பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 127


வந்ததுமன்றி ஒடிங்கிப் பிச்சையேற்றுத் தின்றுவந்தவர்கள் அதிகாரப்பிச்சையில் ஆரம்பித்துக் கொண்டார்கள்.

மடங்களைச் சார்ந்த பிராமணர்களாகும் ஞான குருக்களும், சாக்கையர். வள்ளுவர், நிமித்தகர் என்னும் கன்மகுருக்களும், பாணர், கவிவாணரென்னும் வித்தியா குருக்களுமாகிய இவர்கள் கலை நூற்கள் யாவற்றிலும் தேர்ச்சியுள்ளவர்களாய் இருந்தார்கள்.

மற்றப் பெருந்தொகைக்குடிகளும் சிற்றரசர்களும் கலை நூற் பழக்கமின்றி கைத்தொழிலிலும், வியாபாரத்திலும், வேளாண்மெய்த் தொழிலிலும் மிக்க விருத்திபெற்றவர்களா இருந்தார்கள்.

அத்தகையக் கல்விக்குறைவால் மிலைச்சர்களின் மித்திரபேதம் அறியாது அவர்களையே அந்தணரென்றும், பிராமணரென்றும் எண்ணி அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்துவந்ததுமன்றி அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளருக்கும் கன்மகுருக்களா இருந்து தன்மகன்மங்களை நிறைவேற்றிவந்த வள்ளுவர், சாக்கையர், நிமித்தகர்கள் என்போர் தொழிலையும் அவர்களையே செய்யும்படி விட்டுவிட்டார்கள்.

வேஷபிராமணர்கள் தோன்றிய காலம் ஆதியந்தணர்கள் என்று கூறும் அறஹத்துக்கள் யாவரும் ஓடுகள் கையிலேந்தி பிச்சையேற்று உண்ண வேண்டியதுடன் தங்கட் கைகளில் பொக்கிஷங்களையேனும், வஸ்திரங்களை ஏனும் நாளைக்கு மறுநாளைக்கென்று சேர்த்துவைக்கலாகாதென்பது புத்தசங்கத்தோர் நிபந்தனையாகும்.

இவ்வேஷபிராமணர்களோ பொருளாசை மிகுந்தோர்களாதலின் தங்களுக்குத் தங்கள் குடும்பத்தோருக்கும் புசிப்புக்கும் வேண்டுமென்னும் ஆதரவுக்காய் பூமிகளை மானியமாகப்பெற்றுக் கொண்டுள்ள காலம் கிறீஸ்துப்பிறந்து நான்காம் நூற்றாண்டுகளுக்குப்பின்பே ஏற்பட்டுள்ளதாய் சிலாசாஸனங்களிலுள்ள ஆதாரங்களைக் கொண்டு பிரோபசர் பந்தார்க்கர் இந்திய சரித்திரத்தில் வரைந்திருக்கின்றார்.

- 2:29; டிசம்பர் 30, 1908 -

மிலைச்சர் ஆரியரென்ற கூட்டத்தார் வேஷபிராமண விருத்தி பெற்ற விவரம்

ஆயிரத்தி ஐந்நூறு வருடத்திற்குட்பட்ட இந்திரர் தேசமென்னும் இவ் விந்தியாவில் வந்து குடியேறிய மிலைச்சர்கள் நாளுக்குநாள் கல்வியற்ற சிற்றரசர்களையும், பெருங்குடிகளையுந் தங்கள் வசப்படுத்திக் கொண்டு அந்தணர், அரசர், வணிகர், வேளாளரென்ற தொழிற் பெயர்களை மேற்சாதி கீழ்ச்சாதி என்னும் சாதிப்பெயர்களாக மாற்றி கல்வியற்றோர் வாக்கால் வழங்கும் பாதையில் விட்டு வடநாட்டில் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரரென்னும் நான்கு தொழிற்பிரிவோருள் ஒவ்வொருவருக்கென்று வகுத்துள்ள அறுவகைத் தொழிலையுஞ் சரிவரச்செய்து வருபவர்களை சண் ஆளர் சண்ணாளரென சிறப்பித்து வழங்கிவந்தார்கள்.

வடநாட்டு பௌத்தர்கள் மிக்கக் கல்வியில் தேர்ந்தவர்களாயிருந்தபடியால் இம்மிலைச்சரின் வேஷபிராமணச் செய்கைகளை அறிந்து அடித்துத் துறத்த ஆரம்பித்துக் கொண்டார்கள்.

அதை தங்கள் வஞ்சநெஞ்சத்தில் பதித்துக் கொண்டு தங்கள் வேஷபிராமணத்தை அறிந்து துரத்தும் அறுதொழிலாளரை சண் ஆளர் சண்டாளரென்று கூறிவந்து தங்களை அடுத்தக் கல்வியற்ற சிற்றரசர்களுக்கும், பெருங்குடிகளுக்கும் சண்டாளர்கள் என்றால் ஓர்வகைத் தாழ்ந்த சாதியார், நீங்கள் அவர்களைத் தீண்டலாகாது நெருங்கிப் பேசலாகாதென்று கற்பித்துவந்தார்கள். இவர்கள் கற்பனைகளை மெய்யென்று நம்புங் கல்வியற்றக் குடிகள் சண் ஆளராம் மேன்மக்கள் வார்த்தைகளை நம்பாமல் கீழ்மக்களாம் மிலைச்சர்களின் வார்த்தைகளை நம்பிக்கொண்டு சண் ஆளரென்னும் சிறப்புமொழியை குணசந்தியால் சண்டாளர் சண்டாளரென்றும் இழிந்த குலத்தோரென்றும் வழங்கிவந்தார்கள்.