருவிகளுடன்.

இரு பண்ணையார்களின் நூற்றுக்கணக்கான ஆட்கள், பெருமிடாக்களில் அரிசியைக் கழுவிப் போட்டுச் சோறாக்குகிறார்கள். ஏரியில் வேலைசெய்யும் ஊர் மக்கட்கு வாழையிலை திருத்தப்படுகிறது, சோறு இட. கறிகள் அரிகிறார்கள் குழம்பு வைக்க. நூற்றுக்கணக்கான அடுப்புக்கள் எரிகின்றன. தாளிப்பு மணம் கமகம என்று எழுகின்றது நாற்புறத்தும்.

அனைத்தும் ஊர் மக்கட்கு! மகிழ்ச்சியுடன் திரிகிறான் மண்ணாங்கட்டி. அவன் ஏரிக்கரை செல்கிறான். ஊர் மக்கள் ஏரிக்கரை செப்பனிடுவதைப் பார்க்கிறான். மீண்டும் ஊருக்குள்

20