பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 143


சாதிபேதமற்ற திராவிடர்களோ பெரும்பாலும் ஆஸ்பிட்டல் அசிஸ்டென்டுகளாயிருந்த காலத்தில் வியாதியஸ்தர்களை பாதுகாத்தும் அன்புடன் சிகிட்சை செய்தும் வந்ததுபோல் தற்கால சாதிபேதமுள்ள ஆஸ்பிட்டல் அசிஸ்டென்டுகள் அன்பு பாராட்டுகின்றார்களா என்பதை கருணைதங்கிய ராஜாங்கத்தார் கவனித்தார்களில்லை.

இவ்வகையாகவே ஒவ்வோர் உத்தியோகங்களிலும் பிரவேசிக்காமல் தடுக்க விடாமுயற்சிகளினின்று கபடற்ற நெஞ்சமும் சாதிபேதமற்றக் கூட்டமுமாகிய பௌத்தர்களையே பாழ்படுத்தி வருகின்றார்கள்.

வேஷபிராமணர்களால் பறையரென்று தாழ்த்தப்பட்ட கூட்டத்தோர்கள் யாவரும் பூர்வபௌத்தர்கள் என்பதை நாளதுவரையிலவர்கள் வழங்கிவரும் பெயர்களினால் அறிந்துக் கொள்ளலாம்,

எவ்வகையிலென்னில், ஜோசேப், பீட்டர், ஜான், என்னும் பெயர்களைக்குறித்து இவர்கள் எம்மதத்தைச் சார்ந்தவர்களாயிருக்க வேண்டும் என்பாராயின் அப்பெயர்களைக் கொண்டே கிறீஸ்து மார்க்கத்தோரென்பார்கள்.

அதுபோல் அல்லிகான், அசேன்கான், தாவுத்கான் என்பார்களாயின், அப்பெயர்களைக் கொண்டே முகமது மார்க்கத்தானென்பார்கள்,

இராமானுஜன், மணவாளமுநி, பார்த்தசாரதி என்பார்களாயின் அப்பெயர்களைக்கொண்டே தற்காலவைணவ மார்க்கத்தோரென்பார்கள்.

வடிவேலன், வஜ்ஜிர்வேலன், சூரவேலன் என்பார்களாயின் அப்பெயர்களைக் கொண்டே தற்கால சிவசமயத்தோரென்பார்கள்,

அவர்கள் பெயர்களைக் கொண்டே மார்க்கங்களை அறிந்து கொள்ளுவதும் மார்க்கங்களிலிருந்தே பெயர்கள் தோன்றுவதுபோல், பூர்வமுதல் நாளதுவரையில் இக்குலத்தோருக்கு, முத்தன், முனியன், கருப்பன், செல்லன், என்னும் பெயர்கள் வழங்கும் ஆதாரங்களே முதலானதாகும்.

பின்கலை நிகண்டு - தெய்வப்பெயர்தொகுதி

முத்தன், மாமுநி, கருத்தன், முக்குடைச் செல்வன் முன்னோன்

இத்தேசதிராவிட பௌத்தர்கள் யாவரும் புத்தபிரானை, கடவுளென்றே சிந்தித்துவந்ததுமன்றி தற்காலம் வேஷபிராமணர்களால் நசுக்குண்டு நிலை குலைந்திருந்தபோதிலும் அக்கடவுள் கடவுளென்னு மொழியையே மனனித்தும் வருகின்றார்,

புத்தபிரானுக்கே கடவுளென்னும் பெயர் வழங்கி வந்தவற்றை அடியில் குறித்துள்ள நூலாதாரங்களால் அறிந்துக் கொள்ளலாம்.

சூளாமணி

ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை / போதியக் கிழவனை பூமிசையொதிங்கினை
போதியங்கிழவனை பூமிசையொதிங்கிய / சேதியென் செல்வநின்றிருவடி வணங்கினம்.

ஈதன்றி திருவள்ளுவ நாயனாரியற்றியுள்ளத் திரிக்குறள் பாயிரத்தின் பத்துப்பாடலிலும் புத்தபிரானையே சிந்தித்து அவற்றிற்குக் கடவுள் வாழ்த்து என்று கூறியுள்ளதையும் கண்டுக் கொள்ளலாம், இஃது இரண்டாவது ஆதாரமாகும்.

- 2:42; மார்ச் 31, 1909 -

இக்குலத்தோருக்குரிய தன்மகன்மங்கள் யாவையும் நாளதுவரையில் நிறைவேற்றி வருவோர் வள்ளுவர், சாக்கையர், நிமித்தகரென்னும் கன்மகுருக்களேயாம்.

அத்தகைய கன்மகுருக்களே பூர்வ பெளத்த மார்க்க அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளருக்குங் கன்மகுருக்களாய் இருந்தவைகளை அடியில் குறித்துள்ள பூர்வகாவியத்தினால் அறிந்துக் கொள்ளலாம்.

சீவகசிந்தாமணி

பூத்த கொங்குபோற் பொன்சுமந்துளா / ராச்சியார் நலத்தா செறூணனான்
கோத்தநித்திலக் கோதைமார்பினான் / வாய்த்தவன்னிரை வள்ளுவன் சொனான்.

முன்கலை திவாகரம்

வள்ளுவர் சாக்கையரெனும் பெயர் மன்னர்க் / குன்படு கருமத் தலைவர்க் கொக்கும்.