பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73 / அயோத்திதாசர் சிந்தனைகள்


இவர்களது சாதிபேத மதபேதமற்ற நன்னோக்கம் மிக்க மேலாயதே என்று கருதி 1891 வருஷம் டிசம்பர்மீ முதலில் நீலகிரியில் ஓர்கூட்டமியற்றி சாதிபேதமற்ற திராவிடக் கனவான்களை தருவித்து நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாருக்கு அனுப்பவேண்டிய கருத்துகளை முடிவுசெய்து பொது நல விண்ணப்பம் என்னும் பெயர்கொடுத்து மேற்கண்டபடி. டிசம்பர்மீ 21உயில் அநுப்பினோம்.

அதனுள் அடங்கியக் கோரிக்கைகள் யாதெனில்:-

தற்காலந் தோன்றியுள்ள சாதிப்பெயர்கள் பூர்வத் தொழிற்பெயர்கள் என்றும் விளக்கி பறையர் என்னும் பெயர் சில பொறாமெய் உள்ளோரால் வகுக்கப்பட்டதென்றும், இப்பறையன் என்னும் பெயர் சகலருக்கும் பொருந்தும் என்றும்,

சாதிப்போரென்பதில் சாதி - பகுதி, ப் - சந்தி, ப் - இடைநிலை ஆர் - விகுதியாகக் கொண்டு சாதிப்போரென முடிந்தது.

சாதியாரென்பதில் சாதி - பகுதி, ய் - சந்தி ஆர் - விகுதியாகக் கொண்டு சாதியாரென முடிந்துள்ளவற்றுள்,

பறை - பகுதி, யகரமெய் - சந்தி, அன் - ஆண்பால் விகுதியாகக் கொண்டு பறையை உடையவன் பறையன் எனக் கூறுவதாயின், பறையன் எனும் பகுதியால் வாய்ப்பறை, தோற்பறை அடிப்பவர்களான சகல மனுக்களையும் பறையர்கள் என்றுக் கூறத்தகும் என்பனவற்றை விளக்கியும்,

இழிந்தச் செயல்களையுடையோர் இழிந்த சாதிகள் என்றும், உயர்ந்த செயல்களை உடையோர் உயர்ந்த சாதிகள் என்றும், நியாயச் செயலில் நடப்போர் நியாயச் சாதிகள் என்றும், தீயச் செயலில் நடப்போர் தீயர் சாதிகள் என்றும், அவனவன் செய்கைகளின் பேரிலும், தொழிற்களின் பேரிலும், சாதிக்கும் சாதிப்பின் பேரிலும் சாதிகள் தோன்றியுள்ளதை விளக்கியும் இப்பறையன் என்போரைத் தாழ்ந்த சாதிகள் என்று கூறுவதற்கு யாதோர் ஆதாரமும், யாதோர் அதிகாரமும் இல்லை என்றும், மற்றவர்களால் இவர்களைத் தாழ்ந்தவர்கள் என்று இழி கூறிவருவது அக்கிரமம் என்றும், வேண சரித்திர சாஸ்திராதாரங்களைக் காண்பித்து அடியில் குறித்துள்ள பத்து ஈடேற்றங்களை நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் இராஜாங்கத்தோருக்கு விளக்கிக் காண்பித்து இப்பத்து ஈடேற்றங்களையும் செய்விக்க வேண்டும் என்று கோரினோம்.

அப்பத்து கோரிக்கைகள்:-

இக்கூட்டத்தோரை பறையர் என்று கூறுவதற்கு யாதோர் ஆதரவும் கிடையாது. அப்படி இருந்தும் இவர்களைப் பறையர்கள் என்று கூறுவதுடன் இழிவாகக்கூறி மனம் குன்றச் செய்துவருகின்றார்கள், இவற்றுள் கேவல கல்வியும் நாகரீகமுமற்று மிருகச் செயலுக்கு ஒப்பான ஓர் மனிதன் கல்வியிலும், நாகரீகத்திலும், செல்வத்திலும் மிகுத்த ஒருவனைப் பறையன் என்றுக் கூறி இழிவுபடுத்துவதானால் அவன் மனம் குன்றி நாணமடைந்து சீர்கெட்டுப் போகின்றான். ஆதலின் பறையன் என்று இழிவுபடக் கூறுவோரை பழித்தல் அவதூரென்னும் குற்றத்திற்கு ஆளாகும் ஓர் சட்டம் ஏற்படுத்த வேண்டும் என்னும் முதலாம் கோரிக்கையும்,

இக்குலத்து ஏழைக்குடிகள் விருத்தியடையும்படி கல்விசாலைகள் பிரத்தியேகமாய் அமைத்து உபாத்தியாயர்களையும் இக்குலத்தோரில் நியமித்து மாணாக்கர்களின் சம்பளங்களையும் அரைபாகம் குறைக்கவேண்டியதென்னும் இரண்டாம் கோரிக்கையும், இக்குலத்துப்பிள்ளைகளுள் பிரவேச மெற்றிகுலேஷன் பரிட்சையில் தேறிய மூன்று பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கவேண்டியது என்னும் மூன்றாம் கோரிக்கைப்பும்,

இங்ஙனம் கல்வியில் தேறினோர்களில் ஒவ்வொருவரை இத்தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு கவர்ன்மென்று ஆபீசுகளிலும் உத்தியோகமளித்து ஆதரிக்க வேண்டும் என்னும் நான்காம் கோரிக்கையும்,