பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அரசர்களுக்குக் (கிங்கென்றும்) யுத்தவல்லவர்களுக்கு (சோல்ஜர்களென்றும்) வியாபாரிகளுக்கு (மெர்ச்சென்டுகளென்றும்) பயிரிடுவோர்களுக்கு (அக்கிரிகல்ச்சரர்களென்றும்) வானசாஸ்திரிகளுக்கு (அஸ்டிரானமர்கள் என்றும்) அவரவர்கள் தொழிலுக்கும், செயலுக்கும் பெயர்கொடுத்திருப்பது போல் தமிழ்பாஷையில் வல்லவர்களான சமணமுனிவர்களால் மேற்கூறியுள்ள தொழிற்பெயர்களையும், செயற்பெயர்களையும் வகுத்து அழைத்து வந்தார்கள்.

இத்தகையத் தொழிற்பெயர்களையும், செயற் பெயர்களையும் பெற்றிருந்தபோதிலும் ஒவ்வொருவருக்குள்ள அன்பும், ஐக்கியமும் மாறாமல் திராவிடர்கள் என்னும் பொதுப்பெயரால் அழைக்கப்பெற்று திராவிடராஜன் மகளை சிங்களராஜன் மணம் புரிந்துக் கொள்ளுவதும், சிங்களராஜன் மகளை வங்காளராஜன் மணம் புரிந்துக் கொள்ளுவதும், வங்காளராஜன் மகளை சீனராஜன் மணம் புரிந்துக் கொள்ளுவதுமாகிய பேதமற்று ஒற்றுமெயுற்று வாழ்ந்துவந்தார்கள்.

அஃதெவ்வகையில் எனில் நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தாராகும் ஆங்கில அரசன் மகளை இருஷியராஜன் மணம் புரிவதும், ருஷியராஜன் மகளை பிரான்சிராஜன் மணம்புரிவதும், பிரான்சிராஜன் மகளை ஜெர்மனிராஜன் மணம் புரிவதுமாகிய பேதமற்றச் செயல்போல் இவ்விந்துதேச மன்னர்களும் கொள்வினை, கொடுப்பினை, உண்பினை, உடுப்பினை முதலிய விஷயங்களில் யாதொரு பேதமில்லாமல் ஒற்றுமெயுற்று வாழ்ந்து வந்தார்கள்.

அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி என்பதற்கிணங்க பூர்வ சுதேசக்குடிகளாம் திராவிடர்களும், வேளாளத் தொழிலாளியின் மகளை வாணிபத் தொழிலாளனும், வாணிபத் தொழிலாளியின் மகளை மன்னு தொழிலாளனும் மணம் புரிந்து ஒருவருக்கொருவர் பேதமின்றி சுகவாழ்க்கையிலிருந்தார்கள்.

இத்தகைய ஒற்றுமொற்று சிறப்படைந்த வாழ்க்கைக்கும் ஒழுக்கத்திற்கும் புத்ததன்ம சீர்திருத்தங்களே ஆதாரமாகும்.

அஃது எவ்வகையதென்னில் தற்காலமுள்ள சீனதேச பௌத்தர்களும், ஜப்பான் தேச பௌத்தர்களும், மங்கோலிய தேசப் பௌத்தர்களும், திபெத்திய தேசப் பெளத்தர்களும், பிரம்மதேசப் பௌத்தர்களும், இலங்கா தேசப் பௌத்தர்களுமாகிய உலகத்தோற்ற மனுக்களுள் அரையே அரைக்கால் பாகம் பெளத்த மாக்கள் கொள்வினை, கொடுப்பினை உண்டனை முதலியவற்றுள் யாதொரு பேதமுமின்றி வாழ்க்கைச் சுகம் பெற்றிருப்பது போல் சுதேசிகளாகும் திராவிட பௌத்தர்களும் கொள்வினை, கொடுப்பினை, உண்பினை முதலிய விஷயங்களில் யாதாமொரு பேதமின்றி ஒற்றுமெயுற்று சுகசீவிகளாக வாழ்ந்து வந்தார்கள்.

அத்தகைய பேதமற்ற வாழ்க்கையை அநுசரித்தே நாளது வரையில் சாதிபேதமற்ற வாழ்க்கையிலிருந்து பலதேசங்களுக்கும் களங்கமில்லாமல் சென்று சகலருக்கும் உபகாரிகளாக விளங்கிவருகிறவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களேயாகும்.

சாதிபேதமற்ற செயலைக்கொண்டும் முயற்சியும் உபகாரமுமுற்ற குணத்தைக் கொண்டும் இவர்களை புத்த தருமத்தைச் சார்ந்தவர்கள் என்று ஏற்றுக் கொள்ளலாமோ எனில் இன்னும் அனந்த ஆதாரங்களுண்டு.

அதாவது - அந்தோனி, ஜோசேப், மநுவேல் என்னும் பெயர்களைப் பெற்றபோது கிறீஸ்துவின் மார்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்பார்கள். உசேன் சாயப், மீராசாயப், காசிம் சாயப் என்னும் பெயர்களைப் பெற்றபோது மகமது மார்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்பார்கள். கிருஷ்ணன் நாராயணன், சீனிவாசன் என்னும் பெயர்களைப் பெற்ற போது விஷ்ணு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பார்கள். ஏகாம்பரன், வேலாயுதன், சுப்பிரமணியன் என்னும் பெயர்களைப் பெற்றபோது சிவமதத்தைச் சார்ந்தவர்கள் என்பார்கள். அவரவர்கள் பெயரால் அவரவர்கள் மதக்குறிப்பை அறிந்துக் கொள்ளுவதுபோல்,