பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350 / அயோத்திதாசர் சிந்தனைகள்


ஆதலின் தற்காலமுள்ள முனிஷிப் கோர்ட்டுகளும், தாசில்தார் கோர்ட்டுகளும் மாஜிஸ்டிரேட்டின் அதிகாரத்தை வேறாகப் பிரித்தது முதல் யாதாமொரு பயமுமின்றி குடிகள் யாவரும் சுகவாழ்க்கையில் இருக்கின்றார்கள். அதே நடையில் கிராமதிகாரங்களை நடாத்திவருவதாயின் கிராமக்குடிகள் யாவரும் களங்கமற்ற சுகவாழ்க்கை பெறுவதுடன் உத்தியோகஸ்தர்களும் பயந்து தங்கள் காரியாதிகளை செவ்வனே நடாத்தி இராஜ விசுவாசத்தில் நிலைபெற்று குடிகளுடன் ஆனந்த வாழ்க்கையிலிருப்பார்கள்.

அங்ஙனமிராது நடந்துவரும் கிராமதிகார செயல்களை மாற்றி பஞ்சாயத்தார் கையில் விடுவதாயின் அதையே ஓர் இராஜவதிகாரம் என்றெண்ணி மேலும் மேலும் இராஜவதிகாரத்தை விரும்பி குடிகளுக்கும் தற்கால உத்தியோகஸ்தர்களுக்கும் உள்ள இராஜவிசுவாசங்களை கலைத்து குடிகளைப் பாழ்படுத்தி தேசத்தையும் சீர்கெடச் செய்துவிடுவார்கள். இவைகளை கருணை தங்கிய ராஜாங்கத்தார் கண்ணோக்கம் வைத்து சாதிபேதம் நிறைந்துள்ளவிடங்களில் பஞ்சாயத்தின் நியமனம் கொடாது உள்ள நிலையில் விடுவார்களென்று நம்புகிறோம்.

- 4:52; மே 24, 1911 -


214. சுதேசியும் பரதேசியும் வினாவிடை

ப. ஐயா கதேசியாரே சுகந்தானோ.

சு. ஆ! ஆ! என்ன சுகங்காணும் சகல சுகங்களையும் அன்னியதேசத்தார் அநுபவித்துக்கொண்டு போகின்றார்கள் நமக்கு சுகமேது.

ப. அன்னியதேசத்தார் தங்கள் தேகத்தை வருத்தியும், கஷ்டத்தை அநுபவித்தும், அறிவை விருத்திசெய்தும், பொருளை சம்பாதித்து தாங்கள் சுகமனுபவிப்பதுடன் தங்களை அடுத்தவர்களையும் நல்ல சுகத்தில் விட்டிருக்கின்றார்கள். நீங்கள் கஷ்டமின்றி சுகங் கேட்டால் வருமோ.

சு. நாங்கள் மிக்க கஷ்டப்பட்டு படிக்கவில்லையே.

ப. கஷ்டப்பட்டு படிப்பதிலும் இருவகைப் படிப்புண்டு. அதாவது, கண்டுபடிக்கும் படிப்பொன்று, தெண்ட படிப்பொன்று. இவற்றுள் கலை நூற்களைக் கற்று கைத்தொழிலில் விருத்திப்பெற்று உலகோபகாரமாக விளங்கும் படிப்பு கண்டுபடிக்கும் படிப்பாம். ஒருவர் கொடுக்கும் பாடங்களை உருபோட்டு ஒப்படைத்துவிட்டு சுயப்பிரயோசனத்தை நாடி தங்கள் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றிக்கொள்ளுவதற்கும் சக்த்தியற்றலைவது தெண்டபடிப்பென்றும் கூறப்படும். இத்தகைய தெண்டப்படிப்பை நீர் படித்துவிட்டு நாங்கள் கஷ்டப்பட்டுப் படிக்கவில்லையோவென்றால் யாது பயன்,

சு. பரதேசியாரே, பயனில்லாமல்தான் படித்துக்கொண்டோமோ.

ப. அவற்றை சுதேசியாரே சிந்திக்கவேண்டியதுதான். அவை யாதெனில், தாங் கண்டு படிக்குங் கலைநூலையுங் கைத்தொழிலையுங் கற்றிருப்பீராயின் சகல சுகங்களையும் அன்னிய தேசத்தோரனுபவித்துப்போகின்றார்களென்னும் பொறாமெ மொழி கூறமாட்டீர். தெண்டப்படிப்பாதலின் மற்றவர்கள் சுகத்தைக் கண்டு சகியாது வீண்மொழி கூறிவிட்டீர்.

சு. பரதேசியாரே, கடைசியில் எந்தப் படிப்பிலும் சுகத்தைக் காணோமென்றே எமக்கு விளங்குகின்றது.

ப. சுதேசியாரே, சொந்தப்படிப்பே உங்களுக்குள் இராமல் பாழ்படுத்திக்கொண்டவர்களுக்கு எந்தப்படிப்பில்தான் சுகமுண்டாகும். இதுகாரும் பிரிட்டிஷ் ஆளுகை இவ்விடம் வந்து தோன்றாமலிருக்குமாயின் பூர்வக் கல்வியும் பாழடைந்து, கைத்தொழிலும் பாழடைந்து, மக்களும் பாழடைந்து, மாடமாளிகைகளும் பாழடைந்து, தேசமும் பாழடைந்து போயிருக்கும் என்பது தற்கால சுதேசிகளின் செயலால் சொல்லாமல் விளங்குமே.

சு. ஏதுகாணும் பரதேசியாரே தற்கால சுதேசிகள்வேறு முற்கால சுதேசிகள்வேறோ.