பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82 / அயோத்திதாசர் சிந்தனைகள்


கூலிவேலை செய்யும் ஏழைகளோ ஒருநாள் முழுவதும் எலும்பு முறியக் கஷ்டப்பட்டு மூன்றணா சம்பாதித்து முக்கால்படி அரிசி வாங்கிவிடுவார்களாயின் உப்பு, புளி, விறகு இவற்றிற்கு யாது செய்வார்கள். அல்லது இரண்டணாவிற்கு அரைபடி அரிசியை வாங்கிக்கொண்டு ஒரு அணாவை மேற்சிலவுக்கு வைத்துக் கொள்ளுவார்களாயின் புருஷன் பெண்சாதியுடன் இரண்டு மூன்று பிள்ளைகள் இருக்கின் ஒருவேளைப் புசிப்புக்கும் போதாது ஒடுங்கவேண்டியதாகும்.

ஏழைகள் இவ்வகையாகப் பசியால் ஒடுங்கிக் கொண்டுவருவார்களாயின் நாளுக்குநாள் க்ஷீணித்து நாசமடைவார்கள்.

ஏழைகள் யாவரும் நாசமடைந்துவிடுவார்களாயின் கனவான்களின் சுகமுமற்று கவலையே மிகுவது திண்ணமாகும்.

நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோருக்குக் கடைக்காரர்கள் விற்பனைச்செய்யும் நிலவரம்பற்ற வியாபாரமும், ஏழைக்குடிகள் படும் கஷ்டமுந் தெரியமாட்டாது.

சுதேசிகள் என்று வெளி தோன்றியவர்களே சுதேச வியாபாரிகளை நிலை வரம்பில் நிறுத்தவும், சுதேச ஏழைக்குடிகளைக் காப்பாற்றவும் வேண்டும்.

இத்தகைய முயற்சி சுதேசிகள் என்போரால் கூடாதாயின் வியாபாரிகள் தங்கள் மனம்போனப்போக்கில் வியாபாரஞ் செய்யும் விற்பனைகளையும், ஏழைக்குடிகள் படும் கஷ்டங்களையும் கருணைதங்கிய ராஜாங்கத்தோருக்கு விளக்கி அவர்களைக் கொண்டேனும் வியாபாரிகளை நிலை வரம்பில் நிறுத்தி ஏழைக்குடிகளின் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய வேண்டும்.

ஆதலின் நமது ராஜாங்கக் கவுன்சில் மெம்பர்களும், முநிசபில் கமிஷன் மெம்பர்களுமாகிய சுதேசிகள் யாவரும் ஏழைக்குடிகளின் கஷ்டங்களை நோக்கி ஆதரிக்கும்படி வேண்டுகிறோம்.

- 2:23; நவம்பர் 18, 1908 -


24. ஓர் வேஷபிராமண வேதாந்தி

1908 வருடம் ஜூன் மாதம் 28-ஆம் நாள் லண்டனில் வெளிவந்துள்ள நியூஸ் ஆப் ஓரல்ட் என்னும் பத்திரிகையிலுள்ள சங்கதியை அக்டோபர் மாதம் 29-ஆம் நாள் வெளிவந்த “பினாங்கக்கலாநிதி” பத்திரிகையில் கண்டு கவலையுற்றோம்.

அதாவது பிரமகுலத்தைச் சார்ந்தவரென்றும் கிருஷ்ணமூர்த்தியின் அவதாரத் தரித்த மகாத்துமா என்றும் பெயர் வைத்துக்கொண்டு சமஸ்கிருத பண்டிதரென்றும் வேதாந்த விஷயத்தில் அதி தேற்சியுள்ளவரென்றும் பம்பாய் நகரத்தில் சில ஐரோப்பியர்களை மாணாக்கர்களாக சேர்த்துவைத்துக் கொண்டு வேஷ பிராமண வேதாந்த நடிப்பு நடித்து வந்தனராம். இவரை மிக்கஞான வீரரென்று நம்பிய ஐரோப்பியராகும் மாக்ஸ்முல்லரவர்களும், மற்றுமுள்ளோரும் இவருக்கு வெங்கைய மகாத்துமா என்னும் மறுபெயரும் கொடுத்தார்களாம்.

இவர் பம்பாயில் செய்த படாடம்பம் போதாது ஐரோப்பாவுக்குச் சென்று அங்குள்ள மெறில்போரென்னும் நகரத்துள் ஓர் விசாலமுள்ள வீடெடுத்து சில ஐரோப்பிய புருஷர்களையும், இஸ்திரீகளையும் சேர்த்துக்கொண்டு வேதாந்தம் போதிப்பதாக விளம்பியவர் தனக்கு (டைப்) அடிக்கும் வேலைக்கு ஓர் பெண் கிராணிதேவை என்று விளம்பரப்படுத்தினாராம். அதைக்கண்ணுற்ற பிரான்சி சிறுமி ஒருவள் நேரில்வந்து கண்டவுடன் வேதாந்த மகாத்துமாவும் பெண்ணின் அருகில் உட்கார்ந்து சில சங்கதிகளைப் பேசிக்கொண்டே பெண்ணைக்கட்டி இருகப்பிடித்து முத்தமிட்டாராம். பெண்ணோ அதிக பயந்து மிரண்டோடி தனது பெற்றோரிடம் முறையிட பெற்றோர்கள் நீதியதிபரிடம் கொண்டு போய் விசாரித்து குற்றவாளிதானென்று தெரிந்தவுடன் நீதியதிபரால் ஆறுமாதம் கடுந்தண்டனை விதிக்கப்பெற்றராம்.