பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296 / அயோத்திதாசர் சிந்தனைகள்


பூர்வம் இவ்விந்திரதேச முழுவதும் ஆண்டுவந்த அரசர்களும் விவேக மிகுத்தக் குடிகளும் புத்த சங்கத்தோர்களும் அன்பில் மிகுத்தவர்களாய் அநுதாபமுற்று இவர்கள் மித்துரு அவர்கள் சத்துருவென்றாராயாது ஆட்சி செலுத்தியதினால் வஞ்சகர்களின் கூற்று மேற்கொண்டு பெளத்த அரசர்களும், பெளத்த சங்கங்களும் பாழடைந்ததன்றி வஞ்சகர்களை எதிர்த்து நின்ற விவேகக் குடிகள் யாவரும் சண்டாளரென்றும், தீயரென்றும், பறையரென்றும் தாழ்த்தப்பட்டு நசிந்தவர்கள் நீங்கலாக மற்று மிகுந்த அறுபதுலட்சபேர் அல்லலடைந்து அவமதிப்பின் வாழ்க்கையிலிருக்கின்றார்கள்.

இத்தகைய அவமதிப்பின் வாழ்க்கைக்குக் காரணம், வஞ்சகர்களாகிய சத்துருக்களை ஆதியிற் கண்டித்துத் துரத்தாது அன்பையும் அநுதாபத்தையுங் காட்டிவிட்டு அவர்களது வஞ்சகக் கூற்றைக் கண்டபின்னர் தண்டிக்க முயன்றதால் சத்துருக்கள் உறம் மேற்கொண்டு பௌத்தர்களாகிய மேன்மக்கள் கீழ்மக்களென நிலைகுலைந்து விட்டார்கள். ஆதலின் நமது புதிய கவர்னர் ஜெனரலாக வரும் லார்ட் ஆர்டிஞ்சு பிரபு அவர்கள் இந்திரதேசம் வந்தவுடன் இத்தேசப்பூர்வக் குடிகள் யார், நூதனக்குடிகள் யார், இத்தேச விருத்தி யாவரால் சீர்பெற்றிருந்தது, யாவரால் சீர்கேடடைந்தது, தேசத்தின் பொது சுகத்தைக் கருதுகிறவர்கள் யார், பிரிட்டிஷ் ஆட்சியில் விசுவாசம் வைத்து பொதுவாய வாழ்க்கையிலிருப்பவர்கள் யார், பிரிட்டிஷ் ஆட்சியில் மிக்க விசுவாசமும், அன்புமுள்ளவர்கள் போல் அபிநயித்தும் இராஜாங்கத்திற்கு மிக்க உழைப்பாளிகள் போல் காட்டியும் துரைமக்களிடம் மிக்க விசுவாசிகளென நடித்தும் எப்போது துரைமக்கள் தொலைவார்கள், அவர்களைத் தொலைத்துவிட்டு தங்கள் மக்களுடன் சுகிக்கலாமென்று எண்ணியிருப்பவர்கள் யாவரெனக் கண்டுணர்ந்து தனது அன்பையும், அநுதாபத்தையும் காட்டுவரேல் மிக்க மேலாயதாகும்.

அங்ஙனமின்றி தான் பிறந்து வளர்ந்த ஐரோப்பா கண்டத்தில் சாதிபேதமென்னும் பொய்க் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தித் தங்களை உயர்த்திக்கொண்டிருப்பவர்களும், சமயமென்னும் பொய்க்கட்டுக்கதைகளை ஏற்படுத்திக்கொண்டு அதனாற்சோம்பேறி சீவனஞ் செய்வோர்களும், இல்லாத சுத்ததேசத்தினின்று வருவோருக்கு இயல்பிலேயே சகல மக்களிடத்து அன்பும் அனுதாபமும் பொருந்தியே நிற்கும் என்பது திண்ணம் அத்தகைய அன்பையும் அனுதாபத்தையும் வகித்து சகல மக்களும் சுகம் பெற வேண்டுமென்னும் எண்ணமுடையவர்கள் பெரும்பாலும் இத்தேசத்தில் இல்லாதபடியால் அன்பையும் அநுதாபத்தையும் நிதானித்தே நடத்தல் வேண்டும். காரணமோவென்னில், இத்தேசத்திற்குடியேறியுள்ள மநுமக்களிற் சிலர் தங்களுடைய விரோதச் சிந்தையால் சில மநுமக்களை மிருகங்களினுங் கேவலமாக நடாத்திப் பாழ்படுத்தவேண்டுமென்னும் எண்ணங் கொண்டிருக்கின்றார்கள். அத்தகையோர் மீது அன்பும் அநுதாபமும் வைத்து அதிகார உத்தியோகங்களைக் கொடுத்துவிடுவதாயின் தங்களது மித்திரபேதங்களுக்குச் சத்துருக்களாயிருந்த மநுமக்களை முன்பு பாழ்படுத்தி விட்டு பின்பு தங்கள் சுய காரியங்களைப் பார்த்துக் கொள்ளுவார்கள். அதாவது, ஆதியில் இத்தேசத்தில் வந்து தோன்றிய துரை மக்கள் வஞ்சகர்கள் நெஞ்சங்களை ஆராய்ச்சி செய்யாது தங்களைப்போல் வஞ்சமற்றவர்களென்று எண்ணி சிற்சில அதிகாரங்களைக் கொடுத்து விட்டதின் பேரில் தங்களை உயர்ந்த சாதியென்று ஏற்படுத்திக்கொண்ட தங்களது மித்திரபேதச் செயல்களுக்குச் சத்துருக்களாயிருந்தவர்கள் யாவரையும் தாழ்ந்த சாதியாக வகுத்து நசித்துவந்தார்கள். உத்தியோக அதிகாரத்தால் மேலும் மேலும் நசிப்பதற்கு கிராமங்களில் உயர்ந்த சாதியோன் குற்றஞ்செய்வானாயின் அவனை சுகமாக சத்திரத்தில் அடைத்து வைக்க வேண்டுமென்றும், தாழ்ந்த சாதியான் குற்றஞ் செய்வானாயின் அவனைத் தொழுவில் மாட்டி வெய்யிலில் இருத்திவிட