பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 93


அதனை வினவியக் கிறீஸ்தவர்கள் குருவை வணங்கி இக்கோவிலில் எப்போதும் இல்லாத வழக்கத்தை நீங்கள் ஏற்படுத்துவது நியாயமல்லவே என்றார்களாம். அதை வினவிய குருவானவருக்கு மிக்கக் கோபம் பிறந்து உங்கள் பெண்ணை சக்கிலிக்குக் கொடுப்பீர்களா என்று சம்மந்தமும் கோறினாராம். அவ்வார்த்தைக்கும் ஏழைக் கிறிஸ்தவர்கள் கோபிக்காமல் தாழ்ந்த உத்திரவைக் கொடுத்தும் குருவின் கோபம் அடங்காமல் கோவிலுள் செபஞ்செய்துக் கொண்டிருந்த ஓர் பெண்பிள்ளையின் முதுகில் வலுவாகத்தட்டி அழைத்துக் கொண்டுபோய் வெளியில் விட்டுவிட்டாராம் இவைகள் யாவற்றையும் கண்ணாறப் பார்த்திருந்த ஏழைக் கிறீஸ்தவர்கள் குருவின் பேரில் சினங்கொள்ளாது அதிகாரிகளிடம் பிரையாது கொடுத்திருப்பதாகத் தெரியவருகின்றது.

கத்தோலிக்குப் பாதிரிமார்களே இவைகளை சற்றுக் கண்ணோக்கிக் கவனியுங்கள். சென்னையில் பாதிரியாரை அடித்துக் கோர்ட்டுவழக்கில் இருப்பவர்களும் கிறிஸ்தவர்களே. புதுவையில் பாதிரியாரால் அவமானப்பட்டு கோர்ட்டிற்குப் போயிருப்பவர்களுங் கிறீஸ்தவர்களே. ஆதலின் இவ்விரு கிறீஸ்தவர்களுள் குருவை அடித்தவர்கள் யதார்த்தக் கிறீஸ்தவர்களா குருவுக்கு அடங்கினவர்கள் யதார்த்த கிறீஸ்தவர்களா. இவர்களுள் யாரால் கிறீஸ்துமார்க்கம் சிறப்படையும், பாதிரிகளே, பணவரவைப் பாராதீர்கள். ஞானவாட்களாம் குணவரவைப் பாருங்கள் - குணவரவைப்பாருங்கள்.

- 2:28; டிசம்பர் 23, 1908 -


32. முதல் மந்திரி லார்ட் மார்லியவர்களின் சீர்திருத்தத்தைப் பற்றி மற்றவர்கள் அபிப்பிராயங்களை வினவுதல்

சிற்சில பத்திராதிபர்கள் லார்ட் மார்லியவர்களின் சீர்திருத்தத்தைப் பற்றி மற்றவர்கள் அபிப்பிராயங்களைக் கேட்பதில் அவரவர்களது அனுபவங்களை ஆனமட்டிலும் வரைந்திருக்கின்றார்கள்.

அதாவது, உள்ளமக்களுக்குப் பலவகை பதார்த்தங்களை வட்டித்துப் புசிக்கச்செய்து அவை எவ்வகையதென்னில் அதிகக்கார்ப்பில் சுவை மிகுத்தவன் காரமில்லையென்பான். அதிக இனிப்பில் சுவைமிகுத்தவன் வெல்லமில்லை என்பான், அதிக உவர்ப்பில் சுவை மிகுத்தவன் உப்பில்லை என்பான், இஃது உருசி சகஜமாகும்.

பலதேச மக்கள் முன்னிலையில் பலதேச ஜந்துக்களையும், பலதேசப் பொருட்களையும் கொணர்ந்து வைத்து இவற்றுள் எவை சிறந்ததெனில்:-

நெய்தநிலவாசி மட்சங்களை சிறப்பிப்பான், முல்லை நிலவாசி பசுக்களை சிறப்பிப்பான், பாலைநிலவாசி உவர்மண்ணை சிறப்பிப்பான், குறிஞ்சி நிலவாசி கல்லுகளை சிறப்பிப்பான், மருதநிலவாசி தானியங்களை சிறப்பிப்பான்.

ஓர் அரசனை சங்கத்தில் நிறுத்தி உழைப்பாளியை அழைத்து ஐயன்செயல் எப்படி எனில் தன்னைப்போல் உழைப்பாளியாகக் காணில் அரசன் யானையேற்றங் குதிரையேற்றம் முதலியவைகளில் மிக்க வல்லவர் என்பான். சோம்பேரியாகக்காணில் இவர் யாதொரு தேகப்பியாசமும் அற்றவரென்பான்.

ஓர் வியாபாரிக்கு அவ்வரசனைக் காண்பித்து ஐயன்செயல் எவ்வகைத் எனில் தனது சரக்குகளை மிக்க வாங்கவும் கொள்ளவும் உள்ளவராயின் இவர் மெத்தப் பிரபு, சகல வஸ்துக்களின் சுகமும் அநுபவிக்கக்கூடியவரென்பான்.

தனது சரக்குகளை வாங்காதவராயின் இவர் ஒரு வஸ்துவையும் சுகிக்கவறியாராதலின் சோம்பி என்பான்.

பிச்சையேற்று சீவிப்போனுக்கு அரயனை சுட்டிக்காட்டி ஐயன்செயல் எவ்வகைத்தென்று கேட்க, இவன் சென்ற நேரம் எல்லாம் அரசன் பொருளுதவி செய்திருப்பானாயின் இவர் மகாப்பிரபு, சகலமும் உணர்ந்தவர், தாதாவென்பான்.

இவன் யாசகத்திற்குச் சென்ற நேரம் எல்லாம் தூறக்கொண்டேயிருப்பானாயின் இவன் நீச்சன், சண்டாளன் தாழ்குலத்தோனென்பான்.