பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புரை / xxix

என்ற பழந்தமிழர் கொள்கை ஒன்றை நமக்கு எடுத்துக் கூறுகிறார். சிறந்த மக்களிலிருந்தே நல்லறிஞர்களும், விவேகிகளும், வீரர்களும், அரசர், ஆளுவோர்களும் வருவார்கள், வரவேண்டும் என்று கூறுகிறார்.

அறிவாளிகள் தங்கள் அறிவால் மக்களையும் நாட்டையும் வழிநடத்த வேண்டும். ஆட்சியிலுள்ளோர் ஆளுமையில் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வணிகர் பொருள் பரிமாற்றங்களால் பயனடையும் பண்பைக் கடைப்பிடிக்க வேண்டும், வேளாளர் பூமியின் தரத்திற்கேற்றவாரும், காலத்திற்கேற்றவாரும் உற்பத்தியைப் பெருக்க நோக்கமாக இருக்க வேண்டும். நிலம் பண்பட்டிருந்தால்தான் பயிர்பயனையளிக்கத் தக்கதாக வளரும் என்பதைப் போல் மக்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களில் முன்வருவோர்களின் நோக்கும் போக்கும் நல்லதாக அமையும் என்று கூறவந்த அயோத்திதாசர்:

“அந்தணருக்கு ஞானத்தில் நோக்கமும், அரசனுக்கு ஆளுகையில் நோக்கமும், வாணிபர்களுக்கு பொருளில் நோக்கமும், வேளாளருக்கு பூமியில் நோக்கமும்...” (தமிழன் -15.7.1908) இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். விவசாயிகள் அறிவாளிகளாகவும், கல்வியாளர் வணிகர்களாகவும், அரசர்கள் கவிஞர்களாகவும் புரவலர்களாகவும் இவ்வாறு எல்லோரும் எல்லா துறைகளிலும் சிறந்து வாழ்ந்தது தமிழர் கண்டபெருவாழ்வாகும்.

வீட்டையும் நாட்டையும் தேடிச்சென்று பிச்சையேந்திய பாணரும் பாடினியரும் பெரும் புலமை பெற்று அரசர்களுக்கும் மக்களுக்கும் அறிவுரை வழங்கியதை நமது வரலாறு பேசும். எனவே மக்கள் சிறந்தவர்களாக இருந்தால் அவர்களின் நோக்கும் போக்கும் தூய்மையானதாக இருக்கும், நாடும் பயன்படும் என்று அயோத்திதாசர் எண்ணினார்.

சாதி - சமூகங்கள்

1885 வாக்கில் விக்டர் ஹியூம் அவர்களால் தோற்றுவித்து தரப்பட்ட தேசிய காங்கிரஸ் இயக்கம் பிரிட்டனோடு ஒத்துப் போவதிலிருந்து மெல்ல மெல்ல இந்திய மயமாக்குதல் கொள்கைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது சுதேசி சீர்திருத்தத்தைப் பற்றிய கருத்தைப் பொது மக்களிடம் வைத்தது, இந்த இயக்கம் படித்த மேல் சாதியினரின் ஆதிக்கத்திற்குள் இருந்ததால் இந்திய சமுதாய கீழ்த் தட்டில் உள்ள சமுதாயங்களின் பிரச்சினைகளில் தலையிடுவது எங்கள் நோக்கமல்ல என்று வெளிப்படையாகவே அறிவித்தது. இதனால் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இப்பேரியக்கம் கூறிய சுதேச சீர்திருத்தத்தை நம்ப மறுத்தார்கள். அயோத்திதாசர் கூறினார்:

“சுதேச சீர்திருத்தமென வெளி வந்திருக்கும் இந்துக்கள் ஜாதி பேதத்தை நீக்கிவிட்டு ஒற்றுமையாக வேண்டும் என வீண் புரளி செய்கிறார்களே ஒழிய நிச்சயமாக ஜாதி பேதத்தை நீக்க பிரயத்தனப்படுபவர்களாக இல்லை. அவர்கள் முக்கியமாக ஜாதிபேதம் விட்டுவிடவேண்டும் எனபிரசிங்கிப்பதெல்லாம் பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களாகிய நாலு வர்ணத்தார்கள் மாத்திரம் சேர்ந்து கொள்ளவேதான்.

மற்ற தாழ்ந்தவர்கள் என சொல்வோர்களிடம் சமயத்திற்கு மட்டுமே சேர்ந்து போரில் வெற்றி பெற்று சுய ஆதீனம் பெற வேண்டும், பிறகு முன்போல தாழ்ந்தவர்களாக அந்த நாலு வர்ணத்துடன் சேர முடியாது என்பது எல்லா சுதேச சீர்திருத்தக்காரர்களுடைய கொள்கைகளேயாம் (தமிழன் - 27.5.1908) என்று வெளிப்படையாகக் கூறினார்.

மனிதாபிமானமே இல்லாத மேல் சாதியினர் எந்தச் சாயலிலும் சீர்திருத்தத்தை விரும்பமாட்டார்கள் என்று அவர் எண்ணினார். அந்த நான்கு உயர்த்தப்பட்ட இனத்தினரும் தாழ்த்தப்பட்டு ஐந்தாவதாக உள்ள இனத்தினரைச் சமமாக நடத்தமாட்டார்கள் என்பதை அவர் கூட்டிக்காட்டினார். இதற்கு ஒரு செய்தியையும் ஆதாரமாகக் கூறினார்: