பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138 / அயோத்திதாசர் சிந்தனைகள்


திராவிட பௌத்தர்களாகும் மேன்மக்களுக்குப் பஞ்சமரென்னும் பெயர் வாய்த்த விவரம்

நாற்பது வருடங்களுக்குமுன் டம்பாச்சாரி விலாசம் ஆடியவர்களுக்குள் சிலர் தங்கள் விளம்பரப் பத்திரிகைகளில் அவர்களுடையக் கூத்துமேடைக்குள் பஞ்சமர்கள் வரப்பட்டாதென்று பிரசுரஞ் செய்திருந்தார்கள்.

அவற்றைக் கண்ணுற்ற சாதிபேதமற்ற திராவிடர்கள் தங்கள் பத்திரிகைகளில் பஞ்சமர்கள் என்றால் யார், பஞ்சபாண்டவர் வம்மிஷத்தாரா, பஞ்சநதியோரங்களில் வாழ்ந்தவர்களா, பஞ்சுபோல் பரக்கப்பட்டவர்களா, பஞ்சைகளென்னும் ஏழைகளா, பஞ்சபூதியங்கள் சரிவர வமைந்தவர்களா என்று உசாவினார்கள். சாதிபேதமுள்ள ஒருவரும் அதற்குத் தக்க மறுமொழி கூறவில்லை.

அதன்பின் 1891 வருஷம் காங்கிரஸ் கமிட்டியாருக்கு சாதிபேதமற்ற திராவிடர் யாவரும் ஒன்றுகூடி, தங்களைப் பூர்வீக திராவிடர்கள் என விளக்கி ஓர் விண்ணப்பம் அநுப்பினார்கள். அவர்கள் அதற்கு யாதொரு பதிலும் கூறவில்லை.

1892 வருஷம் கூடிய மகாஜனசபைக்கு பூர்வீக திராவிடர்களால் ஓர் பிரதிநிதியை அநுப்பி கலாசாலை விஷயமாகவும், பூமிகளின் விஷயமாகவும் (ரெக்கமெண்ட்) கேட்டபோதும் பறையர், சாம்பான், வலங்கையரென்னும் பெயர்களைக் குறிக்காமல் பூர்வீக திராவிடர்கள் என்றே குறிப்பித்திருந்தார்கள்.

அக்காலத்தில் பள்ளிக்கூடங்களில் வாசிக்கும் சிறுவர்கள் யாவரும் பறையன் என்னும் பெயரை ஒப்புக் கொள்ளாமலும் இருந்தார்கள்.

இந்த எழியகுலத்து சிறுவர்களுக்குக் கருணைதங்கிய ராஜாங்கத்தார் (பிரைமெரி) வகுப்பு வரையில் இலவசக் கல்விகற்பிக்கும்படி ஆரம்பித்தபோது இந்த பிள்ளைகளுக்கென்று பெயர் வைத்தவர்கள் சாதிபேதமற்ற எழிய பிள்ளைகளின் இலவச கலாசாலை என வகுத்திருப்பார்களானால் பொதுவாகவும், இராஜாங்கத்தோர் செய்தது பேரூபகாரமாகவும் விளங்கும். அங்ஙனமின்றி இக்கூட்டத்தோருக்கு எதிரிகளாகவும், சத்துருக்களாகவும் விளங்குவோரின் சிலர் அபிப்பிராயங்களைக் கேட்டுக் கொண்டு பஞ்சமர்கள் கலாசாலை என்று வகுத்துவிட்டார்கள். ஆயிரத்தி ஐந்நூறு வருடகாலமாக இந்த திராவிட பௌத்தர்களை தலையெடுக்கவிடாமல் தாழ்த்தி பலவகை இடுக்கங்களைச் செய்துவந்த சத்துருக்களாகிய வேஷபிராமணர்களுக்கு பருப்பில் நெய்யைவிட்டதுபோலும், பாலில் பழம் விழுந்ததுபோலும் மென்மேலும் ஆனந்தம் பிறந்து தங்கள் வஞ்சங்கள் யாவையும் சரிவர நிறைவேற்றிவிடுவதற்காய் தோட்டிகள் பிள்ளைகளுக்குக் கல்விசாலை வகுத்து அதையும் பஞ்சமர் பாடசாலை எனக் குறித்துவிட்டார்கள்.

இவ்வகைக் கருத்து யாதெனில் - இன்னுஞ் சிலகாலங்களுக்குப்பின் தோட்டிகள் பறையர்கள் யாவரும் ஒருவகுப்பாரென்றுங் கூறி இன்னுந் தலையெடுக்கவிடாமல் நாசஞ்செய்வதற்கேயாம்.

பார்ப்பாரென்பவர்களுக்கும், பறையரென்பவர்களுக்கும் விரோதமுண்டென்பதை பார்ப்பார்கள் வார்த்தையினாலேயே சில துரைமக்கள் அறிந்தும் சிற்சில விசாரிணைகளும் நடந்திருக்கின்றது.

- 2:38; மார்ச் 3, 1909 -

பார்ப்பார்களென்போர்களுக்கும் பறையர்கள் என்போருக்கும் பூர்வவிரோத முண்டென்பதை சில துரைமக்கள் உணர்ந்த விவரம்

1853 வருஷம் சாணாரக்குப்பத்தைச் சார்ந்த அதாவுலத் கோர்ட்டில் இஞ்சினியர் உத்தியோகத்திற்காக வாசித்திருந்த டபல்யூ. ஆரிங்கடன் என்னும் துரையும் மற்றுமோர் துரையும் முநிஷிகளிடம் தமிழ் வாசித்துக் கொண்டார்கள். அவ்விரண்டு முநிஷிகளும் பார்ப்பார்களாயிருந்து இருதுரை மக்களுக்கும் தமிழ்க்கற்பித்து வருங்கால், ஐயா தங்களிடம் ஊழியஞ் செய்பவர்கள் பறையர்கள் தாழ்ந்த ஜாதியார், நீச்சர்கள் இவர்களை நாங்கள் உள்ளுக்கு சேர்ப்பதில்லை, தீண்டுகிறதுமில்லை உங்களுடைய காலத்தில் ஊருக்குள் வந்து