பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168 / அயோத்திதாசர் சிந்தனைகள்


மந்திரவாதிகளின் முழுநோக்கம் அரசைப்பாதுகாத்தலிலும் படை நிறப்புவதிலுமிருக்கவேண்டியது அவசியமாதலின் ஓர்கால் சத்துருக்களாயிருப்பவர்களே நீடித்தச் சத்துருக்களாயிருப்பார்களா. அன்றேல் மித்துருக்களாயிருப்பவர்களே நீடித்த மித்துருக்களாயிருப்பார்களா என்று அவரவர்களுக்குள்ள அவாக்களையும் குணாகுணங்களையும் சீவிக்கும் செயல்களையும் நன்காராய்ந்து படைநிறப்பல் வேண்டும்.

அதாவது பூமியின்மீதும், பொருளின் மீதும் அவாமிகுத்தோர்களைப் படைகளிற் சேர்ப்பதாயின் அவாவின் மிகுதியே அரசுக்கு பின்னந்தேடி அழித்துவிட்டுத் தாங்களே அனுபவிக்கத்தக்க ஏதுக்களைத் தேடுவார்கள்.

குணங்களில் மிஞ்சினால் கெஞ்சுவதும், கெஞ்சினால் மிஞ்சுவதுமாகிய எட்டினாற் குடிமியைப் பிடித்துக்கொள்ளுவதும் எட்டாவிட்டால் பாதத்தில் விழுபவர்களாகவும் இருப்பார்களாயின் எவ்வகையாலும் அரசக்குக் கெடுதியைத் தேடுவார்கள்.

சீவிக்கும் விஷயங்களில் வித்தையையும் புத்தியையும் விருத்திசெய்து தேகங் களைக்கினும் சோர்வடையாது உழைக்கக்கூடிய ஏதுக்களின்றி பொய்யைச்சொல்லி வஞ்சினத்தாலும் சூதுகளினாலும் சோம்பேறிகளாய்த் திரிந்து சீவிக்குங்கூட்டத்தோர்களாய் இருப்பார்களாயின் ஏழைக்குடிகளை ஏமாற்றிப் பிழைப்பதற்காய் தங்களை அடக்கியாளும் அரசைக் கெடுத்து விட்டு அநுபவிக்கும் வழிகளைத் தேடுவார்கள்.

இத்தகைய விஷயாதிகள் யாவையுந் தேற ஆய்ந்தறிந்து படை நிறப்பல்வேண்டும்.

இவர்களுள் இராஜவிசுவாசத்திலும் இராஜகாரியாதிகளிலும் ஊக்கம்வைத்து உழைப்பவர்களையே எக்காலும் நம்பலாம். இராஜ விசுவாசமின்றி இராஜ காரியாதிகளிலும் ஊக்கமின்றி உழைப்பிலும் முயற்சியின்றி அரசையும் அமைச்சையும் அடுத்து வசியவார்த்தைகளாடி தன்னை அதிஜாக்கிரதையுடையக் காரியஸ்தனைப்போல் அபிநயித்துக் காட்டுவோனை அரசர் அப்புற வேலைக்கேனும் அமர்த்தலாகாது.

ஏகசாதி, ஏக மதம், ஏகபாஷையோரென்று சொல்லுவோர் மத்தியில் இத்தியாதி ஆராய்ச்சிகளும் தேற விசாரிப்புகளும் வேண்டியதிருக்க பலசாதி, பலமதம், பலபாஷையுள்ளவர்கள் மத்தியில் அரசுபுரிவோரும், அமைச்சரும் எத்தகைய ஜாக்கிரதையில் அவரவர்கள் குணாகுணச் செயல்களை அறிந்து சகலரையுஞ் சுகமடையச் செய்யலாமென்று மேலுமேலுந் தங்களுடைய ஆராய்ச்சியில் நிறுத்தல் வேண்டும்.

- 3:8; ஆகஸ்டு 4, 1909 -

ஒரு பாஷைக்காரர்களாகுங் கூட்டத்தாருக்குள் நல்லினத்தோரென்றும், தீயினத்தோரென்றுங் கண்டறியவேண்டியது விசேஷமாம்.

தீயவினத்தோர் யாவரெனில்:- வஞ்சித்தல், குடிகெடுத்தல், பொய்யைச் சொல்லி பொருள் பறித்தல், தனது ஒரு குடும்பம் பிழைப்பதற்கு பத்துக்குடும்பங்களை பாழாக்குதல், எக்காலும் அடுத்தவர்களைக் கெடுக்கத்தக்க எண்ணங்கொள்ளுதல், தங்களுக்கு வேண்டிய பிரயோசனத்திற்காய் எதிரியை அடுத்துக்கேட்டபோது அவர்களால் கொடாவிட்டால் எவ்விதத்தாலும் அவர்கள் குடியை கெடுக்க ஆரம்பித்தல், தங்களுக்காக வேண்டிய காரியங்கள் நிறைவேறும் வரையில் எதிரியின் பாதத்தைப்பற்றி தொழுதிருந்து தனக்கான காரியம் நிறைவேறியவுடன் எதிரியின் குடிமியை எட்டிப்பிடித்துக் கெடுத்தல் ஆகிய வன்நெஞ்சத்தை நன்நெஞ்சம் போல் நடித்துக்காட்டுவோர் தீய இனத்தவர்களாகும்.

நல்லினத்தோர் யாவரென்னில், கல்விகற்பித்தவர்களை தந்தைபோல் கருதும் நன்றியறிந்தவர்களும், வித்தை கற்பிப்பவர்களை தந்தைபோல் கருதும் நன்றியறிந்தவர்களும், உத்தியோகமளித்துக் காப்பவர்களை தந்தைபோல் கருதும் நன்றியறிந்தவர்களும், தாங்கள் சுகமடைவதுபோல் சகலருஞ் சுகமடைய வேண்டுமென்று முயற்சிப்பவர்களும், புல் விற்றேனும் வண்டியிழுத்தேனும்