பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146 / அயோத்திதாசர் சிந்தனைகள்


இரண்டாவது இவர்கள் சிந்தித்துவரும் தெய்வப்பெயராலும்,

மூன்றாவது இவர்கள் தன்ம கன்மங்களை நிறைவேற்றிவரும் கன்மகுருக்களாலும்,

நான்காவது இவர்கள் விவாக காலங்களில் அநுபவித்துவரும் சின்னங்களாம் விருதுகளினாலும்,

ஐந்தாவது திருவாரூரில் இவர்கள் யானையின் மீது ஊர்வலம் வரும் அதிகாரத்தினாலும், செல்வராயர் ஆலயத்தில் உள்பிரவேசித்து பூசிக்கும் சுதந்தரத்தினாலும்,

ஆறாவது பூர்வ பௌத்தர் தங்கட் பெயர்களினீற்றில் யாதொரு தொடர்மொழியுஞ் சேர்க்காது வாழ்ந்துவந்ததுபோல் இவர்களுந் தங்கட் பெயர்களினீற்றில் யாதொரு தொடர்மொழியும் சேர்க்கா பெயர்களினாலும்,

ஏழாவது இவர்களுக்குள்ள சாதிபேத, உணவுபேதங்களற்ற செயல்களாலும்,

எட்டாவது தங்களை அடுப்போரை ஆதரிக்கும் அன்பின் பெருக்கத்தாலும்,

ஒன்பதாவது கணிதமோதுதலிலும், வைத்திய அநுபவத்தினாலும்,

பத்தாவது சமணமுநிவர்கள் இயற்றியிருந்த கணித நூற்களையும், வைத்திய நூற்களையும், நீதி நூற்களையும், ஞான நூற்களையும் தங்கடங்கள் கையிருப்பில் வைத்திருந்து தற்காலம் அச்சுக்கு வெளிக்குக் கொண்டுவந்த சாஸ்திர சுதந்தரத்தினாலும் நிரூபித்திருக்கின்றோம்.

- 2:44: ஏப்ர ல் 14, 1809 -

வேஷப்பிராமணர்களால் இக்குலத்தோர் நிலைகுலைந்து பலவகைத் துன்பங்களை அநுபவித்து பௌத்தசாஸ்திரிகள் நிலைகுலைந்தும், சாஸ்திரங்கள் சிதலுண்டும் நசிந்துபோனவைபோக கையிருப்பில் மிகுந்திருந்த சாஸ்திரங்களாகும் குமாரசாமியம், மணிகண்டகேரளம், சோதிடலங்காரம், வருஷாதி நூல், மற்றுமுள்ள கணித நூற்களை வள்ளுவ மார்க்கலிங்க பண்டாரமவர்களாலும், மணிகண்ட கேரள முதலியவைகளை குழந்தை வேலுபரதேசியவர்களாலும், நாயனார் திரிக்குறள், நாலடி நானூறு, அறநெறித்தீபம் இவைகளை ஜர்ஜ் ஆரங்டியன் துரை பட்லர் கந்தப்பன் அவர்கள் கையிருப்பில் வைத்திருந்து தமிழ்ச்சங்கத்து அதிபர் கனம் எலீஸ்துரையவர்களிடங்கொடுத்து மானேஜர் முத்துசாமிப் பிள்ளையவர்களால் அச்சிட்டு பரவச்செய்திருக்கின்றார்.

சித்தர்களின் பாடல்களை மயிலை குழந்தைவேலு பண்டாரமவர்கள் அச்சிட்டு வெளிக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

வைத்திய காவியம், சிவவாக்கியம், இரத்தின கரண்டகம் இவைகளை புதுப்பேட்டை திருவேங்கிடசுவாமி பண்டிதரவர்களாலச்சிட்டு வெளிக்குக் கொண்டு வந்திருக்கின்றார்.

போகர் எழுநூறு, அகஸ்தியர் இருநூறு, சிமிட்டு ரத்தனச்சுருக்கம், பாலவாகடம் முதலிய வைத்திய நூற்களை வீ. அயோத்திதாச கவிராஜ பண்டிதரவர்களால் அச்சிட்டு வெளிக்குக் கொண்டுவந்திருக்கின்றார்.

இதுவுமின்றி பூர்வமுதல் நாளது வரையில் கையேட்டுப்பிரிதிகளாய் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையில் கற்பித்துவரும் அரிச்சுவடி, வரிக்குவாய்பாடம், பெயர்ச்சுவடி, ஆத்திச்சுவடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, மூதுறை, திவாகரம், நிகண்டு, எண்சுவடி, நெல்லிலக்கம், பொன்னிலக்கம், மற்றுமுள்ள சிறந்த தமிழ் தாற்களை பூர்வ விவேகமிகுத்த குடும்பத்தோர் நாளதுவரையில் தங்கடங்கட் கையிருப்பில் வைத்திருக்கின்றார்கள்.

இச்சென்னை ராஜதானியில் ஆதியாகத் தமிழ்ப் பத்திரிகை ஒன்றை வெளியிட்டவர்களும் இக்குலத்தோர்களேயாகும்.

அதாவது - புதுப்பேட்டை திருவேங்கிடசுவாமி பண்டிதர் “சூரியோதய” ப்பத்திரிகை என்னும் ஒன்றை வெளியிட்டிருந்தார். இரண்டாவது சுவாமி அரங்கையதாஸவர்களால் “சுகிர்தவசனி” என்னும் பத்திரிகை வெளியிட்டிருந்தார். மற்றும் இக்குலத்தோருள் அனந்த பத்திரிகைகளும்,