பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94 / அயோத்திதாசர் சிந்தனைகள்


பல வித்துவான்களையும் அழைத்து ஓர் செய்யுளைக்கொடுத்து இதனமைப்பு எவ்வகை எனில், எழுத்திலக்கணம் மிக்க கற்றவன் ஒற்றுமிகுத்துள்ளதென்பான். சொல்லிலக்கணம் மிக்க கற்றவன் கூறியதைக் கூறியுள்ளான் என்பான்.

இத்தகைய பேதாதாரங்களால் ஒருவருக்குள்ள அபிப்பிராயங்கள் மற்றவர்களுக்கு பேதமாகவும், மற்றவர்கள் அபிப்பிராயங்கள் தங்களுக்கு பேதமாகவும் மாறி நிற்கும்.

எவ்வகையதென்னில், இந்து தேசத்தை இதுவரையுஞ் சீர்திருத்தி சுகநிலைக்குக் கொண்டு வந்த ஆங்கிலேயர் தங்கள் சுயதேயத்திற்குப் போய்ச்சேர்ந்து நம்மிடத்தில் சுயராட்சியத்தை கொடுத்து விட்டால் சுகமாக அநுபவிக்கலாம் என்பார் ஒருவகுப்பார்.

ஆங்கிலேயர்களே இத்தேசத்திருந்து இராட்சியபாரஞ் செய்வார்களாயின் சகலகுடிகளும் சுகம்பெற வாழலாம் என்பார் பலவகுப்பார். இவற்றுள் ஒருவர் வாக்கு செல்லுமா, பலர் வாக்கு செல்லுமா என்பதை பகுத்தறிய வேண்டியதே பதமன்றி ஒருவரெண்ணத்தில் மற்றோரை இணங்கச்செய்தல் இழிவேயாகும்.

- 2:29; டிசம்பர் 30, 1908 -


33. ஓர் இந்தியரை பிரிட்டிஷ் இராஜாங்க ஆலோசனை சங்கத்தில் ஓர் அங்கமாக சேர்த்தல்

தற்காலம் இவ்விந்து தேசத்தில் நிறைவேறிவரும் இராஜாங்க ஆலோசனை சங்கத்தில் ஓர் இந்தியரை நியமிக்க வேண்டும் என்கின்ற ஏற்பாட்டில் கருணை தங்கிய ராஜாங்கத்தார், எக்சிகூட்டிவ் மெம்பருக்காக இந்தியரை தெரிந்தெடுக்குங்கால், அவர் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரைப்போல் தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமில்லாதவரும், தன்சாதி புறசாதி என்னும் பற்றில்லாதவரும், தன் மதம் புறமதமென்னும் பேதம் இல்லாதவரும், சகல சாதியோர் மீதும் அன்பு பாராட்டுபவரும் பொதுநன் மெய்க்கு உழைப்பவருமாயுள்ள ஒருவரைத் தெரிந்தெடுத்து நியமிக்கவேண்டும் என்று கோருகிறோம்.

அங்ஙனமின்றி இந்தியரொருவர் எம்.ஏ., எம்.எல்., தேர்ந்தவராயிருப்பினும், ஜர்ஜ் உத்தியோகம் செய்பவராயிருப்பினும், ஐ.பி.எஸ். பட்டம் பெற்றவராயிருப்பினும் சீர்மைக்குப் போயிருக்குங்கால் சாதிபேதமில்லை, சென்னைக்குவந்தவுடன் சாதிபேதம் உண்டு என்று சமயம் பாராட்டுகிறவர்களை சேர்த்துக் கொள்ளுவதினால் தங்கள் சாதி தங்கள் சமயத்தோருக்கு வேண்டியவர்களாயிருந்து தங்களுக்கு அப்புறப்பட்ட சாதியோருக்கும் சமயத்தோருக்கும் இடுக்கங்களை உண்டு செய்து விடுவதுடன் இராஜாங்கத்தோருக்கும் இடுக்கங்களைக் கொண்டு வந்துவிடுவார்கள்.

ஆதலின் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் மிக்க சீர்தூக்கி இந்நியமனத்தை முடிப்பார்கள் என்று நம்புகிறோம்.

- 2:29; டிசம்பர் 30, 1908 -


34. காங்கிரஸ் : இவ்வருஷங் காங்கிரசுக்கு வந்திருந்த கனவான்களின் கருணைநிலை யிதேபோலும்

டிசம்பர் மாத விடுமுறைகாலத்தில் இச்சென்னையில் கூடிய காங்கிரஸ் கமிட்டிக்குப் பிரிதிநிதிகளாக வந்திருந்த பெரியோர்களில் சிலர் நெட்டாலிலுள்ள இந்தியர்களுக்கு அனந்த துன்பங்கள் நேரிட்டு நசிந்துவருவதுபோல் பரிந்து பேசிய விஷயங்கள் யாவும் ஆட்சரியமாய் இருக்கின்றது.

காரணம் - விவேகமிகுத்த ஞானவான்களின் நூற்களுக்கும், குடிகளை அடக்கியாளும் தர்மத்திற்கும் ஆதியாக நிற்பது அரசர்களின் செங்கோல் எனப்படும்.