பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242 / அயோத்திதாசர் சிந்தனைகள்


சாரயத்திற்கோ இன்னும் வரியை அதிகம் உயர்த்த வேண்டுகிறோம். ஏனென்பார்களாயின் மனிதர்களாகப் பிறந்தும் மிருகத்திற்குங் கேடாகச் செய்துவிடுவது சாராரமேயாம். சுயபுத்தியைக் கெடுத்து அதன் மயக்கத்தால் வண்டியிலிருந்தேனும். குதிரையிலிருந்தேனும் விழுந்து மடியச்செய்வது சாராயமேயாம். பிரபுவாயிருந்து சகல ஏழைகளுக்கும் அன்னமளித்துவந்தவன் குடிக்கக் கஞ்சற்று குண்டியில் கட்டதுணியற்று ஏழைகளையண்டி இரக்கச்செய்வது சாராயமேயாம். இத்தகைய லாகிரி வஸ்துவிற்கு வரியை அதிகப்படுத்துவதுடன் அதிக வெறியால் வீதிகளில் உழுதும் உதாசின வார்த்தைகளைப் பேசியுந் திரிவோரை, ஈஸ்ட் இந்திய கம்பெனி அதிகார காலத்தில் பன்னிரண்டாறென்னும் ஒன்றரை டெஜன் அடி அடித்தும் சீர்திருத்தி வந்த சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்தாலும் சுகமே.

புகையிலைக்கும் வரியை இன்னும் அதிகப்படுத்த வேண்டுகிறோம். ஏனென்பார்களாயின் சிறு வயதிலேயே மக்களின் மார்பு வரண்டு உதிரங் கக்கச்செய்வது புகையிலையேயாம். பத்துப் பன்னிரண்டு வயதுடைய சிறுவர்களை யெல்லாம் பெற்றோர்களிடங் காசு திருடச்செய்து பொடியும் சுருட்டும் சிகரேட்டும் வாங்கிப் பிடிக்கச்செய்து நெஞ்சு வரண்டும் பீநசம் தோன்றியும் மதிமயக்கி மடியச்செய்வது புகையிலையேயாம். ஆதலின் புகையிலையின் வரியையும் அதிகப்படுத்துவதுடன் பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பீடி, சிகரேட்டு, பொடி முதலிய வஸ்துக்களை உபயோகிப்பார்களாயின் அதையும் தடுக்கத்தக்க சட்டங்களை ஏற்படுத்த வேண்டுமென்று கோறுகிறோம்.

- 3:40: மார்ச் 18, 1910 -


121. பூர்வக் குடிகளுக்கு பூமி கிடைக்காமல் செய்கின்றார்களாம்

வந்தேறியக் குடிகள் தங்கள் சுயப்பிரயோசனங்களுக்காய் ஏற்படுத்திய அண்டை பாத்தியமென்னும் சட்டமே பூமிகளின் விருத்தியைக் கெடுத்து வருவதுடன் பூர்வக்குடிகளின் விருத்தியையும் கெடுத்துவருகின்றது. இத்தகைய அண்டை பாத்தியத்தாலுண்டாகும் அதிகாரமும் அதன் செல்வாக்கும் பெருகியும் நிலைத்தும் வருமாயின் ஓர்கால் சுதேசிய சொந்த பாத்தியங்கொண்டு இராஜாங்கத்தோரை எதிர்ப்பதுடன் ஏழைப் பூர்வக் குடிகளையும் நாசஞ்செய்துவிடுவார்கள். ஆதலின் நமது கருணைதங்கிய இராஜாங்கத்தார் அண்டை பாத்தியாயம் அண்டை பாத்தியமென உள்ளவனுக்கே பூமிகளைக் கொடுத்து பாழ்படுத்துவதினும் அண்டை பாத்தியமென்னும் சட்டத்தை எடுத்துவிட்டு விழலாயுள்ள பூமிகளை சகலயேழைகளும் உழுது பயிர் செய்து சீவிக்கும்படி செய்வார்களென நம்புகிறோம்.

ஆரடாவிட்டது மானியமென்றால் நான்தான் விட்டுக்கொண்டேன் என்னும் பழமொழிக்கிணங்க, கனந்தங்கிய மகமதியர் அரசாங்க காலத்தில் தங்கடங்கள் சாதியதிகாரப் பெருக்கங்களினால் மனங்கொண்ட பூமிகளை வளைத்து உபயோகப்படுத்திக் கொண்டார்களன்றி சுதேச அரச சுதந்திரம் கிடையாது. மகமதிய வரசாங்காலத்தில் பூமிகளை சேகரித்துக் கொண்டார்களென்பதற்கு தற்காலம் அவர்கள் வைத்துள்ள மிராசிதாரர், ஜமீன்தார், அவுல்தார், சுபேதார், செருஸ்தாதாரென்னும் பெயர்களே போதும் சாட்சியாம். இவ்வகையாக அவர்களனுபவித்து வரும் பூமிகளை சுகமாக அனுபவித்துக் கொண்டபோதிலும் அப்பூமிகளுக்கு அருகே விழலாயுள்ள பூமிகளையேனும் மற்றவர்களை யநுபவிக்கவிடாது தங்களும் அநுபவிக்காது அண்டை பாத்திய வரப்பிட்டுக் கெடுப்பதில் யார் சுகம் பெறுவர்.

இவ்வண்டை பாத்திய சட்டத்தால் எதிரிகளையும் பிழைக்கவிடாது தாங்களும் அப்பூமிகளை அநுபவிக்காது பாழாக்கி வருகின்றார்கள். அத்தகையப் பாழடைந்த பூமிகளைப் பயிரேறச் செய்யவும், எழிய நிலையிலுள்ளக் குடிகளை ஈடேறச்செய்யவும் கருணைதங்கிய மிஷநெரி துரைமக்கள் வேண்டிய முயற்சி எடுத்து கானல் மழையென்றும், பனி