பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புரை / xxxiii


“கேயர் ஆர்டி என்ற எம்.பி. 7. 11. 1907-ந் தேதி தஞ்சாவூருக்குப் போகும் வழியிலுள்ள ஓர் ஸ்டேஷனில், பெருங்கூட்டமாக ஏழைப் பறையர்களையும் பள்ளர்களையும் நிறுத்தி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கவர்ன்மெண்டார் அதிகவரியைப்போட்டுவாதிக்கிறார்கள் என்று கூச்சலிடும்படி செய்தார்களாம்... ஓர் சாதியார் உழைப்பதற்குத்தான் ஆளாகி இருக்கிறார்களோ, உழைப்பதுடன் அவர்களை முன்தள்ளி மற்றோர் பிழைப்பதற்கும் ஆளாகி இருக்கிறார்கள். ஏழைகளை முன்தள்ளி தங்கள் பெயரையும் தங்களையும் அரசாங்கத்திற்குக் காட்டிக் கொள்ளாமல் சமய யுத்தம் செய்திருக்கிறார்கள்...” (தமிழன் - 20.11.1907)

இவ்வாறு கோழைத்தனமாக ஆங்கில ஆட்சியை எதிர்க்கத் துணிவில்லாதவர்கள் எளிய மக்களைத் தங்களுக்குச் சாதகமாகக் கூச்சல் போட்டு போராட வைத்து ஆங்கிலேயர்களின் பகைவர்களாக ஆக்கிவிட்டார்கள். ஆங்கிலேயரிடமும் அவர்கள் உதவி பெற்று பொது ஊழியம் செய்யும் மிஷனரிமார்களிடம் சந்தேகப்பட வைத்து சிற்சில சலுகைகளையும் உதவிகளையும் பெற்று வந்ததையும் இதனால் பெறாமல் செய்துவிட்டார்கள்.

ஆனாலும், நம்பிக்கையை இழக்காத அயோத்திதாசர் காலம் கனியும், குருடாக்கப்பட்டோர் விழித்துக் கொள்ளத்தான் போகிறார்கள். அப்போது கொடுமை செய்தவர்களை அவர்கள் பழிவாங்க மாட்டார்கள். செய்த பாவத்திற்கு அவர்களை அவர்களே அழித்துக் கொள்வார்கள் என்று கனத்த மனத்தோடு கூறுகிறார்:

“தாழ்த்தப்பட்ட பூர்வகுடி மக்கள் ஓர்கால் உயர்த்தப்படுவார்கள் என்பது சத்தியம். அவ்வாறு உயர்த்தப்படுங்கால் தங்களைக் காலமெல்லாம் தாழ்த்தி நிலைகுலையச் செய்தவர்களை அவர்கள் தாழ்த்தி துன்பம் செய்யாவிடினும் அவர்கள் செய்து வந்த தீவினைகள் சுட்டு பாழாக்கிவிடும்” (தமிழன் - 18.3.1908) என்று சலிப்புடன் கூறும் அயோத்திதாசர் எந்தவித வன்முறை கருத்துகளாலும் மக்களின் உணர்வுகளைத் தூண்டவில்லை என்பது சிந்திக்கத்தக்கது. அவரவர் செய்த நல்வினைகளும் தீவினைகளுமே அவர்களை வழி நடத்தும் என்று சொல்கிறார். இருப்பினும் தாழ்த்தப்பட்ட தீண்டாத மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஏமாந்துவிடக்கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.

“சுயப்பிரயோசன சுதேசிகள் தோன்றி ஆங்கிலேயர் அரண்மனை உத்தியோகங்களை விட்டு விடுங்கள் என்றும் பூமியை உழுது பயிரிடுங்கள் என்றும் உங்களுக்கு போதித்து வருவதாக அறிகிறோம். அவர்களுடைய போதனைகளை நம்பி மோசம் போகாதீர்கள். இத்தகைய சத்துருக்களுடைய கொடுமைகளுக்குப் பயந்து நெட்டாலுக்குப் போய் ஜீவிப்பவர்களுக்கும் ஜீவனம் கெட்டிருக்கிறது...

சுதேசி என்னும் சுயநலக்காரர்களின் வார்த்தைகளை மெய்யென்று நம்பி மோசம் போவீர்களானால் உங்களுக்கு போதித்துக்கொண்டே தொழுக்கட்டை சட்டத்தை கடைப்பிடிப்பார்கள். துரைகள் வீட்டு உத்தியோகங்களை விட்டு நீங்கி பூமி வேலைக்குப் போய் பழய சத்துருக்களிடம் தொங்குவீர்களானால் கோலும் குடுவையும் கொடுப்பதுடன் கழுமரங்களை நாட்டி வழுவிய வஞ்சங்களையெல்லாம் தீர்த்துக்கொள்வார்கள்.

...சுத்த ஜலம் மொண்டு குடிக்க விடாத படுபாவிகளின் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீர்கள். உங்கள் சத்துருக்கள் செய்த தீங்குகளை மறந்துவிடாதீர்கள், என்றும் மறவாதீர்கள், (தமிழன் - 20.5.1908) என்று ஆங்கிலேயர் வீடுகள், தொழிலகங்கள், பண்ணைகள் போன்ற இடங்களில் வேலை செய்யும் ஆதிதிராவிடர்களை எச்சரிக்கிறார்.

நல்ல அரசு அமையாததற்குக் காரணம் கல்வி, அறிவு, அருள், ஒழுக்கம், ஒற்றுமை இல்லாத மக்களே என்று அயோத்திதாசர் கருதுகிறார். கல்வியை முதலில் கூறி கல்வியால் அறிவும், அறிவால் அருளும், இவைகளால் பெற்ற