பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170 / அயோத்திதாசர் சிந்தனைகள்


காரணங் கண்டுணர்ந்து சகலருஞ் சுகமுற்று வாழும் விதிவிலக்குகளை வகுத்தல் வேண்டும்.

விதிவிலக்குகளாவது:- தங்களது ராஜகீய சங்கங்களிலும், உத்தியோக சாலைகளிலும் சகலசாதியோரும் சமரசமாய் விற்றிருந்து உத்தியோகங்களை நடாத்தி சுகம்பெறவேண்டிய சட்டதிட்டங்களையும், அவற்றிற்கு மாறுபட்ட வேறுபாட்டுகளை விலக்கவேண்டிய சட்டதிட்டங்களையும் அமைத்தல் வேண்டும்.

ஒருதேசத்துள் ஒரேசாதி, ஒரேபாஷைக்காரர்களிருக்கின்றார்கள். அவர்களை ஆளுவதுபோல் பலசாதி, பலபாஷை, பலமதம் உள்ளவர்களையும் ஆளவேண்டுமாயின் ஒவ்வொருவரின் தேசாச்சாரம், மதாச்சாரம், சாதியாசாரம் இவற்றுள் ஒற்றுமெயற்றப் பிரிவுகள் இருந்து கொண்டேயிருக்கும்.

அத்தகையப் பிரிவுள்ளோர்களை ஆளுவோர் மதபேதம், சாதிபேதமற்ற மதியூகிகளாகவும், சகலமக்கள்மீதும் அன்பு பாராட்டுகிறவர்களாகவும், நீதிநெறியில் மிக்கோர்களாகவும் உள்ளவர்களையே தெரிந்தெடுத்து பிரதம காரியாதிகளில் அமைத்து சகலசாதி, சகல மதக்குடிகளையும் ஆதரித்தல் வேண்டும்.

தங்கள் சாதியே உயர்ந்த சாதி மற்ற சாதிகள் தாழ்ந்த சாதிகளெனக் கூறித்திரியும் சாதிகர்வம் உள்ளோர் இடத்தில் பிரதம உத்தியோகங்களை அளிக்கினும், தன் மதமே மதமென்று ஏனையோர் மதத்தைத் தூற்றித்திரியும் மதகர்வமுற்றோர்களிடத்தில் பிரதம உத்தியோகங்களை அளிக்கினும், மிக்க திரவியமிருந்தும் மற்றவர்களுக்கு உபகாரமற்றவனாகவும், தன்மானம் போனாலும் போகட்டும் பிறர்மானம் போனாலும் போகட்டும் பணங்கிடைத்தால் போதுமென்னும் பேராசையுள்ள லோபிகளிடத்தில் பிரதம, உத்தியாகங்களை அளிக்கினும், குடும்ப அந்தஸ்துகளிலும், சீவனங்களிலும், ஒழுக்கங்களிலும் மிகத் தாழ்ச்சியிலிருந்து கல்விகற்றுக் கொண்டவர்கள் வசம் பிரதம உத்தியோகங்களை அளிக்கினும் தங்களது பிறவிகுணமாம் நீச்சசெயலும், பேராசையும் மாறாது தங்கள் சாதி தங்கள் மதத்தோருக்கு மட்டிலும் உபகாரியாக இருந்து ஏனைய மதத்தோர்களுக்கு இடுக்கண்களை உண்டாக்கி தங்களுக்கு மேலதிகாரிகளாயுள்ளவர்களுக்கும் அஞ்சாது பணம் சம்பாதிக்க ஆரம்பித்துக்கொள்ளுவார்கள்.

- 3:11: ஆகஸ்டு 25, 1909 -

எக்காலும் தானமைச்சு நடாத்தும் தேசத்தின்மீதும் விழித்த நோக்கமுற்றிருத்தல், குடிகளில் அவரவர்கள் குணாகுணங்களை அறியத் தக்கவைகளை கற்றல், இடைவிடா நீதி நூலாராய்ச்சியில் நிற்றல், விதிவிலக்குகளை நோக்கி கூட்டவேண்டியவைகளைக் கூட்டி, குறைக்க வேண்டியவைகளைக் குறைத்தல், குடிகளுக்குள்ள முயற்சியையும், அவர்கள் தொழில் விருத்திகளையும் நோக்குதல் ஆகிய தனது ஜாக்கிறதையில் இருக்க வேண்டுமேயன்றி மற்றவர்கள் வார்த்தைகளை மெய்யென்று நம்பி மோசம் போகலாகாது.

குடிகள் சீர்திருத்தத்திற்காக முன்பு ஆலோசித்துள்ள காரணங்களுக்கு சிலது கூடியும் கூடாததுமாக நிற்கும் அவற்றை தேறவிசாரித்து கூடியவற்றைக் கூட்டியும் கூடாதனவற்றை அகற்றியும் எண்ணிய காரியத்தை முடித்தல் வேண்டும்.

அரசனுக்கு அத்தியந்த அமைச்சனாய் அருகிருப்போன் தனது அறிவுக்கு எட்டாமலோ, கெடு எண்ணத்தினாலோ அரசுக்குங் குடிகளுக்குமுள்ள அன்பை மாற்றிவிடுவானாயின் அன்றே தனதரசுக்கு விரோதமாய் ஆயிரங்கோடி படைகளை அமைத்துவிட்டதொக்கும்.

ஒருவர் சொல்லும் வழிகளைக் கேளாமலும் அதனந்தரார்த்தங்களைத் தானும் ஆராய்ந்து செய்யாமலும், நம்மெய்விட வேறு விவேகிகளில்லையென்று இருமாப்புற்று அமைச்சுக்குக்கேடாம் அமையா நிலைகளை உண்டு செய்வானாயின் உடனே அவ்வமைச்சனை அரசனகற்றி விவேகமும் பெருந்தண்மெயுமிகுத்த வேறமைச்சை நியமித்தல் வேண்டும்.