பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96 / அயோத்திதாசர் சிந்தனைகள்


உள்சீர்திருத்த சொற்பக் கூட்டத்தோரால் பெருங்குடிகளுக்கு நேரிட்டுவரும் கஷ்ட நிஷ்டூரங்களையும், இழிவையும், நீக்குதற்கியலாது.

இராஜாங்க சீர்திருத்தமே அவற்றை அடக்கி ஆளும். அதாவது, சாதிபேதமற்ற திராவிடர்கள் கருணைதங்கிய ராஜாங்கத்தோர் உதவியால் பி.ஏ., எம்.ஏ., முதலிய கெளரதாபட்டங்களைப் பெற்றும், இராயபாதூர் முதலிய கெளரதாபட்டங்களைப் பெற்றும், செருசதார், ரிஜிஸ்ட்டரார் முதலிய அந்தஸ்தான உத்தியோகங்களைப் பெற்றும், கனதன வியாபார சங்கங்களைப் பெற்றும் சுகசீவிகளாக வாழ்வார்களாயின் அவர்களைப் பார்க்க சகியாத பொறாமெயுள்ள சாதிபேதமுடையோர் அவர்கள் வீடுகளின் எதிரிலும், ஓர் புறங்களிலும் பிச்சையேற்பதுபோல் பறையன், பறையன் என்ற இழிவானப் பாட்டைப் பாடிக் கொண்டு திரிகிறதும் சிலர் கூத்து மேடைகளில் பறையன் வந்தான், பறைச்சி வந்தாள் என்று இழிவாக நடித்துக் காட்டுகிறதமாகிய அவதூறு, இழிவுகூறல் என்னும் செயல்களை அடக்கியாள்வதற்கு உள் சீர்திருத்த சங்கத்தோரால் இயலுமோ, ஒருக்காலுமாகா. இத்தகையக் காங்கிரஸ் கமிட்டியார்களே முயன்று பெருந்தொகைக் குடிகளுக்கு மற்றோர்களால் நேரிட்டுவரும் இழிவையும், அவதூறுகளையும் இராஜாங்கத்தோருக்கு விளக்கி அவற்றை அடக்கக்கூடிய சட்டங்களை ஏற்படுத்தி சாதிபேதமுள்ளோருக்கும், சாதிபேதமில்லாருக்குமுள்ள விரோத சிந்தைகளை அகற்றி ஒற்றுமெய் உண்டாக்கிக் கொண்ட பின்னர், அக்கூட்டத்திற்கு நாஷனல் காங்கிரசென்னும் பெயரை அளிப்பார்களாயின் பெரும் புகழையும் கீர்த்தியையும் பெருவார்கள். அங்ஙனமின்றி அறுபது லட்ஷத்திற்கு மேற்பட்டக் குடிகளை அர்த்தநாசஞ்செய்து அடியோடு துலைக்கும் வழியைத் தேடிக்கொண்டு நாங்களும் நாஷனல் காங்கிரஸ் கூட்டத்தார் என்று கூறுவது நியாயவிரோதமேயாம்.

- 2:30: சனவரி 6, 1909 -


35. காங்கிரஸ் கூட்டத்தில் ம-அ-அ-ஶ்ரீ பி.பி. சுந்திரம் ஐயரவர்களின் பிரேரேபணை

சென்னையில்கூடிய காங்கிரஸ் கமிட்டியாரின் தீர்மானங்களுள் பதினோராவது தீர்மானத்தில் 1908 வருஷம் 7-வது ஆக்ட்டையும், 1908 வருஷம் 14-வது ஆக்ட்டையும் காலதாமதமின்றி ரத்து செய்துவிடவேண்டும் என்று ம-அஅ-ஸ்ரீ பி.பி. சுந்திரம் ஐயர் அவர்கள் பிரேரேபித்திருக்கின்றார்.

அதாவது மேற்கூறியுள்ள இரண்டு சட்டமும் சில புத்தியீனர்கள் புத்தியில்லா சில கொடுந்தொழில்களைச் செய்ய ஆரம்பித்தபடியால் அதை அடக்குவதினிமித்தம் இவ்வவசரச்சட்டம் ஏற்பட்டது. இச் சட்டம் வெளிவந்தவுடன் அந்த துஷ்டர்கள் யாவரும் அடங்கி போய்விட்டார்கள் ஆதலின் அவ்விருசட்டங்களையும் எடுத்துவிட வேண்டும் என்று வேணவரையில் பேசி முடித்திருக்கின்றார்.

இவரது கருத்தை தூரதேயப் பிரிதிநிதிகளிருவர் ஆமோதித்தும் பேசியிருக்கின்றார்கள் இவர்களது கருத்தும் விஷயபேதங்களுந் தேறவிளங்கவில்லை.

பத்திரிகைகளின் வாயலாகவும், கூட்டங்களிலும் இராஜநிந்தைகளேனும், இராஜ தூஷணைகளையேனும் செய்பவர்களை திட்டமாகத் தெரிந்துக்கொண்டவுடன் விசாரிணையின்றி தண்டிக்கத்தக்க விதிகளை வகுத்திருக்கின்றார்கள்.

அத்தகையச் சட்டமானது இராஜ துரோகிகளை மட்டிலும் பாதிக்குமேயன்றி இராஜவிசுவாசிகளை ஒருக்காலும் பாதிக்கமாட்டாது. அங்ஙனம் இருப்ப அதனை எடுத்துவிட வேண்டும் என்னும் காரணம் விளங்கவில்லை.