பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144 / அயோத்திதாசர் சிந்தனைகள்


இஃது மூன்றாவது ஆதாரமாகும்.

இக்குலத்தோர் பூர்வமுதல் நாளதுவரையில் நிறைவேற்றிவரும் விவாககாலங்களில் பௌத்தமார்க்கச் சின்னங்களாகும்,

வெள்ளையங்கி, வெள்ளைநடுக்கட்டு, வெண்பிறைமுடி என்னும் வெள்ளைப்பாகை, வெள்ளைக்குதிரை, வெள்ளைக்குடை, வெள்ளைக்கொடி, வெண்சாமரை, சக்கிரவர்த்திகளின் ஆயுதமாகும் வாகுவல்லயம், கொடை, செடி முதலியப் பதினெட்டு விருதுகளுடன் ஊர்வலம் வந்து விவாக காரியங்களை நிறைவேற்றிவருகின்றார்கள்.

வீரசோழியம்

மேலிய வெண்குடைச் செம்பியன் / வீரராஜேந்திரன்றன்
நாவியால் செந்தமிட் சொல்லின் / மொழிமுத னன்னுதலே.

சிலப்பதிகாரம்

திங்கண்மாலை வெண்குடையோன் / சென்னி செங்கோல துவோச்சி

சூளாமணி

எல்லாவிருது மீனும் பொழிலின / தெல்லாநிதியு மியன்றவிடத்தின்
தெல்லாவமரர் கணமுமிராப்பக / வெல்லாபுலமு நுகர்தற்கினிதே.

வேஷப்பிராமணர்களாலும் மற்றுஞ் சாதிபேதமுள்ளோர்களாலும் இக்குலத்தோர் நசுங்குண்டு பலவகைத் துன்பங்களை அனுபவித்து எழிய நிலையிலிருந்தபோதிலும் பூர்வ புத்தமார்க்க அரச சின்னங்களை விடாது தங்கள் விவாககாலங்களில் சத்துருக்கள் காணும்படியே பதிநெட்டு விருதுகளையும் அனுபவித்து வந்தார்கள். நாளதுவரையிலும் அநுபவித்து வருகின்றார்கள்.

இஃது நான்காவது ஆதாரமாகும்.

இத்தேசமெங்கும் பெளத்தமார்க்கம் நிறைந்திருந்தகாலத்தில் செல்வரென்றும், செல்வராயரென்றும், செல்வராசரென்றும், தியாகராயரென்றும், தியாகராசரென்றும் வழங்கும்படியான புத்தபிரான் சிலையை யானையின் மீதேற்றி அரசனாயினும் இக்குலத்தோர் கிராமத்தலைவனாயினும் கூடவே யானையின் மீது உட்கார்ந்து போதி விழாக்காலங்களில் ஊர்வலம் வருவது வழக்கமாயிருந்தது.

சூளாமணி

நகரமாங்கெழுந்தன னரலுஞ் சங்கொடு
முகரவாய் மணிமுர சதிருமூரிநீர்
மகரமால் கருங்கடன் மருளுந் தானையான்
சிகரமால் சாலைமேற் செல்வன் தோன்றினான்.

இதை அனுசரித்தே நாளதுவரையில் திருவாளுரைச்சார்ந்த செல்வராயர் ஆலய உற்சவகாலத்தில் இக்குலத்துப் பெரியதனக்காரன் ஒருவனை சுவாமியுடன் யானைமீதேற்றி வளர்வலம் கொண்டுவருகின்றார்கள். அவ்வாலயத்தில் இவர்கள் மூன்றுநாள் உள்பிரவேசித்து வணங்கும்படியான அதிகாரம் நாளதுவரையிலும் உண்டு. இவ்வநுபவத்தாலும் இக்குலத்தோர் புத்த மார்க்கத்தோர் என்பதை ரூபிக்கும்

ஐந்தாவது ஆதாரமாகும்.

பூர்வ பெளத்தமார்க்க அரசர்களாகும் அசோகன், சந்திரகுப்தன், நந்தன், சீவகன், மணிவண்ணன், பாண்டியன் முதலிய அரசர்கள் முதல் மருதனார், பெருந்தேவனார், சாத்தனார், திருத்தக்கர் ஈறாகவுள்ளக் குடிகள் யாவரும் தங்கடங்கட் பெயர்களினீற்றில் ஐயர், ராவ், முதலி, நாயுடு, செட்டி, எனும் தொடர்மொழிகள் யாதொன்றும் சேர்த்துவந்தது கிடையாது.

அம்மார்க்கப் பெயர்களை அனுசரித்தே நாளது வரையிலும் இக்குலத்தோர் இராமன், இலட்சுமணன், கோவிந்தன், கோபாலனெனும் பெயர்களை வைத்துக் கொண்டபோதினும் அவைகளினீற்றில் ஐயர், ராவ், முதலி, நாயுடு, செட்டி என்னும் தொடர்மொழிகளை சேர்ப்பது கிடையாது பூர்வ புத்தமார்க்க மக்கட் பெயர்களையும் தற்காலம் இவர்கள் வழங்கிவரும்