பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இஸ்னானஞ் செய்வதுபோல பறையனைக் கண்டாலும் தொட்டாலும் இஸ்னானஞ் செய்யவேண்டுமென்றும் மநுசாஸ்திரம் எழுதிவைத்துக் கொண்டிருப்பவர் களுமாகிய இந்துக்களென்பவர்கள் பறையர்களையும் இந்துக்களாகவே பாவித்துவந்தோம், இந்துக்களாகவே சமரசப் படுத்த முயன்று வருகின்றோம். இத்தருணத்தில் சென்ஸஸ் கமிஷனர் எங்களை வேறாகப் பிரித்துவிடப் பார்க்கின்றார்களென்று வீணே பிதற்றி பத்திரிகைகளில் வரைந்து வருகின்றார்கள்.

இவ்வகையாக சாதிபேதமற்ற எழியவகுப்போரை இந்துக்களுடன் சமரசப்படுத்துவது எதார்த்தமாயின் கனந்தங்கிய ஸ்ரீநிவாச ராகவையங்கார் கொடுத்துள்ள நாற்பதுவருஷ ரிப்போர்ட்டு புத்தகத்தில் பறையர்களென்போர் இந்துக்கள் என்போருடன் சமரசமாக இருக்குமளவும் முன்னுக்கு வரமாட்டார்கள். ஒன்று துலுக்கராகப் போய்விடவேண்டியது அல்லது கிறீஸ்தவர்களாக மாறிவிடவேண்டியதென்றும் எழுதுவரோ. இந்துக்களென்போர் பறையர்களென்று அழைக்கப்படுவோர்களை பலவகையாலுந் துன்பப்படுத்திவருஞ் செயல்களையும் துன்பப்படுகின்றவற்றையுங் கண்டதினாலன்றோ இந்துக்களிலேயே ஒருவர் வரையவும் அது ரிப்போர்ட்டு புத்தகத்தில் நாளதுவரையில் பதிந்திருக்கவுமாயிற்று. நந்தன் பறையனாயினும் அவனை இந்துக்கள் தெய்வமாகத் தொழுது வருகின்றார்களென்று எழுதிவருகின்றார்கள். இந்துக்கள் சுவாமி நந்தனை நெருப்பிலிட்டுச்சுட்டு தன்னிடம் சேர்த்துக்கொண்டபடியால் இந்துக்கள் அவனை தெய்வமாகச் சேர்த்துக் கொண்டார்கள். மற்றும் நெருப்பிலிட்டுச்சுடப்படாத ஆறுகோடி மக்களை இந்துக்கள் பெரியசாமி அருகில் சேர்ப்பரோ. சுவாமியே அருகில் சேர்க்கப்படாதவர்களும் சுவாமியின் கோவிலுக்குள் நுழையப்படாதவர்களுமாகிய ஏழை மக்களை இந்துக்களென்போர் தொழுவார்களோ, அருகிலுஞ் சேர்ப்பர்களோ, இல்லை. இவைகளெல்லாம் சமயயுக்த்தக் கெடுமொழிகளே யாகும். காலமெல்லாங் கெடுத்துக் கடைத்தேறவிடாமற் செய்துவந்தவர்கள் தற்காலமும் இராஜாங்கத்தோர் நல்லெண்ணத்தையும் அவர்களது நன்னோக்கத்தையுங் கெடுத்து ஏழைகளைப் பழயநிலையில் விடுத்துக் கெடுக்கப் பார்க்கின்றார்கள்.

இத்தகைய காலத்தில் சாதிபேதமற்ற திராவிடர்கள் அவர்களது சாதிமதத்தேவதைகளைப் பின்பற்றுவதும் அவர்கள் பொறாமெய்க் கொண்டு வைத்துள்ள சாதிப் பெயரைத் தரித்துக்கொள்ளுவதுமாகிய இந்துக்களது சேர்க்கையை விட்டகன்று, ஒன்று, மகமதியர்களாயினும் மற்றொன்று புரோட்டிஸ்டான்ட் கிறீஸ்தவர்களாயினும், இன்னொன்று பூர்வத்தில் பௌத்தர்களாக இருந்து சத்துருக்களின் வஞ்சகத்தால் பறையர்களென்று அழைக்கப்பெற்று நிலைகுலைந்துள்ளபடியால் கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியில் உள்ள ஏழைகள் யாவரும் பௌத்தர்களாகவாயினும் மாறிவிடுவதே சிறப்பைத்தரும். ஏழைமக்கள் யாவரும் இத்தகைய மாறுதலடையாது தேறுதலடையும் வழியின்மெயால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவும், காலம் வரும்போதே சீலம் பெறவும் ஆயுத்தமுறுவது விவேகிகளின் கடனாதலின் இக்குடிமதிப்புக் காலத்தையே குலசிறப்பின் காலமெனக்கருதிசீலம் பெற்று இராஜாங்கத்தோர் நன்னோக்கத்திற்கு இசைந்து நன்மார்க்கமும், நற்சீரும் அடையவேண்டுகிறோம்.

- 4:25; நவம்பர் 30, 1910 -


173. இந்துக்களினது மதம் சாதிக்கு சம்மந்த மில்லையாமே

ஈதோர் சமயப்புறட்டுபோலும். இந்துக்களது பிரம்மாவே சாதிகளை உண்டுசெய்துள்ளாரென்று மநுசாஸ்திரத்தில் எழுதிவைத்துக்கொண்டுள்ளது போதாது, கிருஷ்ணனும், சங்கராச்சாரியும், சாதியிருத்தல் வேண்டுமென்று அதற்காய சாதனங்களை வரைந்துமிருக்க, இந்துக்களது மதம் சாதிசம்மந்தத்திற்குட்படாததென்று சில பத்திரிகைகள் கொக்கரிப்பது தங்கள்