பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 351


ப. இந்திரர் தேசத்தில் முற்காலம் இருந்ததோர் சாதிபேதம் மதபேதமற்ற பெளத்த சுதேசிகள். தற்காலமுள்ளவர்களோ, சாதிபேதமும் வேண்டும் மதபேதமும் வேண்டுமென்னும் பொருளற்ற இந்து சுதேசிகளேயாவர்.

சு. பரதேசியாரே பொருளற்ற இந்து சுதேசியார் என்றாலென்னை. அவற்றை விளக்க மாட்டீரோ.

ப. ஆ! ஆ! உள்ளபடி விளக்குவாம். அதாவது புத்தரென்னும் ஒருவர் தோன்றியிருந்தார் அவரது சீர்திருத்தத்தைப்பின்பற்றியவர்கள் பௌத்தர்கள் என்றழைக்கப் பெற்றார்கள். கிறீஸ்தவரென்னும் ஒருவர் தோன்றியிருந்தார் அவரது சீர்திருத்தத்தைப் பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்க ளென் றழைக்கப்பெற்றார்கள். மகம்மது வென்னும் ஒருவர் தோன்றியிருந்தார் அவரது சீர் திருத்தத்தைப் பின்பற்றியவர்கள் மகம்மதியரென்று அழைக்கப்பெற்றார்கள். ஆனால் இந்து வென்னும் ஒருவருமில்லை, பெயருமில்லை, செயலுமில்லை, சீர்திருத்தங்களும் இல்லாததால் யாதொரு பொருளுமற்ற இந்து சுதேசியரென்று கூறினோம்.

சு. பரதேசியாரே, பொருளற்ற இந்து சுதேசிகளால் இத்தேசத்தோருக்குக் கல்விவிருத்தி இல்லையென்று கூறுவீரோ.

ப. சுதேசியாரே, பொருளற்ற இந்துக்களுக்கு பெயரற்ற கலாசாலைகள்தான் இருந்திருக்கவேண்டுமன்றி பௌத்தர்களாலழைக்கப் பெற்றப் பள்ளிக் கூடங்கள் அறப்பள்ளிகளென்னும் பெயரும் கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரால் வகுத்துள்ள இஸ்கூல்கள், காலேஜுகள் என்னும் பெயர்களைப்போல நிலையானப் பெயர்கள் ஒன்றுங் கிடையாததினால் இந்துக்களென்போர் கல்விசாலைகள் வைத்து சகலருக்கும் கல்விவிருத்தி செய்து வைத்தார்களென்று கனவிலும் நம்புவதற்கிடமில்லை. கல்வியைக் கற்கவிடாது கெடுத்ததற்கு சாட்சிகள் மட்டும் அனந்தமுண்டு.

சு. பரதேசியாரே, ஆனால் இப்போது வகுத்துள்ளக் கலாசாலைகள் யாவும் பிரிட்டிஷ் ஆட்சியின் நிலையோ.

- 4:42; மார்ச் 29, 1911 -

ப. சுதேசியாரே இஸ்கூலென்றும், காலேஜென்றும் வழங்கும்படியானக் கூடங்களில் வாசிக்கின்றீர்களன்றி வேறில்லாததால் இந்தியக் குடிகள் கற்றுத்தெளிவது பிரிட்டிஷ் ஆட்சியாலமைந்துள்ளக் கலாசாலைகளென்றே கூறல்வேண்டும்.

சு. பரதேசியாரே, அங்ஙனமாயின் தற்கால சுதேசிகளால் இந்தியக் குடிகளுக்கு யாதொரு சுகமுமில்லையென்று கூறுவீரோ.

ப. சுதேசியாரே, அவற்றைத் தங்களனுபவத்தால் தாங்களே தெரிந்துக் கொள்ளலாம். அதாவது இதுகாரும் இத்தேசத்தை பிரிட்டிஷ் ஆட்சியார் வந்து கைப்பற்றாவிடின் உங்களுக்குள் நீங்களே ஏற்படுத்திக்கொண்டுள்ள சாதிப்பிரிவினைகளினாலும், மதப் பிரிவினைகளினாலும் மநுக்களின் ஒற்றுமெய்க் கெட்டு சீரழிந்து சிந்தைநைந்து பாழடைவதுடன் தேச சீர்திருத்த ஆட்சியின்றி வீதிகளின் வசதி, நீர்வசதி, நிலவசதியற்று முற்றுங் கேடடைந்திருக்குமென்பதைத் தாங்களே தெரிந்துக்கொள்ளலாமே.

சு. பரதேசியாரே, வீதிகளின் வசதியென்பதென்னை.

ப. சுதேசியாரே, இப்போது நாம் வாசஞ்செய்யும் வீதிகளை ஒருநாள் இரண்டு நாள் சுத்திகரிக்காமல் விட்டுவிடுவோமாயின் வீதிகளில் குப்பை அடர்ந்து பாழ்பட்டிருப்பது பிரத்தியட்சமாகும். இவ்வகை ஒரு கிராமத்தை விட்டு மறு கிராமங்களுக்குப் போகும் வழியில்லாமலேயிருக்குமாயின் வண்டிகளுக்கும், மாடுகளுக்கும், மக்களுக்கும் என்ன சுகமிருக்கும் என்பதைத் தாங்களே தெரிந்துக்கொள்ளவேண்டியது தான்.

சு. பரதேசியாரே, பிரிட்டிஷ் ஆட்சியார் இவ்விடம் வருவதற்கு முன்பு வீதி வசதி கிடையாவோ.

ப. சுதேசியாரே, அதிக தூரதேசம் போகவேண்டியதில்லை. சென்னைக்கும் செங்கற்பட்டிற்கும் போக்குவருத்துப் பாதைகளில்லாமல் தானியங்