பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 149


அஃது முழுப்பொய்யென்றே துணிந்து கூறுவோம். எங்ஙனமென்னில் (கமான்டிரன்சீப்) என்று ஆங்கிலேய பாஷையில் வழங்குவது படைத்தலைவனுக்குரிய பெயரேயாகும்.

அத்தகையப் பெயரை பிச்சையிரந்துண்ணும் ஓர்தடிச் சோம்பேறி வைத்துக்கொண்டு நான் படைத்தலைவன் நான் படைத் தலைவனென்று கூறுவானாயின் அவனை விவேகிகள் படைத் தலைவனென ஏற்பரோ ஒருக்காலும் ஏற்க மாட்டார்கள்.

அதுபோல் பிராமணர், அந்தணரென்னும், பெயர் சகலபற்றுக் களையுமறுத்து சாந்தம் நிறைந்த மகா ஞானிகளுக்குரியவைகளாகும் அதனுட்பொருளை உணராது குடிகெடுப்பு, வஞ்சினம், பொருளாசை மிகுத்தக் குடும்பியொருவன் தன்னை பிராமணனென்றும், அந்தணரென்றும், கூறுவானாயின் அப்பெயரை விவேகிகள் ஏற்பரோ, ஒருகாலும் ஏற்கமாட்டார்கள்.

புத்த பிரானிருக்குங்கால் வேஷ பிராமணர்களிருந்தார்கள் என்னும் பொய் சரித்திரங்கள் தோன்றிய காரணம் யாதென்பீரேல்,

புத்தபிரான் பிறந்து வளர்ந்து பரிநிருவாண முற்றதேசம் இந்த தேசமேயாதலின் சீன யாத்திரைக்காரரும், ஜெர்மன் யாத்திரைக்காரரும் பர்மா யாத்திரைக்காரரும், இவ்விடம் வந்து புத்தரது திவ்விய சரித்திரத்தையும் அவரது தர்மங்களையும், கேட்டு எழுதிக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது.

அக்காலத்தில் மிலேச்சர்களாம் ஆரியர்கள் பிராமண வேஷமிட்டுக் கொண்டிருந்தவர்களாதலின் தங்கள் பிராமண வேஷம் புத்தர் காலத்திலேயே இருந்ததுபோலும் அவரிடம் தருக்கம் புரிந்து பௌத்தர்களாகிவிட்டது போலும் சில கட்டுக்கதைகளை வரைந்து கொடுக்க அவைகளை மெய் சரித்திரமென்று நம்பிக்கொண்டுபோய் தாங்கள் வெளியிட்டுள்ள புத்ததன்மங்களிற் சேர்த்துவிட்டார்கள்.

பகவன் வேஷ பிராமணர்களுடன் வாதிட்டாரென்று வரைந்திருந்த போதினும் வேஷ பிராமணர்களின் வேதவாக்கியங்களைக் கொண்டேனும், இன்னின்ன வினாக்களுக்கு இன்னின்ன விடைகள் அறிந்தார்களென்றும் ஓர் மொழியுங் கிடையாது. வெறுமனே பிராமணர்கள் புத்தரிடம் வாதிட்டார்கள். புத்தரவர்கள் போதித்த தன்மத்தைக் கேட்டு பிராமணர்கள் பௌத்தர்களானார்களென்பதே கதாசுருக்கம்.

இத்தகையக் கட்டுக்கதைகளால் வேஷபிராமணர்களும், வேஷ பிராமணர்களின் வேதங்களும், புத்தபிரானுக்கு முன்பேயிருந்ததென்று சமயோசிதமாறுபாடுகளை உண்டு செய்து சத்திய தன்மங்களைப் பாழ்படுத்தி அசத்திய தன்மத்தை மெய்ப்பிப்பதற்குக் கடைகாலிட்டுருக்கின்றார்கள்.

இதற்குப் பகரமாய் கபிலர் காலத்தில் வேஷபிராமணர்களிருந்துள்ளார்களென்னுங் கட்டுக்கதை அகவலும் ஒன்றை வரைந்து வைத்திருக்கின்றார்கள்.

- 2:46; ஏப்ரல் 28. 1909 -

கபிலரகவலையும், அதன் உட்கருத்தையும் இவ்விடம் விளக்கவேண்டிய காரணம் யாதென்பீரேல் :-

இக்கபிலரகவலிலுள்ளக் கதைகள் யாவும் பொய்க்கதைகளென்று தெள்ளறவிளங்குமாயின் புத்தபிரான்காலத்திலும் வேஷ பிராமணர்களிருந்துள்ளார்களென்னும் பொய்க் கதைகளின் விவரம் வெள்ளிடை மலை போல் விளங்கும்.

கபிலர் அகவலேற்படுத்த நேரிட்ட காரணமோவெனில், தன்னை அன்னிய சாதியானென்று பிராமணர்கள் கூறி உபநயனங்கொடாது தடை செய்ததேயாகும்.

இத்தகைய உபநயனத்தை ஞானாசிரியர்கள் மாணாக்கர்களுக்கு அளிக்குங்கால் அவனது ஞான விசாரணையின் அதி தீவிரத்தையும்,