பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100 / அயோத்திதாசர் சிந்தனைகள்


கொண்டதின் பேரில் யாதோராட்சேபனையுமின்றி அவர்களுக்கு சுயராட்சியம் அளித்து ஆதரித்துவருகின்றார்கள்.

அதுபோல் இந்துதேசக் குடிகள் யாவரும் ஒரேசாதியினராய் இருப்பார்களாயின் சுயராட்சியம் இராஜாங்க ரீதியாய் கேட்டவுடன் கொடுத்திருப்பார்கள்.

ஆயினும் சுயராட்சியம் என்று சொல்லாமலே சுதந்திரங்களை அநுபவிக்கும்படி இத்தேசத்துள்ள சகல சாதியோருக்கும் சுதந்திரத்தை அளித்துவிட்டார்கள்.

இத்தகைய சுதந்திரத்தை ஒருவருக்கொருவர் சகோதிரவாஞ்சையினின்று பாதுகார்த்துக் கொள்ளுவதாயின் இதுவே பெருத்த சுயராஜரீகமாகும்.

வடகலை ஐயருடன் தென்கலை ஐயர் பொருந்தமாட்டார். பட்டவையருடன் இஸ்மார்த்தவையர் பொருந்தமாட்டார். கொண்டைகட்டி முதலியார் மற்றும் முதலியாருடன் பொருந்தமாட்டார். துளுவவேளாளர், காரைக்காட்டு வேளாளரை பொருத்தமாட்டார். தமிழ்ச் செட்டியார் வடுக செட்டியாரைப் பொருந்தமாட்டார். காஜுலு நாயுடு தெலுகுபாடை, இடைய நாயுடைப் பொருந்தமாட்டார். இவ்வகை பொருந்தாதிருப்பினும் சமயம் நேர்ந்தபோது சகலரும் ஒன்றாய்க் கூடிக்கொண்டு இவர்களால் தாழ்ந்தவர்கள் என்று ஏற்படுத்திக் கொண்ட பறையர்களைப் பொருந்தமாட்டார்கள்.

இத்தியாதி சாதிபேதங்களையும், குணபேதங்களையும் நூற்றாண்டுகளாய் அறிந்துவந்த பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் சகல சாதியோரும் பொருந்தியாளும் இராஜரீகத்தைத் தடுத்து சுயராஜரீகத்தை எந்த சுயஜாதிக்கு அளிப்பார்கள். இத்தியாதி பேதங்களையும் நன்கறிந்த நமது சோதிரர்கள் சுயராட்சியம் சுயராட்சியம் என்று வீணே கூறுவது சுகமின்மெயேயாம்.

சொல்லொண்ணா சாதிகள் நிறைந்த இச்சுதேசத்தில் மகா கனந்தங்கிய லார்ட் மார்லி அவர்கள் சகல சாதியோருக்கும் அளித்துள்ள சுதந்திரமே சுயராட்சியம் எனப்படும். இத்தகைய பேதமற்ற சுயராட்சிய சுதந்திரத்தை விடுத்து வேறு சுயராட்சியம் வேண்டும் என்பது உமிகுத்தி மணிதேடுவதே போலாகும்.

- 2:32; சனவரி 20, 1909 -


39. பழயராஜரீக அநுபவமறியாதவர்கள் புது ராஜரீகத்தைப் போற்றமாட்டார்கள்

நமது இந்துக்களின் முற்கால ராஜரீகத்தில் குடிகளின் சுகமும், அவர்களின் ஆதிபத்தியமும் எவ்வகையிலிருந்தது. அதன்பின் மகமதியர் ஆளுகையில் குடிகளின் சுகமும், அவர்கள் ஆதிபத்தியமும் எவ்வகையிலிருந்தது. தற்காலம் நம்மை ஆண்டுவரும் பிரிட்டிஷ் ராஜரீகத்தில் குடிகளின் சுகமும், அவர்கள் ஆதிபத்தியமும் எவ்வகையிலிருக்கின்றதென்று தேற விசாரித்துத் தெளிவோமாயின் இந்துக்கள் ராஜரீகத்தில் இராயன் எதிர்வருகையில் எத்தகையப் பிரபுவாயிருப்பினும் வஸ்திரத்தை இடுப்பில் இருகக்கட்டிக் கொண்டு அரயன்ரதம் ஏகுமளவும் கைகூப்பி ஓரமாக நிற்கவேண்டியது. மற்றும் அனந்த ஒடுக்கங்களுண்டு, எழுதவேண்டுமாயின் விரியும்.

மகமதியர் துரைத்தனத்திலோ கிஞ்சித்து பிரபுத்துவமுள்ளவர்கள் வீடுகடோரும் நாபாப்புகளுக்கு ஊழியஞ்செய்யும் யானை குதிரைகளைப் போஷிக்கவேண்டியதேயாகும். மற்றும் விசாரிணையற்ற செயல்களை விளக்கவேண்டுமாயின் விரியும்.

பிரிட்டிஷ் ராஜரீகமோ அவ்வகையின்றி தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட குடிகளின் சுகத்தை தங்கள் சுகம்போல் கருதி ஆனந்திப்பதும், தங்கட் குடிகளுக்கு நேரிடுந் துக்கங்களை தங்கள் துக்கம்போல் கருதி ஆதரிப்பதுமாகிய நீதியின் செங்கோலைத் தாங்கினவர்கள்.