பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சுகங்கிடையாதபோது அதற்கு அன்னியப்பட்டவர்களுக்கு அங்கு சுகங்கிடையாதென்பது துணிபு.

தன்னைச் சுகம்பெறவேண்டுமென்று கருதுகிறவன் முதலாவது அன்னியர் சுகத்தைக் கருதவேண்டும். தான் அன்னியரால் உபகாரம் பெறவேண்டுமென்று கருதுகிறவன் தன்னால் அன்னியருக்கு உபகாரஞ் செய்தல் வேண்டும். “அன்னியர் பிள்ளையை வூட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” எனும் பழமொழிக்கிணங்க தேசத்து ஏழைகளை சீர்திருத்தி முன்னேறச்செய்வதே கோவில் தன்மகர்த்தாக்களின் அழகாகும். அங்ஙனம் ஏழைகளின் சீர்திருத்தங்களை நோக்காது கோவிலுக்கென்றுவரும் பணங்களை, வடை, தோசை, பாயாசத்திற்குச் சண்டையிடவும் நெய்ப்பொங்கல், சர்க்கரைப் பொங்கலுக்குச் சண்டையிவும், ததியோதனம், புளியோரைக்குச் சண்டையிடவும் விட்டு அவர்களுக்கு வேண்டிய வரையில் வேளை வேளைக்குப் புசிக்கக் கொடுத்து முழுச் சோம்பேறிகளாகத் திரியவைப்பது கோவில் தன்மகர்த்தாக்களின் அழகாகாவாம். எப்போது கோவில் தன்மகர்த்தாக்களென்று ஏற்பட்டார்களோ, அவர்களது கோவிலும் பொதுவாயிருத்தல் வேண்டும். அவர்களது தன்மமும் பொதுவாயிருத்தல் வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கிட்டுள்ள தன்மகர்த்தாவென்னும் பெயரும் பொருந்தும். தருமத்திற்குக் கர்த்தாவென்று ஏற்படுத்தப்பட்டவர்கள் அக்கோவில் சொத்தை வீண் சோம்பேரிகளுக்குச் செலவிட்டு மேலுமேலும் சோம்பேரிகளைப் பரவச் செய்யவிடாமல் கோவில் சொத்துக்களைக்கொண்டு தேசத்து சிறுவர்களைக் கல்வியிலும் கைத்தொழிலிலும் விருத்திச்செய்ய வேண்டுகிறோம். டிப்பிரஸ் கிளாசை சீர்படுத்தப் போகிறோமென்னும் கூட்டத்தார் வருமானமுள்ள கோவில்களையே கல்விசாலைக் கைத்தொழிற்சாலைகளாக வகுத்து முக்கோவிலுக்கு வரும் பணங்களைக்கொண்டே சகல சிறுவர்களுக்கும் பேதமின்றி கற்பித்து சீர்பெறச் செய்வார்களாயின் வெளிபணங்களைத் தருவித்து ஏழைகளை சீர்திருத்துவதினும் கோவில் பணங்களைக்கொண்டே குடிகளை விருத்தி செய்யக்கூடும். இதுவே டிப்பிரஸ்கிளாசை சீர்திருத்தும் யதார்த்த வழியுமாகும்.

- 4:18; அக்டோபர் 12, 1910 -


160. வில்லேஜ் மாஜிஸ்டிரேட்டுகள்

தற்காலம் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோரால் கிராமங்கள் தோரும் ஒவ்வோர் மாஜிஸ்டிரேட்டுகளை நியமித்து காரியாதிகளை நடத்தலாமோவென்று யோசிப்பதாக விளங்குகின்றது.

இத்தகைய யோசனை வட இந்தியாவில் நடத்துவதாயின் நீதியாக நடைபெறும். அதாவது, அவ்விடத்தில் சாதிபேத அதிகரிப்பில்லாத படியினாலேயாம். இத்தென்னிந்தியாவிலோ நாளுக்குநாள் சாதிகள் அதிகரித்து சாதிபேதமில்லாதோரைப் பல்வகையாலும் இம்சித்துவருகின்றார்கள். அவ்வகை இம்சைபுரிவோர் கையில் கிராமங்கள் தோரும் மாஜிஸ்டிரேட் அதிகாரங்களையுங் கொடுத்து அவர்கள் தெண்டிக்குத் தீர்ப்புக்கு அபீலுமில்லையென்று கூறுவதாயின், அதற்காலம் ஒவ்வோர் கிராமங்களிலுந் தப்பித்தவறி வாசஞ்செய்துள்ள சாதிபேதமற்ற ஏழைக்குடிகள் முற்றும் ஒழிந்துபோவதற்கு யாதொரு தடையுமிராது. காரணம், சாதிபேதமில்லார்மீது சாதிபேதமுள்ளவர்களுக்குள்ள பூர்வ விரோதமேயாம்.

பூர்வ விரோதத்தால் நசிந்து பாழடைந்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கருணா நோக்கத்தாலும் நீதியின் பரிபாலனத்தினாலும் சற்றுதலையெடுத்து சிற்சிலர் சொற்ப பூமிகளும் பெற்று உழுது பயிரிட்டு சீவித்துவருகின்றார்கள். இத்தகைய காலத்தில் இவ்வகையான அதிகாரம் கிராமங்களில் ஏற்படுமாயின் கிஞ்சித்து தலையெடுத்துவரும் சாதிபேதமற்றக் குடிகள் யாவரும் ஒழிந்து போகவேண்டியதேயாகும். கிஞ்சித்திய பிரிட்டிஷ் ஆட்சியரின் கண்ணோக்கமும் அவர்களது மேல்விசாரணையுமிருக்கும்போதே கிராமத்தைவிட்டுக்