பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புரை / XXXV

ஆதாரமாயினும்.....” என்று சிறிதும் அருவெறுப்பின்றி எழுதி மக்களை ஏற்கச் செய்வது அறிவுடைமை ஆகுமா என்கிறார், படைத்தலும் காத்தலும் அழித்தலுமான தொழிலை எவ்வெப்போது எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை அறியாதவர்களாக, மக்களுக்குப் பயன்படாதவர்களாக இருக்கும் கடவுளர்களைப்பற்றி சொல்ல வந்தவர்:

“படைத்தலுக்கு ஒருவன், காப்பதற்கு ஒருவன், அழித்தலுக்கு ஒருவன் என மூவரை சிருஷ்டித்துக் கொண்டு, அதனால் உண்டாகும் கேடுகள் இன்னவை என்றும், நற்கர்மங்கள் யீதென்றும், அதனாலுண்டாகும் சுகங்கள் இன்னவை என்றும் விளங்குமோ. படைப்பவன் பாம்பையும் தேளையும் சிருஷ்டித்து மக்களையும் சிருஷ்டித்து அவனைக் கொட்டவும் கடிக்கவும் விடுவது படைப்போன் திருவிளையாட்டோ... அழித்தலுக்கு என்றே ஒருவன் எனில் காணும் பொருட்களில் அழியாதது ஏதேனும் உண்டோ. காப்பவன் ஒருவன் உண்டு எனில் ஊருக்குள்ள மக்களை உவாந்தி பெருகி மடியும் போதும் பிளேக் நோய் கண்டு மடியும் போதும் வெள்ளம் பெருகி மடியும் போதும் காக்காதவர் மற்றும் எக்காலத்தில் காப்பர்”. (தமிழன்- 2.10.1912)

என்று அயோத்திதாசர் கேட்பது படைத்தவன் அல்லது கடவுள் என்ற தத்துவத்தின் ஆணிவேரை அசைப்பதாகவே இருக்கிறது. எந்தக் கருத்தும் அது கதையாக இருந்தாலும் தத்துவமாக இருந்தாலும் மக்களுக்குப் பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும். எளிதில் புரிந்து கொண்டு பின்பற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் எண்ணுகிறார். எழுதுவது, பேசுவது, செயல்படுவது ஏதாக இருந்தாலும் அவை மறவழிக்கின்றி அற வழிக்கு அழைத்துச் செல்லுவதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இராமாயணம், பாரதம் போன்ற கதைகளும் அவற்றின் தத்துவங்களும்கூட படிப்போர்க்கும் கேட்போர்க்கும் நீதி மார்க்கத்தை போதிக்கவில்லை என்று கூறுகிறார்.

“இராமயணக் கதை.... கடவுள் இராமனாகப் பிறந்து தம் மனைவியுடன் சுகித்திருக்குங்கால் பத்து தலையும் இருபது கையுமுடைய ஓர் இராட்சதன் சமுத்திரங்கடந்து எடுத்துப் போய்விட்டான் என்றும் அவனை கொல்லுவதற்காக அந்த தேசத்திற்கு சென்று அவனையும் அவன் குடும்பத்தாரையும் அவன் தேசத்தோர் அனைவரையும் கொன்று இராமன் தன் மனைவியை அழைத்துக் கொண்டுவந்துவிட்டார் என்பதாம். இத்தகைய கதையை சிறுவர்கள் வாசித்து வருவார்களாயின் அவர்களுக்கு நீதிமார்க்கம் நிலைக்குமா?

“பாரதக் கதை சுருக்கம் என்னவெனில் பங்காளிகள் பூமி வழக்கேயாம். ஒரு சகோதரருக்குக்கொடுக்க வேண்டிய பாகத்தை மற்றொரு சகோதரன் கொடுக்காத தடையால் அனைவரையும் அவனைச் சார்ந்த குடும்பத்தோர்களையும் மற்ற தேசத்து அரசர்களையும் வஞ்சினம் சூது மித்திர பேதம் மாயாவாதம் முதலியவைகளால் கொன்றார்கள் என்பதேயாம். இதை வாசிக்கும் சிறுவர்கள்...” (தமிழன்-26.3.1973)

எத்தகைய மனப்பான்மையுடன் வளர்வார்கள் என்று அயோத்திதாசர் கேட்கிறார். இளமையில் தூய்மையான ஒழுக்கத்தையும், அற நெறியையும், வன்முறையற்ற பண்பாட்டையும் சிறுவர்கள் எவ்வாறு இக்கதைகளால் பெறமுடியும் என்பது அவரது கவலையாகத் தோன்றுகிறது. எக்காலத்திலும் எவ்வகையிலும் வன்செய்கை, கொடுமை, கொல்லும் தன்மை மக்களிடையே வளரக் கூடாது என்று அவர் எண்ணுகிறார். எனவே அவர் கொடுமை, கொலைபுரிவது கடவுளாக இருந்தாலும் அவர்களை வணங்காதிருப்பது நல்லது என்று கூறுகிறார்.

“கோடி கோடியாக மக்களைக் கூட்டி கொல்ல வைத்து தானும் கொன்ற கொலைப்பாதக சாமியைக் கும்பிடுவதிலும் கொலைப் பாதகம் மேற் கொள்ளாதீர்கள் என்று கூறிய மனிதனைக் கும்பிடுவது மேலன்றோ. வீடு வீடாக திருடி தின்னும் சுவாமிகளைக் கும்பிடுவதினும் திருட வேண்டாம் என்று கூறிய மனிதரைக் கும்பிடுவது மேலன்றோ.