பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 59


வார்த்தைகளை நம்பிக்கொண்டு இராஜாங்க உத்தியோகஸ்தர்கள் வார்த்தைகளை அவமதிப்பது இயல்பாகும்.

பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் பம்பாயில் குடிகளால் ஏற்பட்டக் கலகத்தை சாம, தான, பேத, தண்டமென்னுஞ் சதுர்வித உபாயத்தால் நடத்தியிருக்கின்றார்கள்.

அதாவது குடிகள் யாவரும் போதனா துவேஷத்தால் வீரர்வேஷம் கொண்டு வீண் கலகங்களை விளைவித்தபோது முதலாவது வேண்டிய வரையிலுஞ் சமாதான வார்த்தைகளாலடக்கிப் பார்த்தார்கள். அதினாலும் அவர்கள் தணியவில்லை. இரண்டாவது, அவர்களுக்குள்ளப் பெரியோர்களைக்கொண்டும் அமைதி செய்தார்கள். அதினாலும் அவர்கள் அடங்கவில்லை. மூன்றாவது, பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் கொண்டு பேதித்து பயமுறுத்தியும் பார்த்தார்கள். அதினாலும் அவர்கள் அமர்ந்தபாடின்றி மேலுமேலும் கலகத்தைப் பெருக்கிக் கற்களால் அடிக்க முயன்றதால் பிராண அபாயமில்லாமல் இடுப்பிற்குக் கீழ் சிலரை சுடும்படியாக உத்திரவு கொடுத்திருப்பதாய்த் தெரிய வருகிறது.

காரணம் அவ்விடம் காயமுண்டாகி வைத்திய சாலையில் இருப்பவர்கள் யாவருக்கும் இடுப்பின் கீழ் துடையிலும், முழங்காலிலும், பாதத்திலுமே பெரும்பாலும் காயம் பட்டிருப்பதாகப் பத்திரிக்கைகளால் தெரிய வருகிறது.

அதினால் குடிகள் யாவரும் துவேஷத்தால் வீரர்வேஷம் கொண்டு கலகஞ் செய்தபோதிலும் இராஜாங்கத்தார் கருணையினாலேயே தெண்டித் திருக்கின்றார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகின்றது.

- 2:8; ஆகஸ்டு 5, 1908 -

பி.ஏ., எம்.ஏ, முதலிய கெளரதா பட்டம் பெற்றவர்களும் ஒவ்வோர் சபைகளுக்குத் தலைவர்களானவர்களும் தினசரி பத்திரிகைகளை நடத்துகிறவர்களுமாகிய பெரியோர்களே தாங்கள் நடத்தும் காரியங்களை எண்ணித் துணியாமல் எண்ணாமல் துணிந்து செய்து இழுக்கடைவதானால் கல்லாதவர்களுஞ் சொற்பக் கல்வியை உடையவர்களும் எக்காரியங்களை சீர்பெறச் செய்வார்கள்.

நாமும் நம்முடைய தேசத்தோரும் சொற்ப புத்தியும் அற்று சுயபுத்தியும் அற்று சூன்யநிலையில் இருக்கின்றோம். அதாவது ஒருவன் கலாசாலையில் வாசித்து இராஜாங்க உத்தியோகம் பெற வேண்டும் என்று முயற்சி செய்வானாயின் அவனை ஒத்தே மற்றுமுள்ள யாவரும் கல்விகற்று ராஜாங்க உத்தியோகமே தேட முயற்சி செய்வார்கள்.

ஒருவன் டெல்லகிராப்வேலை செய்யப்போவானேயானால் அவன் வீட்டின் அருகிலிருப்போர்கள் யாவரும் அதே வேலைக்குப் போக ஆரம்பிப்பார்கள்.

ஒருவன் போட்டகிராப் பிடிக்கக் கற்றுக்கொண்டு சீவிக்க வெளிவருவானாயின் அவனைக் காண்பவர்கள் எல்லோரும் அதே போட்டகிராப் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள்.

ஒருவன் வெற்றிலைப்பாக்குக் கடைவைக்க ஆரம்பிப்பானாயின் இருப்பவர்கள் யாவரும் வெற்றிலைக் கடைகளையே வைக்க ஆரம்பிப்பார்கள்.

ஒரு கைம்பெண் மூசுவுருண்டைக் கடை விற்க ஆரம்பிப்பாளாயின் மற்றுமுள்ள கைம்பெண்கள் எல்லாம் அம்மூசுவுருண்டைக் கடை விற்பதற்கே ஆரம்பிப்பார்கள்.

இத்தியாதி செய்கைகள் யாவும் தங்கள் சுயபுத்தியையுஞ் சுயமுயற்சியையும் விட்டு அன்னியர் முயற்சியும் கெட்டு அல்லல் படவேண்டியதாகின்றது.

ஒன்றைப்பார்த்து ஒன்றை செய்யும் விருத்திக்குறைவால் பூமியைப் பண்படுத்தி பயிரிடுதலையும் விருட்ச விருத்திகளையும் மறந்து ஒவ்வொருவர் வீடுகளின் அருகிலுள்ள பூமிகளை வெறுமனே பாழாக விட்டிருக்கின்றார்கள்.

தச்சுவேலைச் செய்பவன் மகன் தச்சுவேலையே செய்யவேண்டும், தச்சசாதி என்று சொல்லவேண்டும் என்பான். தையல்வேலைச் செய்பவன் மகன் தையல்வேலையே செய்யவேண்டும், தையற்கார சாதி என்று சொல்ல வேண்டும் என்பான். ஒருவன் தரிநெய்யும் சேணத்தொழில் செய்வானாயின் அவன்