பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 117


சாதிபேதமற்ற திராவிடர்களுக்குள் நாட்டுப் புறங்களில் வேளாளத் தொழில் செய்வோர்களுக்கு பெரும்பாலும் முத்தன், முநியன், கறுப்பன், செல்லனென்னும் பெயர்களையே வழங்கி வருகிறார்கள். இப்பெயர்கள் யாவும் புத்தபிரானுக்குரிய ஆயிரத்தெட்டு நாமங்களில் சிலதுகளாகும்.

பின்கலை நிகண்டு

முத்தன் மாமுநி சுறுத்தன் / முக்குடைச் செல்வன் முன்னோன்

- 2:21; நவம்பர் 4, 1908 -

சாதிபேதமற்ற திராவிடர்கள் புத்ததன்ம சார்பால் மேற்குறித்தப் பெயர்களை நாளதுவரையில் வழங்கிவந்தபோதிலும் புத்தர் பெயர்களில் ஒன்றாகும் கடவுள் என்னும் பெயரையே நாளதுவரையில் சிந்தித்தும் வருகின்றார்கள்.

இவ்வகையாய் புத்தரை சிந்தித்துவருவதுமன்றி புத்ததன்மத்தைச் சார்ந்த அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளருக்குங் கன்மகுருக்களாகவும் வழங்கி வந்தார்கள்.

முன்கலை திவாகரம்

வள்ளுவர் சாக்கையரெனும் பெயர்மன்னர்க் குன்படு / கருமத் தலைவர்க்கொக்கும்.

இத்தகைய கன்மகுருக்கள் வடநாட்டில் பிரபலமாயிருந்ததை புத்தபிரான் பிறந்த வம்சவரிசையோர் பெயராலும், வடநாட்டிலுள்ள சாக்கையர் தோப்பின் பெயராலும் தெரிந்துக் கொள்ளுவதுடன், தென்னாடு திருவனந்தபுறச்சார்பில் வள்ளுவர் நாடென்று வழங்கும் நாட்டின் பெயராலுந் தெரிந்துக் கொள்ளலாம்.

வள்ளுவர், சாக்கையர், நிமித்தகர் என்னும் பெயர் பெற்றிருந்த கன்மகுருக்களே புத்ததன்மத்தைத் தழுவிய அரசர்களாகும் சீவகன், மணிவண்ணன் முதலியவர்களுக்கு கன்மகுருக்களாயிருந்து காரியாதிகளை நடாத்திவந்த அநுபவசரித்திரங்களை அடியிற் குறித்துள்ள காவியங்களாலும் அறிந்துக் கொள்ளலாம்.

சீவகசிந்தாமணி

பூத்த கொங்கு போற் பொன்கமந்துளா / ராச்சியார் நலக் காசெறூணனான்
கோத்த நிதித்தலக் கோதைமார்பினான் / வாய்த்த வன்னிரை வள்ளுவன் சொனான்

சூளாமணி

நிமித்தக னுரைத்தலு நிறைந்த சோதியா
னுமைத்தொகையிலாததோ ருவகை யாழ்ந்துகண்
ணிமைத்தில னெத்துணை தொழுதுமீர்மலர்
சுமைத்தொகை நெடுமுடி சுடரத்தூக்கினான்.

வேறு

தலைமகன்றானக்காகச் சாக்கைய / நிலைமைகொண்மனைவியா நிமிர்ந்தபூந்துணர்
நலமிகு மக்களா முநியர் தேன்களா / குலமிகுகற்பகங் குளிர்ந்துதோன்றுமே.

இவ்வகையாய் புத்ததன்மத்தைத் தழுவிய அரசர், வணிகர், வேளாளரென்ற மூன்று தொழிலாளர்களுக்குங் கன்மகுருக்களாக விளங்கினவர்கள் வள்ளுவர்களன்றி புத்தசங்கஞ்சேர்ந்து அறஹத்துக்களாகி ஞானகுருக்களாக விளங்கியவர்களும் வள்ளுவர்களே என்பதற்கு நாயனாரியற்றியுள்ள திரிக்குறள் ஒன்றே போதுஞ் சான்றாம்.

புத்தசங்கஞ்சார்ந்த சமணமுனிவர்களாலியற்றியிருந்த இலக்கிய இலக்கணங்களையும், ஞான நூற்களையும், சித்து நூற்களையும், சோதிட நூற்களையும், வைத்திய நூற்களையும் பரம்பரையாகத் தங்கள் கையிருப்பில் வைத்திருந்து அச்சிட்டுப் பிரசுரப்படுத்தியவர்கள் பெரும்பாலும் சாதிபேதமற்ற திராவிடர்கள் என்றே அந்தந்த நூன்முகங்களில் விளங்குகிறபடியால் அந்நூற்களின் தோற்றத்தாலும் இவர்களை புத்ததன்மத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறத்தகும்.

- 2:22; நவம்பர் 11, 1908 -