பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142 / அயோத்திதாசர் சிந்தனைகள்


சிறப்பாகவும் மும்முரமாகவும் பரவிவந்த கிறீஸ்துமார்க்கம் நாளுக்குநாள் பரவுதல் குன்றி வருங்காரணம் யாதென்று மிஷநெரி சங்கத்தோரும் கவனித்தாரில்லை. தன்னலரன்னிய ரென்னும் சாதிபேதமற்றவர்களும் சகலசாதியோரும் தங்களைப்போல் வாழ்கவேண்டும் என்னும் கருணைமிகுத்தோர்களுமாகிய பிரிட்டிஷ் துரைத்தனத்தின் உத்தியோகஸ்தர்களாக ஆதியில் இவ்விடம் குடியேறிய துரைமக்கள் யாவரும் சாதிபேதமற்ற திராவிடர்களின்மீது கருணைவைத்து சாதிபேதமுள்ளோர் வார்த்தைகளை சட்டை செய்யாமல் தாழ்ந்தசாதி என்போருக்கே, கல்வியின் விருத்தியும் செல்வ விருத்தியும் செய்து ஈடேற்றி வந்தார்கள்.

மற்றும் பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்களாக வந்து தோன்றிய துரைமக்களும் அதேயன்பு பாராட்டி ஏழைமக்களை ஈடேற்றஞ் செய்திருப்பார்களாயின் தற்காலம் சாதிபேதமுள்ளோர்கள் எல்லாம் ஒன்று கூட்டிக்கொண்டு சுயராட்சியம் கேட்க ஆரம்பித்தார்களே அவ்வகையானக் கூட்டங்களை கூடியும் இருக்கமாட்டார்கள். அந்த சப்தமும் பிறந்திருக்கமாட்டாது.

பின்பு வந்துதோன்றிய துரைமக்கள் யாவரும் பெரியசாதிகள் என்போர் வார்த்தைகளையே பெரிதென்றெண்ணிக் கொண்டும் தாழ்ந்த சாதி என்றழைக்கப்பட்டார்களை தாழ்ந்தவர்கள் என்றே எண்ணிக் கொண்டும் தலையெடுக்கவிடாமலும் ஏழைகளை ஈடேற்றாமலும் விட்டுவிட்டார்கள்.

தற்கால துரைமக்கள் யாவரும் ஏழைமக்களின் ஈடேற்றத்தைக் கவனியாமல் பெரியசாதி என்போர்களையே பெருமைப்படுத்தி வந்தபடியால் செய்நன்றிக்கு மாறுதலாக சுயராட்சிய சுதந்திரம் வேண்டும் என்று வெளிவந்து துரைமக்களை துறத்த ஆரம்பித்துக் கொண்டார்கள்.

- 2:41; மார்ச் 24, 1909 -

தற்காலம் பறையர்கள் என்று அழைக்கப்படுவோர்கள் யாவரும் பூர்வபௌத்தர்கள் என்பதின் விவரம்

இந்த சாதிபேதம் வைத்துக் கொண்டிருப்பவர்களின் தயாள குணத்தையும் புண்ணியச்செயலையும் ஆங்கில வித்வான்கள் நன்றே தெரிந்திருக்கின்றார்கள்.

அதாவது உலகத்தில் கடவுளென்றும் சுவாமி என்றும் வழங்கும்படியான மெய்ப்பொருள் சகலருக்கும் பொதுவாயதென்று ஓர் வேடனும் புகலுவான், வில்லியனும் புகலுவான். ஆனால் இச்சாதி பேதமுள்ளவர்களுக்கு மட்டிலும் அஃது பொதுவாயதன்றென்று கூறி சாதி சாமிகளை வகுத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த சுவாமிகளில் சிவனென்னுஞ் சுவாமியைக் கும்பிடும் கூட்டத்தோரிடமாயினும், விஷ்ணுவென்னும் சுவாமியைக் கும்பிடும் கூட்டத்தோரிடமாயினும், ஓர் மகமதியன் அல்லது ஓர் யூரோப்பியன் சென்று உங்கள் சிவன் என்னும் சுவாமியை அல்லது விஷ்ணுவென்னும் சுவாமியைத் தொழுது முத்திபெற ஆவல் கொண்டேன் என்னையும் உங்கள் கூட்டத்திற் சேர்த்து உங்கள் கோவிலுக்குள் பூசிக்கயிடந்தர வேண்டும் என்றால் சேர்ப்பார்களோ இடங்கொடுப்பார்களோ, ஒருக்காலும் கிடையாவாம்.

இத்தகையப் பொதுவாய சுவாமிகளைத் தொழும் விஷயத்தில் இடம் கொடாதவர்களும் சேர்க்காதவர்களுமாகிய புண்ணிய புருஷர்கள் அரசாங்க விஷயத்தில் மற்றவர்களை சேர்ப்பர்களோ, உத்தியோக விஷயங்களில் மற்றவர்களை சேர்ப்பர்களோ, உண்பனை விஷயங்களில் மற்றவர்களை சேர்ப்பர்களோ, உடுப்பினை விஷயங்களில் மற்றவர்களை சேர்ப்பர்களோ ஒருக்காலும் சேர்க்கப்போகிறதில்லை.

இவ்வகை சாதித் தலைவர்களின் குணங்களை படம் செயல்களையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் கண்டுவருங் கருணைதங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தார் அவர்கள் வார்த்தைகளையே பெரிதென்று நம்பிக்கொண்டு அவர்களுக்கே அந்தஸ்தான உத்தியோகங்களைக் கொடுத்து வருவதினால் சாதிபேதமற்ற திராவிடர்களும் யூரேஷியர்களும், மகமதியர்களும் சுதேசிக் கிறிஸ்தவர்களும் சுகமடைவதற்கேதுவில்லாமல் போகின்றது.