பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வேண்டும் தாங்கள் பருத்தி நூல்போட்டுக்கொள்ள வேண்டுமென்பதோர் வித்தை, ஆற்றிலிரங்கி அரைமணி நேரம் மந்திரம் பண்ணுவதோர்வித்தை, சூத்திரனுக்கு வேதம் போதிக்கப்படாதென்பதோர் வித்தை, சூத்திரனைக் கண்டால் சோறு தின்னலாகாதென்பதோர் வித்தை, பறையனைக் கண்டால் மட்டிலும் பரிதாபமில்லாமற் கொல்லாமற் கொல்ல வேண்டுமென்பதோர் வித்தை, அமாவாசியிற் பணம் வாங்குவதோர் வித்தை, ஆவணியவிட்டத்தில் பணம் வாங்குவதோர் வித்தை, கல்லுசாமிக்கும் மண்ணுசாமிக்கும் சத்துண்டாக்குவதோர் வித்தை, நோவாது நோன்புபணம் வாங்குவதோர் வித்தை, பிறவிபோக்குங் கருமாதி பணம் வாங்குவதோர் வித்தை இத்தியாதி வித்தைகளின் பலனை எப்போதறிவதென்னில் செத்தப்பின் சிவனிடத்திலும், மரித்தப்பின் மகாவிஷ்ணுவினிடத்திலும் அடைவதே அதன் பலனாகும். இதுவரையிலும் அவனவன் ஏதுகேடுகெட்டு சீரழிந்தாலும் விசாரங் கிடையாத இவர்களது வித்தைகளுக்கும் அவர்களது வித்தைகளுக்கும் ஏறுக்குமாறாய் இருக்கின்றபடியால் இவர்களும் ஆரியவர்த்தனத்தார் அவர்களும் ஆரியவர்த்தனத்தாரென்பது சுத்த பிசகேயாகும். ஆதலின் ஐரோப்பியரும் இந்துக்களென்போரும் ஒருக்காலும் ஒத்து வாழ்கமாட்டார்களென்பது திண்ணம். அதற்குப் பகரமாக சென்னையில் டிராம்பே கம்பனியேற்பட்டபோது ஐரோப்பியருடன் சேர்ந்த இந்துக்கள் தற்காலம் அவர்களுடன் சேர்ந்து உழைக்கின்றார்களா இல்லையாவென்பதே ஒத்துவாழார்களென்பதற்கு உற்ற சான்றாகும்.

- 4:44; ஏப்ரல் 12, 1911 -


202. ஜெயிலென்னும் சிறைச்சாலையும் கைதிகளின் பெருக்கமும்

இவ்விந்திய தேசத்தில் கைதிகளின் பெருக்கத்திற்குக் காரணம் யாதெனில், யாதாமொரு தொழிலுமற்ற சோம்பலும், வீணர்களின் விருத்திகளேயாம். அதாவது பூமிகளை உழுது பயிர்செய்யுந் தொழில் விட்டு கைத்தொழில் செய்யுங் கஷ்டமுமற்று வண்டிகளிழுத்தேனும் சம்பாதிக்கும் வருத்தங்களையும் விட்டு தந்தனப்பாட்டு பாடிக்கொண்டும், விந்தனவீணை யடித்துக்கொண்டும் வீணர்களாத் திரிவோர்களுக்கு அரிசிதுட்டு கிடைக்காவிடில் அண்டை வீட்டான் சொத்தைத்திருடி அதனால் சீவிக்க முயல்வதும், எந்த கைம்பெண் சொத்துடையவளாயிருக்கின்றாள், எந்த கனவான் பிள்ளை இளிச்சவாயனாயிருக்கின்றானென்று அவர்களை வஞ்சித்தும், மித்திரபேதங்கள் செய்தும் சீவிக்க முயல்வதும், ஜட்கா வண்டி பேட்டைகளெங்கிருக்கின்றது, சூதாடிகளின் கூட்டங்களெங்கிருக்கின்றதெனத் தேடி அவ்விடஞ்சென்று உழ்க்கார்ந்து இச்சகம் பேசியும், ஏமாளிகளை ஏய்த்தும் சீவிக்க முயல்வதும், தெண்டசோறு போடுவதற்கு ஆளிருந்து விட்டால் எதேஷ்டமாகத் தின்று கொழுத்து அவனை யடிக்கலாமா, இவனை அடிக்கலாமா என்னும் அகங்காரத்தினால் கால்நீட்டி. சண்டையிழுத்துக் கலகத்தைப் பெருக்கிக் கள்ளுக்கடைகளையே கருத்தாக நாடி சீவிப்பதுமாகிய சோம்பேறிகளின் கூட்டம் அதிகரித்து ஜெயில்களின் கைதிகளின் கூட்டம் பெருகிவருகின்றது. இத்தகைய சோம்பேறிகள் அந்தக்கிராமத்தில் இன்னின்ன விடங்களில் வசித்திருக்கின்றார்களெனக் கண்டறிந்து அவர்களுக்குத் தக்கத் தொழில்களைக்கொடுத்து நீதிநெறியில் நடக்கும் வழிகளைக் காட்டுவதாயின் சோம்பேறிகள் குறைந்து ஜெயில் கைதிகளின் பெருக்கங்களுமற்றுப்போம். அங்ஙனம் ஊரிலுள்ளவர்களின் தொழிலையும் அவர்களது சோம்பலையுங் கண்டுணராது ஜெயிலிலுள்ளக் கைதிகளுக்குத் தொழில் கற்பித்து சீர்படுத்துவதுடன் அவர்கள் ஜெயிலைவிட்டு நீங்கி வீடு செல்லும்போது கொஞ்சம் பணவுதவிசெய்தால் மறுபடியுந் திருடி, ஜெயிலுக்கு வரமாட்டார்களென்று சிலர் அபிப்பிராயப்படுவதுமுண்டு. அத்தகைய உத்தேசம் சிலருக்கு சுகத்தை விளைவிக்கினும் “தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் விடாது" என்னும் பழமொழிக்கிணங்க வீடுகளில் திருடுவதும் ஜெயிலுக்குப் போவதுமாகியத் தொழிலைப் பெரும்பாலும் விடமாட்டார்கள்.